ரஃபேல் போர் விமான விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் கருத்துக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்னம் செய்துள்ளார்.
பிரான்ஸ் நிறுவனத்துடன் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.1.30 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அக்கட்சித் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது.
பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இந்த விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. நமது விமானப் படைக்கு போர் விமானங்கள் தேவைப்படுவதால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட மாட்டாது. ரஃபேல் போர் விமானங்கள் நிச்சயம் இந்திய விமானப் படைக்கு வரும் என்றார் அருண் ஜேட்லி.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என கூறும் அருண் ஜேட்லியின் கூற்று முற்றிலும் சரியானது. எந்த முகம் உண்மையான முகம் என்று எப்படி கண்டுபிடிப்பது?
இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது, இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதியமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.
ரஃபேல் போர் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை'' என்று தெரிவித்துள்ளார்.