கோதாவரி, காவிரி நதிகளை இணைப்பதற்கு ரூ.60,000 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை மத்திய அமைச்சரவையில் சமர்பிக்க தயாராக உள்ளது என மத்திய நீர் வள மற்றும் நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக நிர்வாகிகளிடம் பேசுகையில்,
"கோதாவரி நதியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை பெண்ணாறு நதியுடனும், தமிழகத்தில் உள்ள காவிரி நதியுடனும் இணைக்கவுள்ளோம்.
1,100 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாய் கலக்கிறது. அதேசமயம், தமிழகம் கர்நாடகம் இடையே 45 டிஎம்சி தண்ணீருக்கு பிரச்னை உள்ளது.
இந்த திட்டம், கால்வாய்கள் மூலம் இல்லாமல் எஃகு குழாய்கள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் வாழும் ஆந்திர பொறியாளர் ஒருவர் தான் இந்த தொழில்நுட்பத்தை பரிந்துரைத்தார்.
இந்த திட்டம், கர்நாடகம், தமிழ்நாடு ,தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 4 தென் மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காணும்.
மோடி அரசு நீர்பாசனத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தின் வாழ்வாதாரமான போலாவரம் நீர்பாசனத் திட்டத்துக்கு நிதி திரட்டப்பட்டுவருகிறது. அதற்காக 62 சதவீதம் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசு நூறு சதவீதம் நிதியுதவி அளிக்கிறது. ஆனால், மாநில அரசு அதற்கான மதிப்பை அளிப்பதில்லை. மத்திய அரசை மாநில அரசு விமரிசிக்கிறது. அதற்கான காரணம் எனக்கு புரியவில்லை.
முன்னதாக கூட்டணியில் இருந்தவர்கள் மோடியை குறித்தும், மத்திய அரசை குறித்தும் எதிர்மறையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்" என்றார்.