கஜா புயல் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (நவ.16) நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளதால். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர்களை தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு சார்பில் சீரமைப்பு பணிகளை முடக்கி விடப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்துறையை போர்க்கள அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கஜா புயலால் நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்படைந்துள்ளது. கஜா புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.