சென்னை: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 7 -ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து அருகில் உள்ள மகளிர் காவல் நிலைத்தில், கடந்த ஜூலை 15-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பில் பணியாற்றிய லிப்ட் ஆப்பரேட்டர் ரவிக்குமார், காவலாளி சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது.