மருத்துவ மனையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் நடக்கிறது. அறுவை அரங்கத்திற்கு முன்னதாக அவளது கணவன், தாய் தகப்பனார் உட்பட உறவுகள் சூழ்ந்திருக்கின்றன.
தாயானவள் பிரசவத்தின்போது ஓலமிட்டழுகிறாள்.
பிரசவித்த பிறகு தாயின் அழுகை ஓய்கிறது.
அதேவேளை, அனைவரது முகத்திலும் சோகத்தின் குறியீடு தோன்றுகிறது.
கடிகார முள்ளின் சத்தம் மட்டுமே அப்போது எதிரொலிக்கிறது.
சற்று நேரத்தில் உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.
அனைவரது முகமும் அப்படியே சந்தோஷத்திற்கு மாறுகிறது! பெண்ணின் பெற்றோர் கண்கள் குளமாகின்றன. நெக்குருகிப் போகிறார்கள்.
தாயின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை உலகிற்கு வந்தவுடனேயே முதற்கண் அழுகிறது. குழந்தை அழுவது ஆரோக்கியத்தின் எதிரொலி என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில் குழந்தை அழவேண்டும். அது அறிவியல் பூர்வமான உண்மை.
குழந்தை குறைபாட்டுடன் பிறந்திருந்தால் அழாது என்பார்கள். அழுதால் அது குறையில்லாமல் பிறந்திருக்கிறது என்று அர்த்தம்!
எனவே, அழுகைக்குள் அர்த்தங்கள் உண்டு.
ஒரு குழந்தையின் அழுகைக்குள்ளும் இன்பம் துன்பம் என்ற இரண்டு விடயங்கள் இருக்கிறது.
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் மாலை
என் தாயார் கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.
'எங்கே போறீங்க, நானும் கூட வர்றேன்’ என்றேன்.
அவர் சற்று யோசித்தார்.
'சொந்தக்காரப் பெண்மணிக்குக் குழந்தை பிறந்திருக்காம். போய்ப் பார்த்துவிட்டு வரேன்டா. நீ தெருப்பசங்களோட விளையாடிட்டு இரு' என்றார்கள்.
'பொறந்த குழந்தைக்குப் பிஸ்கட்டு எதுக்கும்மா?'
தாயார் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார். 'வெறுங்கையோடு போகக்கூடாதுடா அதனால வாங்கிட்டுப் போறேன்' என்றார்.
'அப்படின்னா அதை யார் சாப்பிடுவாங்கம்மா? என்று கேட்டேன்.’
'அலமாரியில் உனக்கும் பிஸ்கட் பாக்கெட் இருக்குது. போய் எடுத்துச் சாப்பிடு , நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்' என்று புறப்பட்டபோது நான் விடவில்லை. தாயாருடன் தொற்றிக்கொண்டு போய்விட்டேன்.
பிரசவித்த பெண்ணிடம் பிஸ்கட்டு பாக்கெட்டுகளைக் கொடுத்துவிட்டு, அவள் அருகில் கிடந்த குழந்தையை அன்புடன் உற்று நோக்கினார் என் அன்னை.
நானும் உற்று நோக்கினேன்.
குழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள் போயிருந்தது மாலைப் பொழுது.
குழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. நான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன்.
என் தாயார் என் கைகளைத் தடுத்தார்.
'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.
அச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது! அதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும் ஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.
நானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன்.
மெல்ல என் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க . ஆனா சிரிக்குதே?' என்று காதில் கிசுகிசுத்தேன்.
'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'. அதான் சிரிக்குது என்றார்.
சொல்லி முடிக்கவில்லை.
குழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி உள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது!
என் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது? என்று கேட்டேன்.
'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது' என்றார்.
'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும் பாப்பாவைக் கிள்ளி விடலாமாம்மா?' என்றேன்.
'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக் கெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்தார்.
அன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும் பாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப் பார்த்தேன்.
என்ன ஆச்சரியம் !
அந்தப் பாப்பா மறுபடியும் முகம் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்தது. சோகம் போன மாயம் தெரியவில்லை. மகிழ்ச்சிப் பெருக்கால் அதன் மார்பு விம்மி விம்மி எழுந்தது.
எனக்குள் ஒரே சந்தோஷம்!
'அம்மா அம்மா. பாப்பா மறுபடியும் சிரிக்குது பாரேன்' என்றேன்.
பேசாம வந்துடு, தொந்தரவு செய்யாதே என்று என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியேறினார் தாயார்.
திரும்பிவரும் வழியில் என் தாயாரிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே நடந்தேன்.
'சாமி பாப்பாகிட்ட மட்டும்தான் விளையாடுவாராம்மா? நம்ம கிட்டல்லாம் விளையாட மாட்டாரா?'
'அது குட்டிப் பாப்பாடா, அதனால விளையாடறாரு. நீ கூட பாப்பாவா இருந்தப்போ உன்கிட்டயும் விளையாடினாரே, இப்போ நாமெல்லாம் வளர்ந்துட்டோமில்லையா?' என்றார்.
'இப்போ ஏன் விளையாட மாட்டறாரும்மா?'
'உன் கூட விளையாடத்தான் தெருப் பசங்க இருக்காங்களே' என்றார்.
அந்தப் பதில் தெருப் பசங்கள் மீது வெறுப்பை உண்டாக்கியது.
என் கவனத்தைத் திசை திருப்புவதுபோல தெருவில் நின்றுகொண்டிருந்த பஞ்சு மிட்டாய்க்காரனிடம் கூட்டிச் சென்று மிட்டாய் வாங்கிக் கொடுத்தார் அன்னை.
காற்றோடு கைகோர்த்துக்கொண்டுப் பறக்கத் துணிந்த பஞ்சுமிட்டாயை ஒரு குச்சியிலே கோர்த்து என்னிடம் நீட்டினார் வியாபாரி.
பதில் கிடைக்காத சோகமும் பஞ்சுமிட்டாய் வாசமும் ஒன்றுகூடி என்னைத் திசைமாற்றின.
வீட்டுக்கு வந்து இரவு படுத்துக் கொண்டபோது மீண்டும் அந்தக் கேள்விகள் எனக்குள் எழ ஆரம்பித்தன.
அப்போது பதில் கிடைக்கவில்லை.
ஆனால் கேள்விகளுக்கானப் பதில்கள் அனுபவங்கள் மூலமாகப் பின்னாட்களில் கிடைக்க ஆரம்பித்தன.
ஆம்!
சிசுக்களின் முகத்தில் ஏற்படும் சிரிப்பும் அழுகையுமான உணர்வு மாற்றங்களைக் கவனித்திருக்கிறீர்களா?
சிரிப்பதும் அழுவதும் இன்பு துன்ப உணர்வுகளின் வெளிப்பாடுகள்.
வளர்ந்த மனிதனுக்குத்தானே இன்ப துன்பங்கள். புதிதாய்ப் பிறந்த பச்சைக் குழந்தைக்குமா?
இருக்கிறது!
கண்களைத் திறந்தே பார்க்காத பச்சைக் குழந்தைக்கு என்ன உணர்வுகள் இருக்க முடியும்?
வளர்ந்த மனிதன் இன்புறும் போதும் துன்புறும்போதும் அவனது முகத்தில் ஏற்படும் பாவனைகளை பிஞ்சு முகத்தில் அப்படியே பிரதிபலிக்கிறதே, அது ஏன்?
அப்படி என்றால் அதன் ஆழ் மனதில் அந்த உணர்வுகள் புதைந்து போயிருக்கின்றனவா?
புதைந்துள்ளன என்றால் புதைக்கப்பட்டது எப்போது?
முட்டையின் மஞ்சள் கருவுக்குள் ஒரு கோழியின் வடிவம் மறைந்திருக்கிறது. முட்டை எப்படி வந்தது?
கோழி இடாமல் முட்டை வரமுடியுமா?
கோழியிலிருந்து முட்டை வந்தததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா?
இந்தக் கேள்விதான் ஞானத்தின் துவக்கம்.
அதற்கு முன்னதாக ஒரு கேள்வி.
மஞ்சள் கரு கோழியின் வயிற்றில் தானாக உருவாகிவிட்டதா?
சேவலின் சேர்க்கையின்றிக் கோழியின் வயிற்றில் முட்டை உருவாக முடியுமா?
கோழிக்கு மனது உண்டா?
இல்லை.
மனதுள்ள பிறவி மனிதப் பிறவிதான்.
ஒரு குழந்தையானாலும் அதற்குள்ளும் ஒரு மனது இருக்கிறது.
அதற்குள் புதைந்துள்ள உணர்வுகளைத்தான் அது அப்போது அனுபவித்திருக்கிறது!
உணர்வுகள்தான் முகத்தில் இன்ப துன்பங்களின் சுருக்கங்களாக வெளிப்படுகின்றன.
உணர்வுகள் புதைக்கப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அந்த உணர்வுகள் எங்கிருந்து குழந்தையின் ஆழ்மனதில் புதைக்கப்பட்டன?
பொதுவாக பிறக்கும் முன் குழந்தை எங்கிருந்தது என்று கேட்டால், தாயின் வயிற்றில் இருந்தது என்பார்கள்.
அதுதான் அறிவின் எல்லை. அதற்கு மேல் அறிவுக்குப் போகத் தெரியாது. காரணம் அது விஞ்ஞானம்.
குழந்தை தாயின் வயிற்றுக்குள்ளிருந்து தானாக வந்துவிட்டதா?
தகப்பனின் அணுக்களாக வந்து, தாயின் கருமுட்டையோடு கலந்து உருவானது அல்லவா குழந்தை?
அதுதான் தொடக்கமா? அங்குதான் தொடக்கமா?
ஒரே மர்மமாக இருக்கிறதே?
மர்மத்திற்கும் முன்னால் ஒரு மர்மம் இருக்கிறது.
அந்த மர்மங்கள் அனைத்துக்கும் ஒரு மூல காரணம் இருக்கிறது.
அதற்குப் பதில் சொல்லப் போனால் இயற்கைக்கு விளக்கம் தேடியாக வேண்டும்.
அதற்கு விளக்கம் தேடினால் இறைப் பொருளை அறிந்தாக வேண்டும்.
அந்த இறைப் பொருள்தான் அத்தனை சேர்க்கைப் பிறப்புகளுக்கும் காரணம்.
பெற்றோர் மட்டும் குழந்தையின் ஆதி மூலம் அல்ல. அவர்களுக்கும் முன்னால் அவர்களுடைய பெற்றோரின் சேர்க்கை இருக்கிறது.
அவர்களின் பிறப்புக்கு, அவர்களுடைய பெற்றோரின் சேர்க்கை காரணம்.
ஜோடிகள் மணமக்களாகச் சேர்ந்து கணவன் மனைவியாகி, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் நாகரீகம் அன்றைக்கு இல்லை.
ஆதி மனிதனிடம் அநாகரீகமான உறவுகள்தான் விரவிக் கிடந்தன. நாகரீகம் தோன்றிய பிறகுதான் குடும்பங்கள் வரையறைகப்பட்டன.
அன்று முதல் இன்று வரை இனப்பெருக்கத்தை நடப்பிக்க அடிப்படையாக இருந்து வருவது எது?
காதலும் காமமும்!
இரண்டுமே உணர்வுகள் சார்ந்த விஷயங்கள்.
காமம் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை. அது ஒரு இச்சை.
மனித உயிரினத்தில் மட்டும் காமத்தோடு காதலும் கலந்திருக்கிறது.
காம இச்சைகள் காதல் என்ற ரசனைமிக்க எண்ணங்களாக வெளிப்படுவது மனிதனிடம்.
மனிதனுக்கு மட்டும் காதல் ஏன்?
அவன் மனதுள்ளவன்.
அவன் அறிவுள்ளவன்.
மனதும் அறிவும் ஏற்படுத்தும் எண்ணங்களால் ஆளப்படுபவன்.
பச்சைக் குழந்தையின் இன்ப துன்பப் பாவனைகள் இந்த எண்ணங்களின் வெளிப்பாடாகும்.
இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தன. எப்படிக் குழந்தையின் ஆழ்மனதில் பதிந்தன?
அதற்குள்ளும் ஒரு மர்மம் மறைந்திருக்கிறது.
அதுதான் முற்பிறவி என்ற முடிச்சு.
முற்பிறவி உண்டா?
முற்பிறவியின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பிறந்த குழந்தைகள் உறங்கும்போதுக் கவனிக்க வேண்டும். அதன் உணர்வுகள் முகபாவனையில் சிரிப்பாகவும், அழுகையாகவும் வெளிப்படுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அப்போதுதான் பல விஷயங்கள் கேள்விகளை ஏற்படுத்தும்.
தொடர்ச்சி இல்லாமல் இந்த உணர்வுகளைப் பச்சைக் குழந்தையின் முகம் பிரதிபலிக்க முடியாது!
காரணம் இல்லாமல் காரியம் இல்லை!
நமது இன்பங்களும் துன்பங்களும் காரியம் என்றால், அவற்றுக்குக் காரணமாகிய ஒரு காரியம் இருந்திருக்கிறது.
குழந்தை வளர்ந்து பெரியவனோ பெரியவளோ ஆகும்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரிக்க நேரிடலாம், அழ நேரிடலாம். அவற்றை அறிவால் சிந்தித்து மனதால் உணர்ந்து அனுபவிக்கிறது.
சிரிப்பும் அழுகையும் மனிதனுக்கு மட்டும் இயற்கை வழங்கியுள்ள பரிசுகள். சிரிப்பும் அழுகையும் ஒரு வரமே.
இதை அறியாதவர்கள்தான் அழுகையே கூடாது என்று அழுகிறார்கள்!
அழாமல் இருக்கும் வழிகளைத் தேடித் தேடித் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
அழுகையை எதிர்த்தவர்கள்தான் அழிந்திருக்கிறார்கள். அழுகையை வரவேற்றவர்கள் அழியாத நிலைபெறுகிறார்கள்.
மனிதன் அழியாமல் இருப்பதற்கு அழுகை ஒரு அருட்கொடை.
அழியாத வாழ்க்கைக்கு அழுது வடிக்கும் கண்ணீர்தான் ஆதாரம்!
அது ஒரு உரம்!
ஞானம் வி ரி யு ம்...