பிறந்த குழந்தையின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் அதன் மனதிற்குள் அமிழ்ந்துள்ள உணர்வுகளின் வெளிப்பாடு என்று பார்த்தோம்.
குழந்தையின் மனதிற்குள் குழந்தையே அறியாத உணர்வுகள் எங்கிருந்து வந்திருக்க முடியும், எப்படி வந்திருக்க முடியும்? அப்படி என்றால் குழந்தைக்கும் அந்த உணர்வுகளுக்கும் ஏதோ ஒரு ‘தொட்டக்குறை விட்டக்குறை’ இருந்திருக்குமோ?
அது ஒரு மாலைப் பொழுது.
இப்போதெல்லாம் பூங்காக்களிலும், கடற்கரையிலும், ஏன் ரயில் நிலையங்களிலும்கூட நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
அன்று மாலை நானும் ஜல்லிபட்டி நூலகர் லட்சுமணசாமியும் உடுமலை ரயில் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தோம். சில ரயில்கள் மட்டுமே வந்து போவதால் ஊர் மக்கள் நடைமேடைகளை நடைப்பயற்சி மேடைகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த நண்பர் லட்சுமணசாமி பிறந்த குழந்தையின் முகபாவனைகளுக்கு விடை காண முடியுமா என்று கேட்டபடி நடந்தார்.
கேள்வி கிளம்பிவிட்டால் விடையும் வந்தாக வேண்டுமல்லவா? என்று திருப்பிக் கேட்டேன்.
புரியவில்லையே என்றார்.
பதில்களைத்தான் நாம் தினமும் எங்கும் எதிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றையும் பற்றித் தீரச் சிந்தித்தால் கேள்விகளாகிவிடும். எத்தனையோ மரங்களைப் பார்க்கிறோம். இந்த மரங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன என்று சிந்தித்தால் அது கேள்விதானே!
வழியில் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. இந்த மரத்தை ஒரு விடையாகப் பார்த்தால் இதற்குள் ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது இந்த மரம் எங்கிருந்து வந்தது என்றால் வேப்பம் விதையிலிருந்து வந்தது என்று பதில் கிடைக்கும். மரத்தின் கேள்விதான் விதை. மரத்தின் வளர்ச்சிதான் பதில்.
இப்படித்தான் உலகின் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணப் பொருள் இருக்கிறது. அதைத்தான் ‘மறைபொருள்’ என்றார்கள் முன்னோர்கள். ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்தொழிலைப் புரிபவன் இறைவன். அவற்றில் மறைத்தல்தான் மனிதனை மாமனிதனாக மாற்றும் முக்கியமான தொழில்! என்றேன்.
மறைக்கப்படும் பொருள் எப்படி ஒரு மனிதனை மாமனிதனாக மாற்ற முடியும் என்றார் நண்பர்.
மறைபொருள் இல்லாவிட்டால் நாம் மனிதர்களாகவேப் பிறந்திருக்க முடியாதே! நண்பரே, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு படைப்பும் மறைக்கப்பட்டுள்ள மர்மங்கள். நம் பெற்றோர், நம் உடன் பிறந்தோர், நம் வாழ்க்கைத் துணை, நம் பிள்ளைகள், நம் உற்றார் உறவினர்கள் என்று நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு மர்மம்தானே. யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாரால் சொல்லமுடியும்? அதற்கு உதாரணமாகத்தான் பெண்களின் மனத்தைச் சொல்வார்கள். கடலுக்குக் கூட ஆழம் காண முடியும். ஆனால் பெண்ணின் மனத்தை ஆழம் காண முடியாது என்று!
பெண்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் ஆழம் காண முடியாத புதிர்தான். ஒவ்வொரு மனிதனும் தான் எங்கிருந்து வந்தவன், எதற்காக வந்தவன், எங்கே போய்ச் சேரப் போகிறவன் என்ற கேள்விகளை எழுப்ப வேண்டும்; எழுப்பியாக வேண்டும்!
சாதாரண மனிதனை மாமனிதாக மாற்றுவதே இந்தக் கேள்விகள்தான். இவைதான் அவனுக்குரிய மறைத்தல் மர்மத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கின்றன.
அப்போது ரயில் நிலையத்தின் பக்கவாட்டில் ஒரு நாய் மோப்பம் பிடித்தபடியே ஒரு இடத்தை கால்களால் பறித்துக் கொண்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி அந்த இடத்திற்கடியில் ஏதோ ஒரு பொருள் புதைந்து கிடக்கிறது. நாய் மோப்பம் பிடித்துவிட்டது. அதனால் அது தனது கால்களால் பறித்துக் கொண்டிருக்கிறது. நாய்களுக்கு மோப்பச் சக்தி அதிகம். அதனால்தான் கள்வர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் மோப்ப நாய்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றேன்.
ஒரு சந்தேகம் என்றார் லட்சுமணசாமி.
சொல்லுங்கள்.
மோப்பம் பிடித்துக் கொண்டே ஓடும் நாய்கள் குற்றவாளிகளைப் பிடித்ததாகத் தெரியவில்லையே? அவை குற்றவாளிகள் ஓடும் திசைகளைத்தானே காட்டுகின்றன என்றார் நண்பர்.
சரியாகக் கேட்டீர்கள். சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதால் நாய்களால் சரியாகப் பிடிக்க முடியாது. சட்டம் கடுமையாக இருந்தால் குற்றங்களே நடக்காதே. குற்றங்கள் நடக்காவிட்டால் புலன் விசாரணையும் மோப்ப நாய்களுக்கும் எதற்கு? அது நமக்கு இப்போது வேண்டாத பேச்சு. நாம் நம் விஷயத்திற்கு வருவோம்.
ஒவ்வொரு மனிதனும் தன்னை யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். தான் ஒரு பதில். இந்தப் பதிலுக்குள் மறைந்துள்ள கேள்வியை வெளிக் கொணர வேண்டும். அதாவது குமாரசாமி ராமசாமி என்ற உருவம் கொண்ட மனிதன் ஒரு பதில் வடிவம். அந்தப் பதில் வடிவம் யார் என்று அதற்குள்ளாகவே கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனால்தான், தான் யார் என்ற உண்மையான பதில் தெரியவரும்.
இதுதான் பதிலுக்குள் மறைந்துள்ள பதிலா என்றார் நண்பர்.
நம் உடலும் உயிரும் கொண்ட இந்த உருவத்துக்கு ஒரு பெயர் இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரும் தன்னைப் பற்றித் தன் பெயரளவில்தான் அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தப் பெயர் கொண்ட இந்தப் பெயருக்குள் இருப்பது யார் என்று அறிவதில்லை. உடலுக்குத் தூல தேகம் என்று பெயர். உள்ளத்துக்குச் சூக்கும தேகம் என்ற பெயர்.
எலும்பும் சதையுமான இந்த உடல் ஒரு உருவம்.
இதற்குள் இருந்து இதனை இயக்குவது அருவம்.
அந்த அருவப் பொருள் எது என்பதை அறிவதுதான் நம் கடமை.
இதுதான் நாம் அறியப்பட வேண்டிய மர்மம்.
தன்னை யார் என்று அறிந்துவிட்டால் அவன் மாமனிதனாகி விடுவான்.
மாமனிதன் ஆவதே மனிதப் பிறப்பின் நோக்கம்.
அப்படித் தன்னை அறிந்துவிட்டால் அவன் மீண்டும் பிறப்பதில்லை. அறியாதவன்தான் அறியும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து வருகிறான்.
மீண்டும் பிறப்பது உண்மைதானா? என்றார் ஆர்வத்தோடு நண்பர்.
உண்மைதான் என்று நான் சொன்ன போது மணி அடிக்கும் சத்தம் கேட்டது.
மீண்டும் பிறப்பது உண்மை என்பதை மணிச் சத்தம் உறுதி செய்கிறது என்றேன்.
ரயில்வே பணியாளர் வேறு பச்சைக் கொடியோடு வந்து நடைமேடையில் நின்றார்.
பாருங்கள் பச்சைக் கொடிகூடக் காட்டப் போகிறார்!
பழனி எக்ஸ்ப்ரஸ் வந்து நின்றது.
இப்படி உட்காருங்க, பயணிகளை எல்லாம் அனுப்பிச்சிட்டு அப்பறமா நடப்போம் என்றபடி நண்பர் நடைமேடையில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் சுகமாகச் சாய்ந்து கொண்டார்.
ஏன், தெரிஞ்சவங்க யாராவது ரயிலுக்குப் போறாங்களா? என்றபடி நானும் அவருடன் உட்கார்ந்து கொண்டேன்.
ரயில்ல போற எல்லாருமே தெரிஞ்சவங்க மாதிரித்தான் நண்பரே, அவங்களை வழியனுப்பறதே ஒரு சுகம்தானே என்றபடி பயணிகளை ரசித்து ஆரம்பித்தார் லட்சுமணன்.
பயணிகள் முன் பதிவு செய்த பெட்டிகளைத் தேடிக் கொண்டு அங்குமிங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விட வேகமாக முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.
கூண்டை விட்டுத் தப்பிக்க வழிதேடும் எலிகளைப் போல, பிளாட்பாரத்திலிருந்து ரயிலுக்குத் தப்பியோட வழி தேடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
ரயில் சென்னைக்கு நகர்ந்தது.
நண்பர் தொடர்ந்தார்
‘ரோல்ஸ்ராய்ஸ்’, ‘ஜாகுவார்’ என்று என்னன்னமோ விலையுயர்ந்த கார்கள் இருக்குது. ஆனால் ஒரு ரயிலைப் பார்க்கற போது ஏற்படற மகிழ்ச்சி அந்தக் கார்களைப் பார்க்கறப்போ இல்லையே ? என்றார் நண்பர்.
அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆக்கல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என்று ஐந்தொழில்களைப் பற்றிப் பேசினோமல்லவா? அதிலே மறைத்தால்தான் மனிதனைச் சிந்திக்க வைக்கும் தொழில் இல்லையா?
நண்பர் ரயில் சென்ற திசையிலேயே பார்த்துக்கொண்டிருந்தார்.
ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த எக்ஸ் (X) என்ற எழுத்தும் மறைந்துபோனது.
கணக்குப் பாடத்தில் புதிரான எண்ணுக்கு எக்ஸ் (X) என்று ஒரு புனைப் பெயரிடுவார்கள் தெரியுமா என்று கேட்டேன் நண்பரிடம்.
ஆமாம். அந்த (X) எக்ஸுக்கு நாம் விடை கண்டுபிடிக்கவேண்டும்.
இப்போது ரயில் பெட்டியில் உள்ள (X) எக்ஸுக்கு நாம் விடை கண்டுபிடித்தாக வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்களுக்குப் பெட்டிகள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதில் பயணிக்கப் போகிறவர்களோ, எப்போது எல்லாப் பெட்டிகளும் வந்து தொலையுமே ஏறித் தொலைப்போமோ என்ற பதட்டத்தோடு இருப்பார்கள்.
சரியாகச் சொன்னீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றிச் சொல்கிறேன் என்றீர்களே என்றார் நண்பர்.
வரிசையாக வந்து கொண்டிருக்கும் பெட்டிகளை எல்லாம் மீண்டும் மீண்டும் பிறந்து வரும் ஜென்மங்களாக எண்ணிப் பாருங்களேன் என்றபோது நண்பர் வியப்போடு விழிகளை விரித்தார்.
ரயில் பெட்டிகளை வேடிக்கை பார்ப்போரும் வாழ்க்கையை நேசிப்போரும் பிறந்து கொண்டே இருக்கலாம் என்று விரும்புவோர்.
இவர்கள் தன்னை அறியாதவர்கள்தான் பிறவியை நேசிப்பார்கள்.
எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்று விரும்புவோர் மீண்டும் பிறக்க விரும்பாதவர்கள்.
இவர்கள் தன்னை அறிந்தவர்கள், பிறவியை வெறுப்பார்கள்.
ஓஹோ.. இதற்குள் இப்படி ஒரு புதிர் இருக்கிறதா? இதில் நாம் எந்த ரகம்? வேடிக்கை பார்ப்பவரா ? பயணிப்பவரா? என்றார் லட்சுமணசாமி.
ஏறினால்தானே பயணம், இன்றைக்கு வரை நாம் ஒரு பார்வையாளர்கள்தான். வாழ்க்கையை நேசிக்கிறோம்.
ஒருநாள் வரும்!
போதுமடா இந்த வாழ்க்கை என்று புலம்பும் போது எப்போது ரயில் வருமோ ஏறிப் போவோமோ என்று இதே ரயிலடிக்கு வந்துக் காத்திருப்போம்!
அதற்கான வேலையும் வரவில்லை, வேளையும் வரவில்லை நண்பரே என்றேன்.
நாம் முன் பதிவு செய்து கொண்டு வந்தால் நல்லது. ரயிலில் ஏசி. கம்பார்ட்மெண்ட் முதல், நான் ஏ.சி., ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்டு கிளாஸ், தேர்டு கிளாஸ்ன்னு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டு வரை எத்தனையோ கம்பார்ட்மெண்ட்டுகள் இருக்கு.
ஆமாம்.
நாம எப்படி வர்றமோ அப்படித்தான் அங்கே இடம் கிடைக்கும். முன்கூட்டியே ‘புக்’ பண்ணிட்டு வந்தா ஜாலியா படுத்துட்டு போகலாம்.
‘புக்’ பண்ணாம வந்தா ஜெனரல் கம்பார்ட்டு மெண்ட்டுல ஏறிச் சீரழியணும்.
புண்ணியம் பண்ணியிருந்தா வசதியாப் பொறந்து வசதியா வாழ்ந்து ‘லைஃபை’ ஜாலியா ‘என்ஜாய்’ பண்ணலாம்.
பாவம் பண்ணியிருந்தா அன்ரிசர்வடுதான். கழிவறையிலகூட உட்கார்ந்துட்டுப் போக நேரிடும்!
ஏழையாகவும் நோயாளியாகவும் பொறந்து கஷ்டம் கஷ்டம்னு கடைசி வரை அல்லல்பட நேரிடும். காலம் பூராவும் தரித்திரியனா வாழக் கூட நேரிடலாம்..
ஐயோ இதென்ன வாழ்க்கை? இதுக்கெல்லாம் முன்வினைதான் காரணமா? என்றார் நண்பர்.
சந்தேகமே இல்லை. முன் வினைதான் காரணம். ஆனா மனுசனுக்கு மூளை என்ற ஒன்றைக் குடுத்து இருக்கான் இறைவன். அதை மறந்துடக் கூடாது. ‘ஏசி’க் கம்பார்ட்மெண்ட்டுல போறதுனால அவன் உயர்ந்தவனும் இல்லை; அன்ரிசர்வ்டுல போறதுனால அவன் தாழ்ந்தவனும் இல்லை. பணக்காரனா பிறக்கறதுனால பெரியவனும் இல்லை. ஏழையாப் பிறக்கறதுனால சின்னவனும் இல்லை.
அப்போ?
குழந்தையின் முகபாவனைகளைப் பற்றிப் பேசினோமே, பாவ புண்ணியங்களால இந்தப் பிறவியில தான் அனுபவிக்கப் போற இன்ப துன்பங்களை எண்ணித்தான் பச்சைக் குழந்தையின் முக பாவனைகள் மாறுபடுது.
ஆனா குழந்தை அப்படியேதான் வளரணும்னு கட்டாயம் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் அறிவுன்னு ஒரு விஷயம் இருக்கு. அது ஒரு மகத்தான ‘மறை பொருள்’! அந்த மறைபொருள் இப்போது தூங்காமல்த் தூங்கிட்டு இருக்கு நண்பரே . அது எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டேதான் இருக்கு. குழந்தை வளர வளர அந்த அறிவும்கூடவே சேர்ந்து வளரும்!
அது வளர்ந்து வந்த பிறகுத் தன் வேலையைக் காட்டும்! அதனால்தான் அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் வள்ளுவர்.
அது விதியைக் கூட மாற்றும்!
ஞானம் விரியும்…