பொருள் தரும் குறள்

18. வரிக்குப் பயந்திடேல்

பத்மன்

மக்களாட்சி நடைபெறுகின்ற தற்காலத்தில்கூட தங்களை மகாராஜாக்கள்போல் நினைத்து நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால், நமது பாரத நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முடியாட்சி நடந்த காலத்தில்கூட மக்களைத் தாங்கிப் பிடித்து முறையாக ஆட்சி செய்வதற்கு தனக்குக் கிடைத்த பொறுப்புதான் அரசர் பதவி என்பதை அறிந்துகொண்டு ஆண்ட மன்னர்கள் பலர் இருந்துள்ளனர்.

நமது நாட்டுக்குப் பாரதம் என்று பெயர் வரக் காரணம் ஆன பரத சக்ரவர்த்தியின் வரலாறும், அத்தகைய குடியாட்சியோடு கூடிய முடியாட்சியைத்தான் குறிக்கிறது. பாண்டவர்களின் முன்னோரான துஷ்யந்தன் – சகுந்தலையின் குமாரன் பரதன், பல்வேறு சிறு நாடுகளாகச் சிதறிக் கிடந்த பரந்துபட்ட பாரத தேசத்தை முதன்முறையாக முழுவதும் ஒருங்கிணைந்து அரசாண்ட சக்ரவர்த்தியாவார். அவருக்கு 9 மகன்கள். அக்கால வழக்கப்படி, மூத்த மகன்தான் பட்டத்து இளவரசனாக, அடுத்த மன்னனாக மூடிசூட்டப்பட வேண்டும். ஆனால், நேர்மையான அரசனாகிய பரதன், தனது 9 மகன்களில் ஒருவர்கூட தனது மிகப்பெரிய தேசத்தின் அரசனாவதற்கு தகுதி வாய்ந்தவர் அல்ல என்பதை உணர்ந்தார். மக்களுக்காகத்தான் மன்னரே அன்றி, வாரிசு உரிமைப்படி மன்னர் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதை முந்தைய அறநூல்களின் அடிப்படையிலும், சான்றோர்களுடன் விவாதித்தும் அவர் முடிவெடுத்தார். அதன்படி, வீரமும் விவேகமும் நிறைந்த புமன்யு என்ற சாதாரண இளைஞனை, அனைவரும் அதிசயப்படும் வகையில், பட்டத்து இளவரசனாக அறிவித்து, அரியணையின் அடுத்த அரசனாகவும் ஆக்கினார்.

தமது பொறுப்பில் விட்டுச் செல்லப்பட்ட ஓர் அபலைக்குத் தேவையில்லாத அபவாதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, தனது கரத்தையே வெட்டித் துண்டித்துக் கொண்டார் பாண்டிய மன்னர் பொற்கைப் பாண்டியன். அவரது வழிவந்த மன்னர் பாண்டியன் நெடுஞ்செழியனோ, அவரையும் விஞ்சினார். தமது ஆணையில் நிகழ்ந்த பிழையால் கணவனை இழந்த கண்ணகி வாதாடியபோது, தமது குற்றத்தை உணர்ந்துகொண்டு அதற்காக தனக்கே தண்டனையாக, உடனே உயிரைத் துறந்து, அரசின் செங்கோல் வளையாது நிறுத்தினார் நெடுஞ்செழியன்.

மக்களுக்காக மட்டுமல்ல, மாக்களுக்குக்கூட மதிப்பளித்துள்ளனர் அக்கால மன்னர்கள். தனது கன்றை தேர்க்கால் ஏற்றி இளவரசன் கொன்றுவிட்டதாக ஒரு மாடு புகார் தெரிவிக்க, தன் மகன் என்றும் பாராமல், பதிலுக்கு அவன் மேல் தேரை ஓட்டிக் கொன்று தண்டனையை நிறைவேற்றினார் மனுநீதிச் சோழன். இவ்வாறு நீதிநெறி தவறாமல் மக்களைக் காப்பாற்றும் மன்னர்களாக நமது முன்னோர்கள் திகழ்ந்ததால்தான் அவர்கள் இறைவனைப்போல் போற்றப்பட்டார்கள்.

இதனை தெய்வப்புலவர் திருவள்ளுவர் ‘இறைமாட்சி’ என்ற அதிகாரத்தின் கீழ் உள்ள குறளில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும். (388)

அறநூல்களும் நீதிநூல்களும் வலியுறுத்தும் நெறிமுறைகளில் இருந்து பிறழாமல் ஆட்சி செய்து, தமது குடிமக்கள் நலிவுறாமல் காப்பாற்றுகின்ற மன்னவன், அந்த மக்களுக்கு இறைவனைப்போல மதிக்கப்படுவான் என்பது இதன் பொருள். இன்றைய நாளில்கூட மக்களுக்காக தமது வாழ்வை அமைத்துக்கொண்ட அரசியல் தலைவர்கள், பாமர மக்கள் மனங்களில் இறைவனைப்போல்தான் கொலுவீற்றிருக்கிறார்கள்.

மன்னராட்சியோ அல்லது மக்களாட்சியோ எத்தகைய ஆட்சி நடைபெற்றாலும், அந்த ஆட்சி நிலையான, வலுவான ஆட்சியாகத் தொடர வேண்டுமானால், அரசின் கருவூலத்தில் பணம் இருக்க வேண்டும். அவ்வாறு செல்வம் இருந்தால்தான் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். புயல், வறட்சி, வெள்ளம் போன்ற ஆபத்தான தருணங்களில் விரைந்து மக்களைக் காப்பாற்றி, மறுசீரமைப்பு மேற்கொள்ள முடியும்.

அரசுக்கு இதுபோன்ற பணம் – பொருட்செல்வம் எவ்விதம் வருகிறது? அதனை ‘பொருள் செயல்வகை’ என்ற தலைப்பிலான அதிகாரத்தில் பொறுப்புடன் விளக்குகிறார் வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகை.

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள். (756)

உறுபொருள் என்றால் அரசுக்கு உரிமையுடைய பொருட்செல்வம் என்று பொருள். இது இரண்டு வகைப்படும். ஒன்று, உரியவர் இல்லாத சொத்துகள், புதையல் போன்ற செல்வங்களைக் குறிக்கும். மற்றொன்று, அரசுக்கு உரிய இறையாகிய வரிப் பணத்தைக் குறிக்கிறது. இறை என்ற சொல்லுக்கு வரி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. இறைவனாகவே துதிக்கப்படும் ஆட்சியாளராக இருந்தாலும் சரி, அவரது ஆட்சி சிறப்புற நடைபெற மக்களிடமிருந்து இறைப்பணம் (வரி வருவாய்) கிடைத்தாக வேண்டும். அடுத்ததாக உல்கு பொருள். உல்கு பொருள் என்றால், கப்பல் முதலிய கலன்களிலும், இதர வகைகளிலும் நாட்டுக்குள் வருகின்ற பொருள்களுக்கு விதிக்கப்படும் சுங்கத்தின் மூலம் (இன்றைய கஸ்டம்ஸ் டூட்டி) கிடைக்கின்ற வருவாய்.{pagination-pagination}

தன் ஒன்னார் என்றால் தன்னை ஏற்காத, விரும்பாத பகைவர்கள் எனப் பொருள். தெறுபொருள் என்றால் அத்தகைய எதிரிகளின் நாடுகளை வென்றடக்கி, அங்கிருந்து தனது திறனால் திரட்டி வரப்படுகின்ற, வசூலிக்கப்படுகின்ற திறை எனப்படும் பொருட்செல்வம். முதிர்ந்த மக்களாட்சியும், போரற்ற சமுதாயத்துக்கான பேரவாவும் கொண்ட தற்போதைய காலகட்டத்தில், தெறுபொருள் என்பதற்கு மற்ற நாடுகளுக்கு நமது பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற திறத்தால் திரட்டப்படுகின்ற அந்நியச் செலாவணியாகிய செல்வம் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். ஆக, வரி வசூல், சுங்க வசூல், அந்நியச் செலாவணி ஆகிய இம்மூன்றும்தான் வேந்தன் பொருள் – அதாவது அரசின் பொருள். அரசு பொருள் ஈட்டுவதற்கான வழிவகை இம்மூன்றும்தான்.

இந்த மூன்றில் இறைப் பணம் எனப்படும் வரி வருவாய், ஆட்சி நி்ர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தம்மையும் தம்மை ஒத்த குடிமக்களையும் காப்பாற்றுகின்ற அரசுக்கு, நாட்டின் பாதுகாப்பு, நலத் திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய செலவுகளுக்காக மக்கள் கொடுக்கின்ற பணமே வரி. இந்த வரி வருவாய் நேரடி வரி, மறைமுக வரி என்று இருவகைப்படுகிறது. பொருட்களை வாங்கும்போது செலுத்தப்படுகின்ற வணிக வரி போன்றவை மறைமுக வரிகளாகும். சொத்து வரி, வருமான வரி போன்றவை நேரடி அல்லது நேர்முக வரிகளாகும்.

குறிப்பிட்ட வரம்புக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அந்தக் கூடுதல் வருமானத்தின் அளவுக்கு ஏற்ப அரசுக்கு குறிப்பிட்ட சதவீதத் தொகையை வருமான வரியாகச் செலுத்துகிறார்கள். தனிநபர்களும், நிறுவனங்களும் அரசுக்கு இவ்வாறு வருமான வரி செலுத்துகிறார்கள். தனது வருமானத்துக்கு நேர்மையாகக் கணக்குக் காட்டி, அதற்குரிய வரியை மக்கள் செலுத்துவதே நல்லது. இல்லையேல் கருப்புப்பணம் உருவாகி, நாட்டையும் சமூகத்தையும் அல்லல்படுத்தும். அதேநேரத்தில் அரசும் மக்களை வாட்டிவதைக்காத வகையில் வருமான வரி விகிதங்களை அமைத்து, எளிமையான முறையில் வசூலிக்க வேண்டும்.

இதனை சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாபாரதம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. மகாபாரத இதிகாசத்தில் வரும் சாந்தி பருவத்தின் கீழ் அமைந்துள்ள ‘ராஜதர்ம அனுசாசன பருவ’த்தில், அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மர், தனது பேரனும் அரசனுமாகிய தர்மராஜனுக்கு அரசாட்சி பற்றி போதிக்கிறார். அப்போது, அறிவுடைய மனிதன், எப்படி பசுமாட்டிடம் ஒரேயடியாகப் பாலைக் கறந்துவிடாமல், அதனைத் தொடர்ந்து பாதுகாத்து, பாலைச் சுரக்கவிட்டு, தினசரி கறக்கிறானோ, அதேபோல மன்னனும் தனது குடிமக்களைப் பாதுகாத்து, வளர்ச்சி அடையச் செய்து, தொடர்ச்சியாக வரி வருவாயை வசூலிக்க வேண்டும் என்கிறார் பீஷ்மர்.

அத்துடன், எவ்விதம் மலர்ச் செடிகளுக்குச் சேதம் ஏற்படுத்தாமல் தேனீயானது தொடர்ந்து தேனை உறிஞ்சுகிறதோ, அதனைப்போல அரசனும் மக்கள் நோகாத வகையில் வரியை வசூலிக்க வேண்டும் என்றும் பீஷ்மர் கூறுகிறார். இந்த தேனீ உதாரணத்தை சாணக்கியரும் தனது பொருளியில் நூலான அர்த்த சாஸ்திர நூலில் எடுத்துரைத்துள்ளார். அதேநேரத்தில், மக்களைக் கசக்கிப் பிழியாமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை ‘கொடுங்கோன்மை’ என்ற அதிகாரத்தின் கீழ் மொழிந்துள்ள குறளில், திருவள்ளுவர் உதாரணங்களின்றி நேரடியாகவே கூறி எச்சரித்துள்ளார்.

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்று பிரித்துப் படித்து, பொருள் கொள்ள வேண்டும். முறையாக ஆட்சி செய்யாத மன்னனின் செல்வத்தை அழிக்கின்ற உண்மையான படை எது தெரியுமா? எதிரிகளின் படையல்ல. அவனது குடிமக்கள் தவறான அரசாட்சியால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அவர்கள் துயரத்தைப் பொறுக்க முடியாமல் அழுது புலம்புகின்ற கண்ணீர்தான் அந்த அரசனின் செல்வத்தை அழிக்கின்ற படைக் கருவியாக அமையும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர். மக்களிடம் வளமையை ஏற்படுத்தாமல், கசக்கிப் பிழிந்து வரி வசூலிப்பதிலேயே ஓர் அரசு குறியாக இருந்தால், எப்படி மக்களிடம் பொருள் சேரும்? மன்னனுக்கும் வந்து சேரும்? ஆகையால், வரி வசூல் என்பது மென்மையாக, எளிமையாக இருத்தல் வேண்டும்.

இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில், அதிகபட்சம் 90 சதவீத வருமான வரி வசூலிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் நேர்மையாக வருமானத்தைக் கூறினால், சம்பாதித்ததை எல்லாம் இழக்க வேண்டி வருமோ எனக் கருதி சிலர் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம். ஆனால் இந்த வரி விகிதம் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், தற்போது குறி்ப்பிட்ட வருமான வரி விலக்குகளை அளித்து, அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு அதிகபட்சம் 30 சதவீதம் மட்டுமே வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆகையால், தற்போதைய காலத்தில் வருமான வரி செலுத்துவதற்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை.

தற்போது வருமான வரி விகிதங்களும் குறைவு, அத்துடன் பல்வேறு வருமான வரிச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இந்தச் சலுகைகள் அல்லது வரி விலக்குகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் அவற்றின் பயன்களைத் துய்த்து, நாம் செலுத்த வேண்டிய வரித் தொகையைக் குறைத்துக்கொள்ளலாம். இனி, வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு, வரி விலக்குகள் குறித்துக் காண்போம் –{pagination-pagination}

வருமான வரி வரம்பு

முதலில் வருமான வரி செலுத்த வேண்டியதற்கான வரம்பை அறிவோம். நிகழ் நிதியாண்டுக்காக (2017-18) மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி, ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரி செலுத்தினால் போதும். இதற்கு முந்தைய நிதியாண்டுகளில் 10 சதவீதமாக இருந்த வரி விகிதம், தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவே, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எனில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கும் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அனைத்துப் பிரிவினரும், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, சுமார் ரூ.6 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவரை (60 வயதுக்கு உட்பட்டவர்) எடுத்துக்கொள்வோம். அவர், தனது முதல் ரூ.2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு மேல் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையான வருமானத்துக்கு, அதாவது அடுத்த படிநிலையில் உள்ள ரூ.2.50 லட்சத்துக்கு 5 சதவீத வரியாக ரூ.12,500 செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட ரூ.1 லட்சம் வருமானத்துக்கு 20 சதவீதமாக ரூ.20,000 செலுத்த வேண்டும். ஆக, மொத்தம் ரூ.6 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர், அரசுக்கு வருமான வரியாக ரூ.32,500 செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அவர்களது வயதுகேற்ற சலுகையின்படி இந்தத் தொகை குறையும்.

ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.1 கோடிக்கு உட்பட்ட ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத உபரி வரியும் (சர்சார்ஜ்), ரூ.1 கோடிக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 15 சதவீத உபரி வரியும் விதிக்கப்படும்.

எந்தவொரு மனிதனும் மரணத்தில் இருந்தும், வரி விதிப்பில் இருந்தும் தப்பிக்க முடியாது என்று அமெரிக்க அரசியல் சாசனத்தை இயற்றிய அந்நாட்டின் மாபெரும் தலைவரும், விஞ்ஞானியும், பொருளாதார மேதையுமான பெஞ்சமின் பிராங்க்ளின் ஒருமுறை கூறியிருக்கிறார். ஆனால், மரணத்தில் இருந்தும் மறைமுக வரியில் இருந்தும் தப்பிக்க முடியாது என்பது மட்டுமே உண்மை. நேர்முக வருமான வரி விதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள பலருக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்குப் பெயர்தான் வரி விலக்கு (டாக்ஸ் எக்ஸெம்ப்ஷன்).

இந்தியாவில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி-யின் கீழ் ஏராளமான வரி விலக்குச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பான ரூ.2.50 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்தில், இந்த 80சி மற்றும் துணைப் பிரிவுகளின் கீழ், ஒட்டுமொத்தமாக ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். (அதாவது சுமார் ரூ.4 லட்சம் வரை வருமான வரி விதிப்புக்கு உட்படாமல் இருக்கலாம்). இந்த விலக்குகளைப் பெற உரிய ஆவணங்களை அல்லது சான்றுகளைத் தர வேண்டும்.

80சி வருமான வரி விலக்குகள்

எல்ஐசி போன்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் செலுத்தப்படும் தொகைக்கு, வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ், ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. (வருமான வரிச் சட்டப் பிரிவு 10டி-யும் இதனை அனுமதிக்கிறது).

இதே 80சி பிரிவின் கீழ், பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.) திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது. 80சிசிடி பிரிவின் கீழ், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) மேற்கொள்ளப்படும் சேமிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.50 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.

80சிசிடி பிரிவின் கீழ் ஓய்வூதிய நிதியில் (பென்ஷன் ஃபண்ட்) இருந்து ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். 80சி பிரிவின் கீழ் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (எஸ்.சி.எஸ்.எஸ்.) மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்குச் சலுகை உண்டு.

அத்துடன் 80சி பிரிவின் கீழ், வீட்டு வசதிக் கடனைத் திரும்பச் செலுத்தும்போது அதற்கான அசல் தொகைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வருமான வரிவிலக்கு பெறலாம். (வட்டித் தொகைக்கு 24-ஆவது பிரிவின் கீழ் தனியாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது). இதேபோல் 80சி பிரிவின் கீழ், வங்கிகளில் இடப்படும் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகை (எஃப்.டி.) முதலீடுகளுக்கும் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.{pagination-pagination}

இதே 80சி பிரிவின் கீழ், பரஸ்பர நிதியமைப்புகளும் (மியூச்சுவல் ஃபண்ட்), வங்கிகளும், பங்கு முதலீட்டு அமைப்புகளும் செயல்படுத்தும் பங்குகள் சார்ந்த சேமிப்புத் திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ்.) இடப்படும் 3 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட முதலீடுகளுக்கும் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம். 3 ஆண்டு காலம் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு முறை முதலீட்டுக்கு மட்டுமின்றி தொடர் முதலீட்டுக்கும் (எஸ்.ஐ.பி.) இச் சலுகை உண்டு.

அதேநேரத்தில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழான வரி விலக்குகள் ஒவ்வொன்றிலும் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியாது. ஒன்றின் கீழோ அல்லது அனைத்துப் பிரிவுகளின் கீழோ ஒட்டுமொத்தமாக ரூ.1.50 லட்சம் வரை மட்டுமே வரி விலக்குப் பெற முடியும்.

பொதுமக்களிடம் சேமிப்புப் பழக்கத்தையும், எதிர்காலத்துக்கான முன்னேற்பாட்டுத் திட்டமிடல்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவர்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை அவர்களே தங்களது நலன்களுக்காகத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இத்தகு வருமான வரி விலக்குச் சலுகைகளை அரசு வழங்குகிறது. இதுபோன்ற சலுகைகள் சட்டப்பூர்வமாக வழங்கப்படுவதால், அவற்றைத் தெரிந்துகொண்டு, நன்கு புரிந்துகொண்டு வரி விலக்குச் சலுகை பெறுவதில் தவறுமில்லை, வெட்கப்படுவதற்கும் ஏதுமில்லை. ஆனால், சட்டப்படியும், தர்மப்படியும் கிடைக்கக்கூடிய இவ்வித சலுகைகள் அன்றி, அரசையும் மக்கள் சமுதாயத்தையும் ஏமாற்றி வரிகளை ஏய்த்துக் கருப்புப்பணம் சேர்ப்பதுதான் தண்டனைக்குரிய குற்றமாகும். வெட்கப்படக்கூடிய விஷயமுமாகும். ஆகையால், சட்டத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் மரியாதையுள்ள நல்ல மனிதர்கள் நேர்மையாக வருமான வரி செலுத்துவதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

உங்கள் வருமான வரியைச் செலுத்திவிட்டீர்களா, ஏதேனும் ஏமாற்றியுள்ளீர்களா என்று அரசு அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து, துருவித் துருவித் தேடிக் கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் நிலைமையை நல்ல குடிமக்கள் உருவாக்கமாட்டார்கள். மாறாக, தமது வருமானத்தில் வரி விலக்குகளும் இதர சலுகைகளும் போக, மீதி வருமானத்துக்கு உரிய வரியைத் தாமே மனமுவந்து செலுத்துவார்கள். இதனை வள்ளுவரே நாடு என்ற அதிகாரத்தில் நன்றாய் முன்மொழிந்துள்ளார்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்

கிறையொருங்கு நேர்வது நாடு. (733)

பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு (இறைவர்க்கு) இறை ஒருங்கு நேர்வது நாடு. பொறை என்றால் எவ்வளவு வலித்தாலும் நாம் பொறுத்துக்கொண்டு தாங்க வேண்டிய சுமை என்று பொருள். இப்படிப்பட்ட சுமைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து நாட்டுக்கு வருகின்ற வேளையிலே, அதனைத் தாங்கிப்பிடிக்கும் வகையில், காக்கக்கூடிய இறையாகிய அரசருக்கு அல்லது அரசுக்குக் கொடுபட வேண்டிய இறையாகிய வரி முழுவதையும், நேர்வது அதாவது மனமுவந்து அளிக்கக்கூடிய மக்கள் வாழ்வதே நாடு என்று கூறத்தக்கது என்கிறார் வள்ளுவர்.

இறைவனுக்கு நேர்ந்துகொண்டேன் என்று கூறி, முடிக் காணிக்கை மற்றும் இதர காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கம் இக்காலத்திலும் உண்டு. அதில் இருந்து நேர்த்திக்கடன், நேர்ச்சை ஆகிய சொல்வழக்குகள் உருவாகின. இறைவனுக்கு எவ்விதம் பக்திப் பெருக்குடனும், உள்ளம் ஒப்பியும் காணிக்கை செலுத்துகிறோமோ, அதுபோல அரசுக்கு அரைகுறை மனதுடன் அன்றி அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செலுத்த வேண்டிய காணிக்கையே வரி. ஆகையால், வரி செலுத்துவதில் பயம் கொள்ள வேண்டாம், பெருமை கொள்வோம்.

***{pagination-pagination}

துணைத் தகவல்

இன்னும் சில வரி விலக்குகள்

வருமான வரிச் சட்டம் 80சி மற்றும் அதன் துணைப் பிரிவுகளின் கீழ் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்குப் பெற முடியும். இதுதவிர, வேறு சில பிரிவுகளின் கீழ் கூடுதல் வரி விலக்குகளைப் பெறலாம். அவை குறித்து இப்போது காண்போம் -

80சிசிஜி – ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மிகாத வருமானமுள்ள இந்தியக் குடிமக்கள் யாரும் இந்தச் சலுகையைப் பெறலாம். இதன்படி, புதிதாக பங்குகளில் முதலீடு செய்யும் நபருக்கு அந்த முதலீட்டுத் தொகையில் 50 சதவீதம் வரை வருமான வரி விலக்குச் சலுகை உண்டு. ஆனால், இந்தச் சலுகைத் தொகையாக அதிகபட்சம் ரூ.25,000 வரை மட்டுமே விலக்குப் பெற முடியும். முதல் மூன்றாண்டுகளுக்கு இச் சலுகையைப் பயன்படுத்தலாம்.

80டி – தனது பெயரிலும், தனது வாழ்க்கைத்துணை மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் பெயரிலும் எடுக்கப்படும் மருத்துவக் காப்பீடுகளுக்காகச் செலுத்தப்படும் சந்தா (பிரீமியம்) தொகைகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை வருமான வரி விலக்கு உண்டு. மூத்த குடிமக்கள் எனில், ரூ.30,000 வரை விலக்குப் பெறலாம். வரி செலுத்துவோரின் பெற்றோருக்காகும் மருத்துவச் செலவுகளுக்காக அவர்களது வயது 60-க்கு உட்பட்டது எனில், கூடுதலாக ரூ.25,000 வரையும் 60 வயதுக்கு மேல் எனில் கூடுதலாக ரூ.30,000 வரையும் வரி விலக்கு உண்டு.

80டிடி – தன்னைச் சார்ந்துள்ள மாற்றுத்திறனாளி உறவினருக்கான மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக ரூ.75,000 வரை வருமான வரி விலக்குப் பெறலாம். கடுமையான பாதிப்பு (80 சதவீதத்துக்கு மேல் உடல் ஊனம்) உள்ளவர் என்றால் ரூ.1.25 லட்சம் வரை விலக்குப் பெற வழியுண்டு.

80டிடிபி – தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் ஆகும் மருத்துவச் செலவுகளுக்கான தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. அதிகபட்சமாக ரூ.40,000 வரை இச் சலுகையைப் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் எனில் ரூ.60,000 வரையும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் எனில் ரூ.80,000 வரையும் வரி விலக்குப் பெறலாம்.

80இ – தனக்கோ அல்லது தனது வாழ்க்கைத்துணைக்கோ அல்லது தனது குழந்தைகளுக்காகவோ உயர் படிப்புக்காக வாங்குகின்ற கடனுதவிகளுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகையை வருமான வரி விலக்குச் சலுகையாகப் பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 8 ஆண்டுகளுக்கு இவ்வாறு வட்டித் தொகைக்கு வரி விலக்குப் பெறலாம். அசல் தொகைக்கு வரி விலக்கு கிடையாது.

80ஜி – அறக்கட்டளைகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் சமூகப் பணிகளுக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு, 1961-ஆம் ஆண்டைய வருமான வரிச் சட்டப் பிரிவுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 100 சதவீதம் அல்லது 50 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும். தேசியப் பாதுகாப்பு நிதி, பிரதமரின் தேசிய நிவாரண நிதி, தேசிய விளையாட்டு நிதி, தேசிய கலாசார நிதி, கங்கைத் தூய்மை நிதி போன்றவற்றுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீதமும், பிரதமரின் வறட்சி நிவாரண நிதி, ஜவாஹர்லால் நேரு நினைவு நிதி, இந்திரா காந்தி நினைவு நிதி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 50 சதவீதமும் வருமான வரி விலக்கு தரப்படுகிறது. ரூ.2,000-க்கு மேற்பட்ட நன்கொடை ரொக்கமாக அன்றி காசோலையாகவோ இணைய வழியிலோ வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகையைப் பெறலாம்.

80ஜிஜி – வீட்டு வாடகைப் படி (ஹெச்.ஆர்.ஏ.) பெறாதவர்கள், வாடகை வீட்டில் தங்கியிருந்து அதற்கு அளிக்கும் வாடகைப் பணத்துக்காக இந்த வரி விலக்கைப் பெறலாம். இந்தச் சலுகையைப் பெறுவோர் அல்லது அவரது மனைவி அல்லது 18 வயதுக்குட்பட்ட அவரது குழந்தையின் பெயரில், அவர் பணிபுரியும் ஊரில் சொந்த வீடு இருக்கக் கூடாது. மாதம் ரூ.5,000 வீதம் ஆண்டுக்கு ரூ.20,000 அல்லது மொத்த ஆண்டு வருமானத்தில் 25 சதவீதம் அல்லது ஆண்டுக்கு வழங்கப்படும் வாடகைப் பணத்தில் இருந்து மொத்த வருமானத்தின் 10 சதவீதத் தொகையைக் கழித்தால் வரும் தொகை – இதில் எது குறைவோ அதனை வருமான வரி விலக்காகக் கழித்துக்கொள்ளலாம்.

80ஜிஜிசி – அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும், ரொக்கமில்லாத காசோலை உள்ளிட்ட வழிவகைகளிலான நன்கொடைப் பணத்துக்கு, இப் பிரிவின் கீழ் வரி விலக்குப் பெறலாம்.

80டீடீஏ – வங்கி சேமிப்புக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள தொகைக்குக் கிடைக்கும் வட்டித் தொகைக்கு இதன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.10,000 வரையான தொகைக்கு இச் சலுகை உண்டு. ஆர்டி, எஃப்டி போன்ற முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டித் தொகைக்கு இது பொருந்தாது.{pagination-pagination}

80யூ – மாற்றுத் திறனாளி (உடல் ஊனமுற்ற) வரி செலுத்துவோருக்கு இப் பிரிவின் கீழ் இந்த வரி விலக்கு வழங்கப்படுகிறது. கண் பார்வையின்மை உள்ளிட்ட உடல் குறைபாடுகள் மற்றும் மனநிலைக் குறைபாடு உள்ளவர் எனில் ரூ.75,000 வரி விலக்கு பெறலாம். பாதிப்பு மிகக் கடுமையானது எனில் அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை இச் சலுகை உண்டு.

பிரிவு 24 – சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்காக வாங்கப்படும் வீட்டு வசதிக் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது அதற்கான வட்டித் தொகைக்கு இந்த 24-ஆவது பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.

80இஇ – முதன்முறையாக வீடு வாங்குவோருக்கு மட்டும் இப் பிரிவின் கீழ் சிறப்பு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வீட்டு வசதிக் கடனுதவி பெற்று அசலைத் திருப்பிச் செலுத்துவதற்கு 80சி பிரிவின் கீழ் வழங்கப்படும் ரூ.1.50 லட்சம், செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு 24-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்படும் ரூ.2 லட்சம் ஆகிய வரி விலக்குச் சலுகைகள் போக, 80இஇ பிரிவின் கீழ் கூடுதலாக ரூ.50,000 வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வீட்டின் விலை ரூ.50 லட்சத்துக்குள்ளும், வாங்கிய வீட்டுக் கடனுதவியின் மதிப்பு ரூ.35 லட்சத்துக்குள்ளும் இருந்தால் இச் சலுகையைப் பெறலாம். இந்த வீட்டுக் கடனுதவி 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2017-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மேலும் சில விலக்குகள் – ஆயுள் காப்பீட்டுத் தொகை முதிர்வுக் காலத்தில் அல்லது சரண் செய்வதால் கிடைக்கும் தொகைக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 100 சதவீத வருமான வரி விலக்கு உண்டு. பணியாற்றும் நிறுவனத்திடமிருந்து ஊழியர் பெறுகின்ற விடுமுறைப் பயணப் படி (எல்டிஏ) தொகைக்கு உரிய சான்றுகளைச் சமர்ப்பித்து வருமான வரி விலக்குப் பெறலாம்.

அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) பெறும்போது கிடைக்கும் தொகைக்கு ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்.) இருந்து திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு திரும்பப் பெறப்படும் தொகைக்கு முழு வருமான வரி விலக்கு உண்டு.

முதலீடு செய்த பங்குகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருந்த பின் விற்கும்போது கிடைக்கும் லாபத் தொகைக்கு, நீண்டகால மூலதன ஆதாயம் என்ற வகையில், வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. பங்குகள் மற்றும் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் பேரிலான முதலீடுகளுக்குக் கிடைக்கும் லாப ஈவுத்தொகைக்கு (டிவிடெண்ட்) வருமான வரி விலக்கு உண்டு.

ஒருவருக்கு அவரது திருமணத்தின்போது வழங்கப்படும் மொய்ப்பணம் உள்ளிட்ட நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.

இந்தியாவில் தற்போது வாரிசுச் சட்டம் இல்லை. ஆகையால், முன்னோர் அல்லது பிறரிடமிருந்து உயில் மூலம் பெறப்படும் ரொக்கம், இதர வகை முதலீடுகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு வருமான வரி இல்லை. அதேநேரத்தில், உயிலின்படி பெயர் மாற்றத்துக்குப் பின்னர் கிடைக்கும் சொத்தாகிய முதலீட்டில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை அல்லது லாபத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT