கஜா புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.
6 மாவட்டங்களில் 421 முகாம்களில் 81,948 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதமடைந்துள்ளன.
கடலூர் மாவட்டம் கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடலூரில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு, பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.