திருவனந்தபுரம்: மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடைசாத்தப்பட்டது.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியாது. அதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அங்கு தொடந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினார்கள்.
அவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் ஐயப்பன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். பின்னர் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதற்கிடையே கேரள அரசு இந்த மண்டல பூஜை காலத்தில் இதுவரை 51 பெண்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடைசாத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமான சில பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை முறைப்படி சாத்தப்பட்டது.
மீண்டும் மாத பூஜைக்காக வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.