திருச்சி: தமிழகத்தில் பெண்களுக்கு பாகாப்பு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்று பேசுகையில், நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பெண்கள் முன்னேற்றத்திற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களோடு, பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றி விடுவதற்கான பல அம்சங்களை கொண்டுள்ளது.
ஆண் பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என கவலை தெரிவித்தார்.
நாட்டில் இயற்கை வளங்கள் அதிகயளவில் சரண்டப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகயளவில் நடைபெறுவதாக வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இவை நீடித்த வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 62 நீதிபதிகளில் 12 பேர் பெண்களாக கடந்த ஆண்டு இருந்து வந்தனர். நான் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, இந்த சிறப்பு நிலவியது. இந்திய நீதித்துறையில் உயர் பதவியில் பெண்கள் அதிக அளவில் வரவேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நீதிபதிகளாக பதவி ஏற்றது இதுவே முதல்முறை என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.