இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 9 மாதங்களில் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் 9 மாதங்களில் தீர்ப்பை வழங்க சிபிஐ சிறப்பு நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்து 26 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்தது. இந்த வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன், தன்னுடைய பணிக்காலம் முடிவுக்கு வர இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாகக் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.

சிறப்பு நீதிபதியின் கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை இன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் சிபிஐ சிறப்பு நீதிபதி முடிக்க வேண்டும். அதற்கடுத்த 3 மாதத்துக்குள் வழக்கின் தீர்ப்பை அவர் வழங்க வேண்டும். இதற்கேற்ற வகையில் சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டித்து, உத்தரப் பிரதேச அரசு 4 வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். 

இதற்காக, அலாகாபாத் உயர்நீதிமன்றத்திடம் மாநில அரசு ஆலோசனை செய்துகொள்ளலாம். சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலர் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். 

பாபர் மசூதி இடிப்பு வழக்கை முழுமையாக விசாரித்து தீர்ப்பளிக்கும் நோக்கில் மட்டுமே சிபிஐ சிறப்பு நீதிபதிக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. பணிநீட்டிப்புக் காலத்தில், அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அவர் செயல்படுவார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT