கடந்த ஆண்டில் அதிக அளவிலான பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டு 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள், 21 நாளில் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது கணக்குத் தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிமாற்றம் மேற்கொண்டு, இதுவரை 2018-19-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை மூலம் எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் அனுப்பப்படும். அதில் 21 நாள்களில் அவர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் (1961) படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோர் ஆன்லைன் மூலம் விளக்கம் அளிக்கலாம். அது ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இருந்தால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் அளவுக்கு பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு, இதுவரை கணக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை வருமான வரித் துறை தெரிவிக்கவில்லை.