லக்னௌ: நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் சோனியா காந்தி தவிர ராகுல்காந்தி உள்பட மற்ற அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தன்னுடைய தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
தோல்விக்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அந்த மாநில தேர்தல் பொறுப்பாளர்களான பிரியங்கா காந்தி, ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி திங்களன்று கூண்டோடு கலைக்கப்பட்டது. முன்னதாக இதேபோன்று கர்நாடகாவிலும் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக உத்தரபிரதேச கிழக்கு பகுதிக்கு அஜய் குமார் லாலுவும், மேற்கு பகுதிக்கு ஜோதிராதித்யா சிந்தியாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.