வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடன் விரைவில் மற்றொரு சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா நடத்தி வந்த அணு ஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை சோதனைகள் காரணமாக அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்குக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு, கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி செவ்வாய்கிழமை சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்எதிர் துருவங்களாக இருந்துவந்த அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்கள் பல களேபரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா-வடகொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உலக நாடுகள் உற்றுநோக்கிய இந்த சந்திப்பிற்கு பிறகு, வடகொரியாவின் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதாக வடகொரியா அறிவித்தது.
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் மற்றொரு சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.