பொருள் தரும் குறள்

7. அஞ்சல் இருக்க அஞ்சேல்

பத்மன்

முதலீட்டின் முக்கிய நோக்கம், நம்மிடம் இருக்கும் சேமிப்பாகிய மூலதனத்தை மேலும் பெருக்குவதே. அதற்காகத்தான் நம்மிடமே அந்தப் பணத்தை வைத்துக்கொண்டிருக்காமல், பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் அதனை முதலாக இடுகிறோம். பண வளர்ச்சி என்னும் விளைச்சலுக்கு நம்மிடமுள்ள இந்த முதல்தான் மூல விதை. இதில் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய விஷயம் – இந்த மூல விதைக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே. நமது மூலதனம் நமக்கு வட்டி, லாபம் போன்றவற்றின் மூலம் புதிய வரவுகளைக் கொண்டுவந்து தந்தாலும் தராவிட்டாலும், அந்த மூலதனத்தின் அளவு எக்காரணம்கொண்டும் குறைந்துவிடக் கூடாது என்பதே முதலீட்டின் முதல் சூட்சுமம்.

இதைத் திருவள்ளுவர், தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் கீழ்க்கண்ட குறளில் திறம்பட எடுத்துரைக்கிறார்.

ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். (463)

பின்னால் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கருதி, தற்போது தம் கைவசமுள்ள முதலை இழந்துவிடக் காரணமாக உள்ள செயலை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருள். மிக நேரடியாகவே முதலீட்டாளர்களுக்கு இக்குறள் எச்சரிக்கை விடுகிறது. பேராசை பெரு நஷ்டம் என்பதால், அதிகம் ஆசைப்படாமல் முதலீட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

சரி, பாதுகாப்புதான் முக்கியமெனில், எந்தவகைத் திட்டத்தில் முதலீடு செய்வது? எவ்விதம் பாதுகாப்பான முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது? இதற்கும் திருவள்ளுவர் பதில் தருகிறார், இதற்கு முந்தைய திருக்குறளில்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்று மில். (462)

ஒரு செயலைப் பற்றி நன்கு ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன், அந்த இனத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து தெரிந்துகொண்டு சேர்ந்து, அது செய்கின்ற செயலைத் தாமும் சரியாக எண்ணிப் பார்த்து செயல்படுவோருக்கு அரிய பொருள் என்று உலகில் எதுவும் இல்லை என்று இக் குறளுக்குப் பொருள்.

முதலீட்டைப் பொருத்தவரை இந்தவகையில் பாதுகாப்பும், நம்பகத்தன்மையும், எளிமையும் வாய்ந்த சேமிப்புத் திட்டங்களில் முதலாவதாக இருப்பது அஞ்சலக சேமிப்புத் திட்டங்களே. அஞ்சலகங்கள் பல்வேறு சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. பேராசைப்படாமல் பணம் சேர்க்க விரும்புவோருக்கும், பாமர மக்களுக்கும் மிகவும் ஏற்றவகை முதலீடு அஞ்சலக சேமிப்பே. மிகவும் நம்பகமான முதலீடு என்பதுடன், வங்கிகளைவிட அதிக அளவு வட்டியையும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் தருகின்றன.

உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறையைக் கொண்டுள்ள நாடு இந்தியா. பழக்கப்படுத்தப்பட்ட புறாக்கள் போன்ற பறவைகள் மூலமாகவும், நம்பகமான நபர்கள் மூலமாகவும் கடிதப் போக்குவரத்து நடத்திய பழம்பெரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், தற்கால முறையான அஞ்சலகம் எனப்படும் தபால் அலுவலகங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியார். கடந்த 1688-ம் ஆண்டில் மும்பையில் முதல் அஞ்சலகத்தைத் தொடங்கிய கிழக்கிழந்திய கம்பெனியார், அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவிலும் சென்னையிலும் அஞ்சலகத்தைத் திறந்தனர். அண்மைக்கால புள்ளிவிவரம் ஒன்றின்படி, நம் நாட்டில் தற்போது சுமார் 1.55 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 90 சதவீத அஞ்சலகங்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.

இந்தியாவில் இந்த அஞ்சலகங்கள் தபால் பட்டுவாடாக்களை மட்டுமின்றி, சேமிப்பு, முதலீடு போன்ற நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் – குறிப்பாக ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வாழும் கிராமப்புறங்களில் – திறம்படக் கையாளுகின்றன. அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும், கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றன. ஓய்வூதியத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கும் முகமை அமைப்பாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் முகமையாகவும் அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் வங்கிகளைப் போன்று, அஞ்சலகங்களில் பணம் செலுத்துதல், வழங்குதல், மாற்றுதல் ஆகியவற்றில் கணினிமயச் செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் (ஏறத்தாழ வங்கிகளைப் போன்றே செயல்படும்) சிபிஎஸ் எனப்படும் அடிப்படை வங்கி நடைமுறையை (கோர் பேங்கிங் சிஸ்டம்) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில், சென்னையில் அஞ்சல் துறையின் முதல் ஏடிஎம் (தானியங்கி காசாளர் இயந்திர மையம்) தொடங்கப்பட்டது. படிப்படியாக பல்வேறு இடங்களில் ஏடிஎம் மையங்கள் தொடங்கப்பட்டதுடன் ஏடிஎம் அட்டைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. 2015-ம் ஆண்டில் பணப் பட்டுவாடா வங்கியைத் தொடங்குவதற்கான அனுமதியும் அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறாக, நாட்டின் சமூகப் பொருளாதாரத் துறையில் அஞ்சலகம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. முக்கியமாக, கிராமப்புறங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அஞ்சலகம் ஆற்றும் பணி அளப்பரியது. இந்த அஞ்சலகங்கள் செயல்படுத்திவரும் சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்கள் பாமர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை உறுதிசெய்யும் வகையில், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் மொத்தம் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் பேர் அஞ்சலக சேமிப்புத் திட்ட முகவர்களாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

அஞ்சலகங்கள் வழங்குகின்ற பல்வேறு சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்கள் குறித்து இனி காண்போம்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு

வங்கிகளைப் போன்றே, அருகில் உள்ள அஞ்சலகத்திலும் யார் வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கமுடியும். இக் கணக்கை தனிநபராகவோ, இருவர் அல்லது மூவராகச் சேர்ந்து கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 பராமரிக்கப்பட வேண்டும். காசோலை வேண்டுவோர், எப்போதும் குறைந்தபட்சத் தொகையாக ரூ.500 வைத்திருக்க வேண்டும். இக் கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி உண்டு. சிபிஎஸ் நடைமுறையில் உள்ள அஞ்சலகத்தில் இக் கணக்கைத் தொடங்கியிருந்தால், வேறு எந்த சிபிஎஸ் அஞ்சலகம் மூலமும் கணினி வழியில் பணத்தைப் போடலாம், எடுக்கலாம், பிற கணக்குகளுக்கு மாற்றலாம். வாரிசுதாரரை நியமிக்கும் நாமினேஷன் வசதி உண்டு.

5 ஆண்டு அஞ்சலகத் தொடர் வைப்பு (ஆர்டி)

குறைந்தபட்சம், மாதந்தோறும் ரூ.10 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இதுபோல் தொடர் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 7.3 சதவீத வட்டி உண்டு. இந்த வட்டித்தொகையானது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டு வட்டியாக (காம்பவுண்ட்) கணக்கிடப்பட்டுச் சேர்க்கப்படுவதால் கூடுதல் பயன் கிடைக்கிறது. உதாரணத்துக்கு, மாதந்தோறும் ரூ.100 முதலீடு செய்து வந்தால், 5 ஆண்டு இறுதியில் நமது முதலீடான ரூ.6,000 கூட்டு வட்டி சேர்த்து, ரூ.7,250.50-ஆகத் திரும்பக் கிடைக்கும். 6 மாதத் தவணைகளைச் சேர்த்துக் கட்டினால், அத் தொகைக்கு குறிப்பிட்ட சதவீதத் தள்ளுபடியும் உண்டும். தனிநபராகவோ கூட்டுக் கணக்காகவோ இதனைத் தொடங்கலாம். நாமினேஷன் வசதி உண்டு.

அஞ்சலக குறித்தகால வைப்பு (டீடி)

ஒருவர் தனியாகவோ அல்லது மற்றொருவருடன் கூட்டாகவோ இத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை இத் திட்டத்தில் பணத்தை வைத்திருக்கலாம். குறைந்தபட்சம் ரூ.200 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீட்டுக்கு அளவு இல்லை. ஓராண்டுக்கு 7 சதவீதம், 2 ஆண்டுகளுக்கு 7.1 சதவீதம், 3 ஆண்டுகளுக்கு, 7.3 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு 7.8 சதவீதம் என வட்டித்தொகை வழங்கப்படுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் முதலீட்டுக்கு வருமான வரி விலக்குச் சலுகை உண்டு.

அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (எம்ஐஎஸ்)

தொடர் வைப்புத் திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் நாம் ஒரு தொகையை முதலீடு செய்கிறோம், இறுதியில் வட்டியுடன் திரும்பக் கிடைக்கிறது. இந்த எம்ஐஎஸ் திட்டத்திலோ 5 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட தொகையை நிரந்தர முதலீடாக வைத்திருந்தால், அதற்கு மாதந்தோறும் வட்டித் தொகை நமக்கு வழங்கப்படுகிறது. முதியோர், ஓய்வூதியர்கள், நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு மிகவும் ஏற்றது இந்தத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,500 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக தனிநபர் எனில் ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்கு எனில் ஒருவருக்கு ரூ.4.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சமும் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.70 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் அத் தொகை பிரித்து வழங்கப்படும்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டைத் திரும்பப் பெறலாம். (2011-ம் ஆண்டுவரை முதலீட்டைத் திரும்பப் பெறும்போது, அதனுடன் சேர்த்து 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த போனஸ் இல்லை.) 5 ஆண்டுகளுக்கு முன்பே முதலீட்டைத் திரும்ப எடுக்கும்பட்சத்தில், திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவடைந்த பிறகு அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மூன்றாண்டுகள் முடிவடைவதற்கு முன்பு முதலீட்டைத் திரும்பப் பெற்றால் முதலீட்டுத் தொகையில் இருந்து 2 சதவீதமும், அதற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு முன்பாகத் திரும்பப் பெற்றால் ஒரு சதவீதமும் பிடித்தம் செய்யப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்)

60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனிநபராகவோ அல்லது வாழ்க்கைத்துணையுடன் (மனைவி அல்லது கணவர்) கூட்டாகவோ இதில் சேரலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும். அதற்குமேல் இதன் மடங்குகளில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக கணக்கிட்டு வழங்கப்படும். முதலீட்டுத் தொகைக்கு வருமான வரிச் சலுகை உண்டு. அதேபோல், இதில் கிடைக்கும் வட்டித் தொகைக்கு ரூ.10,000 வரை வருமான வரிச் சலுகை உண்டு. முதிர்வுக் காலத்துக்கு முன் முதலீட்டைத் திரும்பப் பெற்றால், ஓராண்டுக்கு மேல் இரண்டாடுகளுக்குள் எனில் 1.5 சதவீதமும், 2 ஆண்டுகளுக்கு மேல் எனில் ஒரு சதவீதமும் முதலீட்டுத் தொகையில் பிடித்தம் செய்யப்படும்.

15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்)

எந்தவொரு தனிநபரும், தனது வருங்கால நலனுக்கான இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் கூட்டாக முதலீடு செய்ய முடியாது. திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்து இத் திட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆயினும், ஓர் நிதியாண்டுக்கு (ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலம்) குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை ஒரே தவணையாகவோ அல்லது அதிகபட்சம் 12 தவணைகளாகவோ மேற்கொள்ளலாம்.

ஆண்டுக்கு 8 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு இருப்பதுடன், வட்டித் தொகைக்கும் முழுமையான வருமான வரி விலக்குச் சலுகை வழங்கப்படுகிறது. திட்டக் காலமான 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தை முடித்துக்கொள்ள முடியாது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால், ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையைத் திரும்பப் பெறலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டத்தின் பேரில் கடனுதவி பெறும் வசதியும் உண்டு. இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், இத்திட்டத்தில் உள்ள முதலீட்டுத் தொகையை எந்த நீதிமன்ற உத்தரவாலும் முடக்க முடியாது.

தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (என்எஸ்சி)

முதலீட்டுக்கு வாய்ப்பளிக்கும் தேசிய சேமிப்புப் பத்திரங்களை அஞ்சலகங்கள் வாயிலாக மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது எட்டாவது வெளியீடு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். குறைந்தபட்ச முதலீடு ரூ.100. அதற்கு மேல் ரூ.500, ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 ஆகிய முகமதிப்புள்ள பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ஆண்டுக்கு 8 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படும். திட்ட முதிர்வின்போது முதலீட்டைத் திரும்பப் பெறும்போதுதான், அதற்குரிய வட்டியையும் பெற முடியும். உதாரணத்துக்கு, இத் திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டு வட்டி சேர்த்து ரூ.146.93 திரும்பக் கிடைக்கும். முதலீட்டுக்கும், வட்டிக்கும் வருமான வரிச் சலுகை உண்டு.

வேளாண் வளர்ச்சிப் பத்திரங்கள் (கிஸான் விகாஸ் பத்திரங்கள் – கேவிபி)

வேளாண் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்ட இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. எந்த அஞ்சலகத்திலும் இந்த கேவிபி பத்திரங்களைப் பெற்று முதலீடு செய்யலாம். இத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகை, 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் (அதாவது மொத்தம் 112 மாதங்கள்) கழிந்த பிறகு இரு மடங்காக உயரும். இத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். அதற்கு மேல் ரூ.5,000, ரூ.10,000, ரூ.50,000 முகமதிப்புள்ள பத்திரங்கள் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ஒருவர் தனிநபராகவோ அல்லது மற்றொருவருடன் சேர்ந்து கூட்டுக் கணக்கிலோ இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நாமினேஷன் வசதி உண்டு. தேவைப்பட்டால், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டைத் திரும்பப் பெறலாம். ஆனால், அதற்கேற்ப வட்டித் தொகையில் பிடித்தம் செய்யப்படும். இவ்வகை முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு உண்டு.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ருதி யோஜனா)

எந்தவொரு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ காப்பாளரும் தமது மகளின் எதிர்கால நலனுக்கான இத்திட்டத்தில் சேரலாம். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவோம், கற்பிப்போம்’ (பேட்டி பசாவ், பேட்டி படாவ்) திட்டத்தின் கீழ், கடந்த 2015-ம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 10 வயதுக்கும் கீழ் உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டம் அறிமுகமான சில மாதங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் இதில் இணைந்தனர். ரூ.1,000 செலுத்தி இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் செலுத்தலாம்.

இத்திட்டத்தின்கீழ் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு 9.1 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டித்தொகைதான் முதலீட்டுத் திட்டங்களிலேயே மிகவும் அதிகமானதாகும். 21 ஆண்டுகள் கழிந்த பிறகு திட்டம் முதிர்வடையும். இருப்பினும் பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய பின்னர் கல்விக்காகவோ அல்லது திருமணத்துக்காகவோ முதலீட்டில் 50 சதவீதத் தொகையைத் திரும்ப எடுக்கலாம். பெண்ணுக்கு 18 வயது நிரம்பி, திருமணமும் ஆகியிருந்தால், தேவைப்பட்டால் முதலீட்டை முழுவதுமாகத் திரும்பப் பெறலாம். இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கும் வட்டித் தொகைக்கும் வருமான வரிச் சலுகை உண்டு.

பொன்மகன் பொதுவைப்பு நிதித் திட்டம்

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியை அடுத்து, அதேபோல் ஆண் குழந்தைகளின் நலனுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏறத்தாழ பிபிஎஃப் திட்டமேதான். 10 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளின் பெயரில் பெற்றோரோ அல்லது சட்டப்பூர்வ காப்பாளரோ இத்திட்டத்தில் சேரலாம். 10 வயது நிறைவடைந்த எந்த ஆண் குழந்தையும் தன் பெயரிலேயே இத் திட்டத்தில் சேர முடியும். ஆண்டுக்கு 8.7 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படும். மற்ற நிபந்தனைகள் அனைத்தும் பிபிஎஃப் திட்டத்துக்கு உள்ளதைப் போன்றுதான். இந்தப் பொன்மகன் பொதுவைப்பு நிதித் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆகியவற்றை, அஞ்சலகங்கள் மட்டுமின்றி, பொதுத் துறை வங்கிகளும் செயல்படுத்துகின்றன.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான முதலீட்டுத் திட்டங்களை அஞ்சலகங்கள் செயல்படுத்துகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் பாமர மக்களுக்கும், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும் மிகவும் ஏற்றவை. முக்கியமாக, பாதுகாப்பு உத்தரவாதத்துடன், கணிசமான பயனும் தரக்கூடிய இந்த வகை முதலீடுகள் குற்றம் குறை ஏதுமற்றவை.

தினைத்துணையாய் குற்றம் வரினும் பனைத்துணையாய்

கொள்வர் பழிநாணு வார் (433)

என்று ‘குற்றம் கடிதல்’ அதிகாரத்தில் கூறுகிறார் திருவள்ளுவர். தினை என்ற தானியம் மிகவும் சிறியது. பனை மரமோ மிகப்பெரிய அளவிலானது. தினையளவு சிறிய குற்றமாக இருந்தால்கூட, பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற பெருமக்கள், அதனை பனை அளவு குற்றமாகக் கருதி ஒதுக்கிவிடுவர். பாமரர்களும், ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற பெருமக்களே. அவர்கள் அச்சமின்றி முதலீடு செய்வதற்கேற்ற அர்த்தமுள்ள முதலீடுகள், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களே.

***

துணைத் தகவல்

அஞ்சலக வங்கி அறிமுகமான வரலாறு

தற்கால அஞ்சலகங்களின் தாயகம் இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன்தான். கடந்த 1660-மாவது ஆண்டிலேயே இங்கிலாந்தில் தலைமைத் தபால் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது. 1680-ல் லண்டன் மாநகரில் உள்ளூரில் தபால் பட்டுவாடா செய்யும் லண்டன் பென்னி போஸ்ட் என்ற அலுவலகம் திறக்கப்பட்டது. பின்னர் பல்வேறு நாடுகளிலும் அஞ்சலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அஞ்சலகங்களைப் போலவே அஞ்சலக வங்கிச் சேவையை அறிமுகப்படுத்திய நாடும் பிரிட்டன்தான். 1861-ம் ஆண்டில் அந்நாட்டில் அஞ்சலக வங்கி சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில், 1873-ல் கொண்டுவரப்பட்ட அரசு சேமிப்பு வங்கிச் சட்டத்தின் கீழ், 1882-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி பல்வேறு இடங்களில் அஞ்சலக சேமிப்பு வங்கிகள் தொடங்கப்பட்டன. 1898-ல் இந்திய அஞ்சலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிரிட்டனைப் போலவே பிரான்ஸும் அஞ்சலக சேவையைத் தொடங்கிய நாடுகளில் பழமையானதாகும். பிரிட்டனைப் போலவே அங்கும் 17-ம் நூற்றாண்டிலேயே அஞ்சலகங்கள் அறிமுகமாகின. இதேபோல், பின்னர் அஞ்சலக வங்கிச் சேவையும் தொடங்கப்பட்டது. தற்போது லா போஸ்டே என்றழைக்கப்படும் அந்நாட்டின் அஞ்சல் துறை, லா பேங்கே போஸ்டலே என்ற பெயரில் அஞ்சலக வங்கிச் சேவையை அளித்து வருகிறது.

அஞ்சலக வங்கிச் சேவையை வழங்குவதில், பண மதிப்பைப் பொருத்தவரையில் உலகின் மிகப்பெரிய நாடாக இருப்பது ஜப்பான். அந்நாட்டின் அஞ்சலக வங்கிச் சேமிப்புக் கணக்குகளில் சுமார் ரூ.120 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சீனா, பிரேஸில், ஜெர்மனி, தென் கொரியா, கென்யா, இஸ்ரேல், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அஞ்சலக வங்கிச் சேவை உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரியா, பல்கேரியா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் முன்பு சிறப்பாகச் செயல்பட்டு வந்த அஞ்சலக வங்கிகள் பின்னர் காலப்போக்கில் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT