9. நிலவும் பேசும்!

சென்ற வாரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எறும்பு கடித்து அழுததும்,
9. நிலவும் பேசும்!

சென்ற வாரத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எறும்பு கடித்து அழுததும், அதன் தாயானவள் ஓடோடி வந்து குழந்தையைத் தூக்கி எறும்பைக் கிள்ளி எரிந்ததும் பார்த்தோம்.

'வினைகளை அறுக்கும் ஆயுதம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது என்றீர்களே, அதற்கும் குழந்தையை எறும்பு கடித்ததற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?’ என்றார் பிரேம்.

'யாருக்கு வினைகள் வருத்துகின்றனவோ அவர்கள் அவ்வருத்தம் தாளாமல் கண்ணீர் விட்டுக் கதறி அழைத்தால் இறைவனும் அந்தத் தாயைப் போல ஓடோடி வந்து அவர்களுக்குக் கை கொடுப்பான்!  குழந்தையின் அழுகுரலைக் கேட்டுப் பசி தீர்க்க ஓடி வந்தவளும் தாயே. அது எறும்புக் கடியால் துன்புற்று அழுத போதும் துடி துடித்து ஓடி வந்து எடுத்தவளும் அந்தத் தாயே.’

'இறைவனோ பக்தன் அழுதால் அந்தத் தாயை விடப் படுவேகமாக ஓடி வந்து மீட்டு எடுப்பான். தாயினும் மேலான தயாபரன் அவன்! அவனிடம்தான் வினைகைளச் சீவும் வல்லமையான ஆயுதம் இருக்கிறது!’

'தொட்டில் குழந்தையைப் போலக் 'கட்டில் குழந்தையும்’ இருக்கிறது தெரியுமா பிரேம்?’

'ஓ.. தொட்டில் கட்ட வசதியில்லாத வீடுகளில்  குழந்தையைக் கட்டிலில் தூங்க வைத்திருப்பார்கள், அதுதானே?’

'அதில்லை. கட்டிலில் உறங்கும் 'வளர்ந்த குழந்தையைப்’ பற்றிச் சொல்கிறேன்.’ 

'வளர்ந்த குழந்தையா? பெரிய மனுஷன்னு சொல்ல வேண்டியதுதானே என்றார் பிரேம்.’

'மனிதன் வளர்கிறான். ஆனால் அப்போதும் கூட அவன் குழந்தையாகத்தானே இருக்கிறான். குழந்தைத்தனம் எல்லா மனிதர்களிடமும் பொதுவில் அமைந்து இருக்கிறது பிரேம். சின்னப்பிள்ளைத் தனமாகச் செய்யக் கூடாததை எல்லாம் செய்துவிட்டுப் பின்னர் செய்வதறியாது அழுகிறான்! அதனால்தான் அவனை 'வளர்ந்த குழந்தை’ என்றேன். கடைசியில் பல் விழுந்து, கூனல் போட்டு, சுருக்கம் விழுந்து கைக் குழந்தையின் நிலைக்கு ஆளாகித்தானே சாகிறான். அதற்கிடைப்பட்ட காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தான், என்னென்ன கற்றுக் கொண்டான் என்பதுதானே முக்கியம். அதுதானே அறியப்பட வேண்டிய விஷயம். ஆராயப்பட வேண்டிய விஷயம்!’

'அவற்றையெல்லாம்  எதற்கு ஆராய வேண்டும்?’

'ஆராய்ந்தால்தானே அவன் தன்னை அறிய முடியும்? மனிதன் தன்னை அறிந்தால்தானே முழு  மனிதன் ஆக முடியும்!’

'முழு மனுஷன் என்றால்?’

'மனப் பக்குவம் பெற்ற மனிதன். நன்மை எது, தீமை எது என்று பகுத்தறிந்து பார்த்து நல்லதை மட்டும்  இறுதி வரைக் கடைப் பிடிப்பவனே மனப்பக்குவம் பெற்ற மனிதன். அவன்தான் முழுமையான மனிதன்’. 

'முழுமை பெற்ற மனுஷன் எதற்குமே அழமாட்டானா?’ என்றார் பிரேம்.

'முழு மனிதன் முதலில் தன் மீதும் பிறர் மீதும் பற்று வைக்கவே மாட்டானே. பிறகு எப்படி அழுவான்? அவன்  தன் குடும்பத்திலேயே யார் இறந்தாலும் அழமாட்டானே. தானே இறக்கப் போவது தெரிந்தாலும் கூட அழ மாட்டான். மரணத்தைக் கண்டு அஞ்சாதவனே முழு மனிதன் பிரேம்’.

'ஆஹா. கேட்கவே  நல்லா இருக்கே! முழுமை பெற்ற மனிதன் என்றால் அவன் ஒரு வகையில் முழு நிலாப் போல இருப்பான் என்று என் கண்களுக்குத் தெரிகிறது’ என்றார் பிரேம்.

அவர் சொன்னதிலும் ஒரு அர்த்தம் உண்டு.

நாங்கள் பேசிக் கொண்டே நடந்து கடற்கரைப் பக்கம் வந்து விட்டோம். அது ஒரு மாலைப் பொழுது என்பதால்  வட்டத் தாமரை போன்ற நிலவு கடல் பரப்பில் தங்கத்தைக் கரைத்துக் கொட்டிக் கொண்டிருந்தது. 

'அதோ அந்த நிலவுக்கும் மேலான 'சுடர் நிலா’ ஒன்று உள்ளது. அதுபோல முழுமை பெற்ற மனிதனுக்கும் மேலான மாமனிதர்கள் உண்டு பிரேம்.’

பிரேம் குழப்பத்தோடு என் முகத்தையும் நிலவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார். 

'என்னாச்சு பிரேம்?’

'நிலவுக்கும் மேலான 'சுடர் நிலவு’ என்றீர்கள், மனிதக்கும் மேலான மாமனிதன் என்கிறீர்கள். என்னதான் சொல்கிறீர்கள்

'நாம் காணும் இந்த நிலவொளி இறக்குமதி செய்யப்பட்ட நிலவொளி, சூரியனிடமிருந்து!’

'சூரியன் மொத்த விற்பனைக் கூடம் போன்றது. இது சில்லறை விற்பனைக் கூடம் போன்றது, புரிகிறதா?’

'சூரியனிடமிருந்து கதிர்களை வாங்கிப் பிரகாசிக்கிறது இந்த நிலவு. 

தன்னை அறிந்த முழு மனிதனும் முழுநிலவைப் போன்றவன்.

இறை நிலையடைந்துவிட்ட மனிதனோ சூரியனைப் போன்றவன். அவனிடமிருந்து எப்போதும் ஒரு ஒளி வட்டம் கசிந்து கொண்டேயிருக்கும். அது போல நாம் ஆகப்போவது எப்போது பிரேம்?'

பிரேம் தனது மூக்குக் கண்ணாடியை எடுத்து கடற்காற்றின் பிசுபிசுப்புக்களைக் கைக்குட்டையால் துடைத்துவிட்டு மீண்டும் அணிந்து கொண்டு, 'நடக்கப் போற காரியத்தைப் பேசுங்கள்’ என்றார்.

'ஏன், இது நடக்காதா? மனிதன் இறை மனிதனாக ஆக முடியாதா? இறை மனிதர்களால்தானே  உலகமே வாழ்ந்து கொண்டிருக்கிறது! நிலவுக்கே ஒளி தரும் சுடர் நிலவு சூரியன். முழு நிலவாகப் பிரகாசிக்கும் மனிதன் இறை நிலை பெற்றால் அவனும் சூரிய தேவன் போலப் பிரகாசிப்பானே! அவனால் மனிதர்களின் துன்பங்கள் விலகும், நோய்கள் குணமாகுமே. சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும் சூரியனைப் போன்றவர்கள். அவர்களிடத்தில் எப்போதும் ஒரு சுடர் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும்.’

'அதிகாலை அடிவானில் சிவப்பு நிலா போலிருக்கும் சூரியனைப் படம் எடுக்கலாம்.  ஆனால் உச்சி வெயில் சூரியனைப் படம் எடுக்க முடியாது. 

இறை நிலை பெற்ற மனிதனும் சூரியனைப் போன்றவன். இறை மனிதர்களுக்குப் பின்னால் ஒளி வட்டம் காணப்படும். அந்த ஒளி வட்டம் பெற்ற மனிதர்களையும் கேமிராவினால்  படம் பிடிக்க முடியாது. 'அருட்பெருஞ் ஜோதி’அடிகள் வள்ளலார் சுவாமிகளையும் படம் எடுக்க முடியவில்லையே!’

குழந்தையாகப் பிறக்கும் மனிதன் வளர்ந்த பிறகு முழு மனிதனாக வேண்டும். அப்படி ஆகி விட்டால்  அதன் பிறகு அவன் இறை மனிதனாக மாற வேண்டும்.

எலிக் குஞ்சு, பூனைக்குட்டி, குரங்குக்குட்டி போலத்தான் மனிதனும் குட்டியாகப் பிறக்கிறான். இந்தக் குட்டிகளில் பேதம் இல்லை. வரிசையாகப் படுக்க வைத்தால் உயிர்ப் பொருள்கள் என்ற வகையில் இவை யாவுமே வேறுபாடின்றிக் கிடக்கும். 

ஆனால் வளர வளர? பூனையும் குரங்கும் தத்தமது தாய்ப் பூனை, தாய்க் குரங்கு போலவே காணப்படும். அதைப் போலவே உண்டு உறங்கி ஓடியாட ஆரம்பிக்கும். 

ஆனால் மனிதனிடம் தன்னறிவு இருக்கிறது. மனம் இருக்கிறது. அவன் வளரும்போது மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறான். மற்ற உயிரினங்களுக்கு அழத் தெரியாது. அதனால் சிரிக்கவும் தெரியாது. மனிதனுக்குத்தான் சிரிப்பும் அழுகையும் தெரியும். 

அவனிடம் அறிவும் மனதும் இருப்பதால் அழுது வடியும் வாழ்க்கையை சிரித்தே செம்மைப்படும்  வாழ்க்கையாக  வேண்டும். அது முடியும்.’ 

'அழுகையை எப்படிச் சிரிப்பாக மாற்ற முடியும்?’ என்றார் பிரேம். 

'அதற்கு அழுகையைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். மனிதன் எதற்காக அழுவான் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றேன்.

'யாராவது செத்துப் போனால் அழுவான்!’

'அது கூட யார் செத்தாலும் அழமாட்டான். பாசத்திற்குரியவர்கள் செத்தால் மட்டும் அழுவான். மொத்தத்தில் மனிதனுக்கு எத்தனை வகையான அழுகைகள் இருக்கின்றன. இது போல உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்.’

பிரேம் கடல் அலைகளைப் பார்த்தபடியே யோசித்தார். 

'எனக்குத் தெரிந்து பிறக்கும்போது முதல் முறையாக அழுகிறான்’ என்று சொல்லிவிட்டு முழு நிலவையே பார்த்தார் பிரேம்.

'சரி, பிறகு?’

'ம்..விழுந்து அடிபட்டு கைகால் வலி தாளாமல், மொத்தத்தில் உடலுக்கு பாதிப்புகள் வரும் போதும் நோய் நொடிகள் வரும் போதும் அழுவான். பிறகு சாகப் போகிற போது, தான் வாழ்ந்த  உலகத்தை, பந்த பாசங்களை விட்டுட்டுப் போகிறோமே என்றுக் கடைசி கடைசியா அழுவான். 'பிறக்கும் போதும் அழுகின்றான்..இறக்கும்போதும் அழுகின்றான்’ என்ற  சந்திரபாவுவின் பாடலை முணுமுணுத்தார் பிரேம்.

'நல்ல பாட்டுத்தான், அப்படி இரண்டு முறை மட்டும் அழுவதில்லை. இடையில் எத்தனையோ காரணங்களுக்காக அழுகிறான். சோகத்தில் அழுவான், ஏமாற்றத்தில் அழுவான், இழப்பில் அழுவான், எதற்கெடுத்தாலும் கூட அழுவான்! அவனது ஒவ்வொரு அழுகைக்கும் ஒரு அந்தரங்கப் பின்னணி உண்டு. அது வெளித் தெரியாது. அவைதான் அவனது முன்வினைகள்.’

'அதற்கெல்லாம் காரணங்களைக் கண்டுபிடிக்க முடியுமா?’ என்றார் பிரேம்.

'ஒரு ஊருக்குள் போகும்போது 'வணக்கம், நகராட்சி எல்லை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர்ப் பலகை இருக்கும். ஊரை விட்டுத் தாண்டிப் போகும் போது 'நகராட்சி எல்லை முடிகிறது. நன்றி வணக்கம்’ என்ற பெயர்ப் பலகை இருக்கும். 

இரவில் பயணிக்கும் போது ஊர்ச் சாலை வெறிச்சோடிக் கிடக்கும். எல்லைகளைத் தாண்டி வேகமாகப் போய்விடலாம்.  பகலில் அவ்வளவு சீக்கிரமாக  ஊருக்குள் போக முடியுமா?’

'என்ன  சொல்கிறீர்கள் ?’என்றார் பிரேம்.

'வினைகள் எத்தனையோ உண்டு. நம்மைப் போகவும் விடாமல் நிற்கவும் விடாமல் வாட்டி வதைக்கும் 'டிராஃபிக்  ஜாம்’கள் போல, 'வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்’ வாட்டி வதைக்கும்  வினைத் துன்பங்கள் ஏராளம்  உண்டு!’

அதைக் கேட்டுப் பெருமூச்சு இரைந்தார் பிரேம்.

'வினைகளுக்கு மனிதன் தப்பிக்க முடியாது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, நகரத்திற்குள் வாகனத்தில் பயணிப்பது’. 

'வேகமாகப் போய் விட வேண்டும் என்று நினைக்கும் போதுதான்  நகரவே முடியாதபடி வாகனங்கள் நெருக்கிக் கொண்டு நிற்கும்! உயிரைக் காப்பாற்றுவதற்காகத்தான்  ஆம்புலன்ஸில்  அனுப்புகிறார்கள்.'

'ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கே வழிவிடுவோர் இல்லையே! வழி விட வழியில்லையே!’

'காரணம் வினைகள் நோயாளியை வருத்தியாக வேண்டுமே. எப்படியாவது கடந்து  சென்றுவிட்டால் ஆம்புலன்சுக்கு பஞ்சர் ஏற்படும், அதுவும் வாகனம்தானே! பஞ்சர் போட்டுக்கொண்டு மீறிச் சென்றால் அதற்கும் விபத்து நேரக்கூடும், அதுவும் வாகனம்தானே! வினைகள் இப்படித்தான் மனிதனைப் பின் தொடரும் பிரேம்.’

அதைக் கேட்டதும் பிரேம் சற்றே பயந்துவிட்டார். 

அவரது முகம் வியர்த்திருந்தது. இயல்பிலேயே இளகிய உள்ளம் கொண்டவர். இரக்கச் சிந்தனை உள்ளவர். அவருக்கு இது போன்ற விதியின் விளையாட்டுக்களைக்  கேட்கும் போது பயமாக இருப்பது உண்மைதான்.

'என்ன யோசனை பிரேம்?’

'வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது!’

'பயப்படாதீர்கள். நிலவைப் பாருங்கள். அதற்கு ஒளி தரும் சூரியனை எண்ணிப் பாருங்கள். மனிதர்களுக்கு வழிகாட்டும் மகான்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் நம் வினைத் துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்க முடியும்!’

'அப்படியா?’ என்று மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நிமிர்ந்து அமர்ந்தார்’பிரேம். 

'ஆம். ஆனால் அவர்கள் நம்மை மீட்பதற்கு நாம்  தகுதியுள்ளவர்களாக இருக்கிறோமா?’

எப்போதும் இல்லாமல் ஒரு பேரலை கரையேறி வந்து எங்கள் கால்களைத் தொட்டுவிட்டு இறங்கியது.  அது ஆமாம் என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் செல்வது போலத் தோன்றியது.

'பிரேம் நம்மைத் தொட்டு விட்டுச் சென்ற அலை அந்த நிலவின் தூதுவன். பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று அந்த  நிலவே அலைகளை நம்மிடம் அனுப்பியிருக்கிறது என்றால் நம்புவீர்களா?’

'நம்ப வேண்டுமா? அது உண்மையா?’

'உண்மை பொய் எல்லாம் தேவையில்லை. நம்பிக்கைதான் நமக்குத் தேவை. நம்பிக்கை இருந்தால் கடவுள் உண்டு. நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே இல்லை பிரேம்!’

ஞானம் பெருகும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com