ஐதராபாத்: எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக, நடிகையும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான விஜயசாந்தி பேசியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சம்ஷாபாத்தில் சனிக்கிழமையன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் பிரபல நடிகையுமான விஜயசாந்தி பேசியதாவது:
வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இடையே நடைபெறும் யுத்தம் ஆகும். ஜனநாயகம் வாழ்வதற்காக ராகுல் காந்தி போராடுகிறார். சர்வாதிகாரி போல மோடி ஆட்சி செய்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, புல்வாமா தாக்குதல் என மோடி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்.
எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மோடி ஒரு பயங்கரவாதி போல தோற்றமளிக்கிறார். தனது மக்களை நேசிப்பதற்கு பதிலாக, அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார். இது ஒரு பிரதமருக்கான பண்பு இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
விஜயசாந்தியின் இந்த கருத்துக்கள் தற்போது சமூகவலைதளங்களில் பரவலான விவாதப் பொருளாக மாறியுள்ளது.