புதுதில்லி: பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள விமானி அபிநந்தன் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அத்துமீறி இந்திய வான் வெளிக்குள் பிரவேசித்த பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று தாக்கும் போது, இந்திய விமானி அபிநந்தன் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாராசூட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்த அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறை பிடித்தனர். பின்னர் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அவர் வெள்ளி இரவு விடுவிக்கப்பட்டார்.
தில்லி ராணுவ மருத்துவமனையில் இருக்கும் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் அபிநந்தன் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அபிநந்தன் நாடு திரும்பிய தருணத்தில் இருந்து அவர் பெயரில் சமூக வலைதளமான ட்விட்டரில் பல்வேறு கணக்குகள் துவங்கப்பட்டு, அவற்றின் மூலம் பல கருத்துக்கள் பகிரப்பட்ட வந்த து.
தற்போது மத்திய அரசானது அபிநந்தன் பெயரில் ட்விட்டரில் உள்ள கணக்குகள் அனைத்தும் போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நிறுவனமும் அத்தகைய கணக்குகளை முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.