மதுரை: அதிமுக ஆட்சியையே அசைக்க முடியாத திமுகவால், நாட்டையே ஆளும் பாஜகவை விமர்சிப்பபது நகைப்புக்குரியது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்ற தமிழிசை, தமிழகத்தில் நடைபெற்றும் வரும் அதிமுக ஆட்சியையே அசைக்க முடியாத திமுகவால், நாட்டையே ஆளும் பாஜகவை விமர்சிப்பபது நகைப்புக்குரியது என்றார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது. இந்தியாவின் முக்கால்வாசி பகுதியில் காவி பரவி விட்டது, தமிழகத்தில் கண்டிப்பாக காவி மலரும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது. 22 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள மோடி ஆட்சியை அகற்ற முடியாது.
மேலும், இலங்கை இறுதிப்போரின்போது திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நாடகமாடி உள்ளது. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் திமுகவுக்கு முகவரி கிடையாது. சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார் எனக் கூறினார்.