தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் வேன் ஒன்று சாலை ஒரத்தில் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவடம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே சாலை ஒரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 1 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.