கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்ப்ட்டுள்ளநர்.
காமன்வெல்த் போட்டிகள் 2018 ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்க சென்றுள்ள இந்திய வீரர்கள் கோல்டு கோஸ்ட் விளையாட்டு கிராமத்தில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்ஃபான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக காமன்வெல்த் போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. விளையாட்டு கிராமத்தில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 'முதல் விமானத்திலேயே ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் லூயிஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.
நடப்பு காமன்வெல்த் போட்டியில் “நோ நீடில் பாலிசி” விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் எழுவது இது இரண்டாவது முறையாகும்.
காமன்வெல்த் போட்டியின் துவக்க நாளின் போது, இந்திய பாக்சிங் அணியின் மருத்துவர், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை என கண்டனத்துக்குள்ளானார்.
இதையடுத்து, இந்திய அணித்தலைவர் விக்ரம் சிசோடியா, விதிகள் மீறப்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.