நியூயார்க்: நான் இந்தியாவை நேசிக்கிறேன், எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி அக்டோர் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
நேற்று பல்வேறு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர், டிரம்ப் தலைமையில் உலக போதை பொருள் கடத்தல் தடுப்புக்கான கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, சுஷ்மா சுவராஜை வரவேற்று கட்டித் தழுவினார். அவரை அதிபர் டிரம்பிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து அவரிடம் பேசிய சுஷ்மா, பிரதமர் மோடியிடம் இருந்து அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துக்களை பெற்று வந்ததாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய அன்பையும் வாழ்த்துகளையும் என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு தெரிவியுங்கள்” என்று தெரிவித்தார்.
ஐநா பொதுச்சபையின் பல்வேறு கூட்டங்களில் பங்கெடுப்பதற்காக சென்றுள்ள சுஷ்மா, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.