புது தில்லி: காற்று மாசுபாட்டை அளவிடும் கருவிகளில் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பயம் உத்தரவிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களில் மாசுபாட்டை அளவிடும் கருவிகளில் மோசடி செய்து சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கார்களை தயாரித்து விற்பனை செய்தார்கள் என்று அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனம் ரூ.171.34 கோடி அபராதத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அதனை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செலுத்தாமல் இருந்தது.
இது தொடர்பாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான புகாருக்கு உள்ளான கார்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.
மேலும், பசுமைத் தீப்பாயத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளோம். என்னினும் தற்போது ரூ.171.34 கோடி அபராதத்தை செலுத்தவோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காற்று மாசுபாட்டை அளவிடும் கருவிகளில் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பயம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தின் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தொகையை இரு மாதங்களுக்குள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராதமான ரூ.171.34 கோடியை தீர்ப்பாயம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.