மதுரை: தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறும் திமுகவினரின் ஆட்சிதான் ஊழலுக்காக கலைக்கப்பட்டது என்றும், அவர்களிடமே ஊழல் குறித்த கேள்விகள் கேட்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசுதான் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறும் திமுகவினரின் ஆட்சிதான் ஊழலுக்காக கலைக்கப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், ஊழல் குறித்த கேள்வியை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
எச்.ராஜா, கருணாஸ் குறித்த கேள்விக்கு, பொது வாழ்வுக்கு வந்து விட்டால் நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என பதில் அளித்தார்.