ஆணவக் கொலை முயற்சி: அந்தஸ்துதான் முக்கியமென வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை போலீஸில் சரண்
ஹைதராபாத்: மகளின் மகிழ்ச்சியை விட அந்தஸ்துதான் முக்கியமென ஆணவக் கொலை முயற்சியில் ஈடுபட்ட மகளின் தந்தை போலீஸில் சரண்டைந்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வரும் சந்தீப்(21), 6 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலி மாதவியை(18) கடந்த மாதம் கோயில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு மாதவியின் தந்தை நரசிம்மாச்சாரி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் உள்ளூர் போலீஸாரிடம் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மருமகன் சந்தீப்புக்கும், மகள் மாதவி இருவரையும் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்த நரசிம்மாச்சாரி, வீட்டிற்கு வருவதற்கு முன்பு புத்தாடை வாங்கிக்கொண்டு போகலாம் வாருங்கள் என அழைத்துள்ளார். மாமனார் மனம் மாறிவிட்டார் என நம்பி, தனது காதல் மனைவி மாதவியை இருச்சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு எஸ்.ஆர். நகர் கடைவீதிக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, மாதவியின் தந்தை வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த காதல் தம்பதியினர் வாகனத்தை நிறுத்தி இறங்கினர்.
அப்போது, சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த மாதவியின் தந்தை நரசிம்மாச்சாரி தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகள், மருமகன் இருவரையும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்துபோன் காதல் தம்பதியனரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாதவியின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.
இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகளின் மகிழ்ச்சியை விட, அந்தஸ்துதான் பெரிது என கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மாதவியின் தந்தை நரசிம்மாச்சாரி எஸ்.ஆர்.புரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். காவல்நிலையத்தில் தனது மகளின் மகிழ்ச்சியை விட, அந்தஸ்துதான் முக்கியம் என வாக்குமூலம் அளித்துள்ளார் நரசிம்மாச்சாரி.