நாட்டுக்கு சௌக்கிதார் தேவையில்லை, நியாயமான பிரதமர் தான் வேண்டும் என்று ஏஐஎம்எம் கட்சித் தலைவர் அஸாசுதின் ஓவைஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் தான் பதான்கோட், உரி, புல்வாமா தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே நீங்கள் எதுமாதிரியான சௌக்கிதார் (பாதுகாவலன்) என்று தெரியவில்லை. நாட்டுக்கு நியாயமான தலைவர் தான் தற்போதைக்கு தேவை. நீங்கள் உண்மையிலேயே சௌக்கிதார் என்றால் எதற்காக அசீமாநந்தாவைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.
நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற உடன் நாடாளுமன்றத்தில் பேசிய போது, இவர் 25 முதல் 30 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்-இல் செயல்பட்டவர் என்பதை தெரிந்துகொண்டேன். ஏனென்றால் இவர்கள் எல்லாம் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் என்பது நன்றாக தெரியும்.
ஆனால், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் ஆர்எஸ்எஸ் கனவு ஒருபோதும் பலிக்காது. ஏனென்றால் ஹைதராபாத்தில் அது ஒருபோதும் நிறைவேறாது. ஹிந்துத்துவத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது ஹைதராபாத் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.