கருணாஸ் கைது: ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் கைது

நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 15


ராஜபாளையம்: நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். 

கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ-வுமான கருணாஸ் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசினார்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 


இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கருணாஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் ராஜபாளையத்தில் காந்தி சிலை முன்பாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com