இந்தியாவில் 41,331 பாகிஸ்தானியர்களும், 4,193 ஆப்கானிஸ்தானியர்களும் வசிக்கின்றனர் என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அந்த நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினராவர்.
இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் குறித்த கேள்விக்கு மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள 6 சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அவர்களில் இந்தியா வருபவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நமது நாட்டில் நுழைவு இசைவு (விசா) வழங்கப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்த விசா பெறுவதற்கு இணையவழியிலும் விண்ணப்பிக்க வசதியுள்ளது.
கடந்த 2018 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பாகிஸ்தானைச் சேர்ந்த 41,331 பேரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4,193 பேரும் இந்த நீண்ட கால விசா பெற்று இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்றார்.