புதுதில்லி: நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிக்கான ஆரம்பமாக அமையும் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் கட்சியான பாஜக, வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோடியாக இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறது. பாஜகவிடம் இருந்து இந்த மாநிலங்களை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டது. நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிக்கான ஆரம்பமாக அமையும். ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மத்தியில் பெரும் கூட்டணியை உருவாக்க வழிவகுக்கும் என்று கூறினார்.
மேலும், பாஜகவை எதிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் முயற்சிக்கு விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும். கட்சிகளின் முன்னுரிமைகள் மக்களவைத் தேர்தல்களின் போது முற்றிலும் வேறுபட்டவை என்றும் மாநில அளவிலான ஏற்பாடுகள் பொதுத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறினார்.