கம்பலா: தான்சானியாவில் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியாவில் லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் கொண்டது. நேற்று வியாழக்கிழமை மதியம் உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு படகில் அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் முதலில் 37 பேரை மீட்டுள்ளதாகவும், பின்னர் 100க்கும் மேற்பட்டோர் மீட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகில் பயணம் செய்த பலரை காணவில்லை என்பதால் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தான்ன்சானியா, கென்யா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளால் சூழப்பட்டிருக்கும் பெரிய விக்டோரியா ஏரியில், மோசமான பராமரிப்பு மற்றும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக கூறப்படுகிறது.
கடந்த 1996 -ஆம் ஆண்டு இதே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 800 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2011-ஆம் ஆண்டு தான்சியாவின் இந்தியப் பெருங்கடல் கடற்கரையை ஜான்சிபார் அருகே ஏற்பட்ட விபத்தில் 200 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.