லோக்பால் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு

ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலின் முதல் தலைவராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் சனிக்கிழமை பதவியேற்றார்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை  லோக்பால் தலைவர் பினாகி சந்திரகோஷுக்கு  பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை லோக்பால் தலைவர் பினாகி சந்திரகோஷுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலின் முதல் தலைவராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் சனிக்கிழமை பதவியேற்றார்.
உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல், லஞ்சம் உள்ளிட்ட புகார்களை விசாரித்து தண்டிக்கும் வகையில், மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் 2013-இல் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான குழுவை ஏற்படுத்துவதில் சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் போது லோக்பால் குழுவை விரைந்து அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து,  அண்மையில் இதற்கான குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார்.
மேலும், நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பிரதீப் குமார் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் நீதித் துறை சார்ந்த உறுப்பினர்களாகவும், சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) துணை ராணுவப் படையின் முன்னாள் தலைமை இயக்குநர் அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின், மகேந்திர சிங், இந்திரஜித் பிரசாத் கௌதம் ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித் துறை சாராத உறுப்பினர்களாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தப் பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, லோக்பால் தலைவர், குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இந்நிலையில், லோக்பால் தலைவராக நியமிக்கப்பட்ட  முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முறைப்படி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதைத் தொடர்ந்து,  அவர்   குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி,  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோரை சந்தித்தார்.
66 வயதாகும் நீதிபதி பினாகி சந்திரகோஷ் உச்சநீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி 2017, மே 27-இல் ஓய்வுபெற்றார். பின்னர், அதே ஆண்டு ஜூனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றார். அதற்கு முன்னதாக   கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,  பின்னர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார்.
லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரை ஆகும். லோக்பால் அமைப்பில் 8 உறுப்பினர்கள் இடம் பெறலாம். அதில், நான்கு பேர் நீதித் துறையைச் சாராதவர்களாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com