எரிபொருள் தேவையில் 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்துள்ள நமது நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.22 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 78.69 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் நேற்று திங்கள்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் 85.89 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 78.26 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 14 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.86.13 ஆகவும், டீசல் 10 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.36 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை சமீப காலத்தில் தினம்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், சாமானிய, நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய 4 பெரு நகரங்களில் தில்லியில்தான் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.82.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.12 ஆகவும் உள்ளது. மற்ற முக்கிய பெரு நகரங்களில் இதனைவிட அதிக விலைக்கே பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் வரியை குறைத்தால், நிதிப் பற்றாக்குறை இலக்குகளை எட்ட முடியாது, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது பாதிக்கப்படும் என்ற காரணங்களைக் கூறி மக்கள் மீது சுமையை உயர்த்தி வருகின்றனர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடர்ந்து உச்சத்திற்கு உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார், லாரி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் சுருங்குமுகமாய் சுருங்கி வருகின்றனர்.