மாட்டிறைச்சி மற்றும் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிவிப்புகள் முழு விவரம்:

விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணம் மத்திய அரசின் பரிசீலனையில்...
மாட்டிறைச்சி மற்றும் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிவிப்புகள் முழு விவரம்:

சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் விதிகள் - 2017 குறித்த உரை...

தமிழ்நாட்டில் பசு வதை தடுப்பு கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் மூலம், கடந்த 23.5.2017 அன்று, 1960 ஆம் ஆண்டைய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகள், 2017 வெளியிடப்பட்டது. இவ்விதிகள் மாட்டினங்களான பசு, எருது, எருமை, கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

இவ்விதிகளின் 22(b)(ii), 22(d)(ii) மற்றும் 22(e) பிரிவுகளின் படி, சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விதிகளின் பிரிவு 22(d)(iv) ன்படி, மாடுகளை வாங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிகளின் 8வது பிரிவின் படி மாநில எல்லைகளுக்கு 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விதிகளின் பிரிவு 22(e)(iii)ன் படி, மாட்டினைக் கொள்முதல் செய்தவர், அதனை மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விதிகளை  செயல்படுத்தத் தடை ஆணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் கடந்த 23.5.2017 அன்று மனுக்கள் (W.P.No.10128/2017 மற்றும் 10127/2017) தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற அமர்வு, இவ்விதிகள் செயல்படுத்துவதற்கு நான்கு வாரத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த விதிகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த திரு.அப்துல் பகீம் குரேஷி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு வரும் 11.7.2017 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு; இந்த விதிகளால் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்  திரு. ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. உச்சநீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தீர்ப்பிற்குப்பின் உரிய நிலைப்பாட்டினை இவ்வரசு எடுக்கும் எனவும் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசு செயல்படும் என்பதையும் இம்மாமன்றத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை ...

பள்ளிக் கல்வித் துறை:

சமுதாயத்தின் விளிம்பில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதார வளர்ச்சி பெற்று, ஏனையோருக்கு இணையாக உயர்வடைய வேண்டும் என்றால் அவர்கள் கல்வி வளர்ச்சி பெற வேண்டும். மாநிலம் முழுவதும் சிறந்த கல்வி அளிக்கப்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சி, அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும். எனவே தான் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில், மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடை, விலையில்லா பாட நூல்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா புத்தகப் பை, விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம் ஆகிய கல்வி உபகரணங்கள், ஒர் இணைக் காலணிகள், விலையில்லா மிதி வண்டிகள், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு போன்ற பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வந்தார்கள்.

மேலும், மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மொத்தம் 5,000 ரூபாய் கல்வி உதவித் தொகை போன்ற உன்னதத் திட்டங்களும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

1. வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hitech labs) ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை, அதாவது Smart Class room ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

3. பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இட வசதி தேவைப்படுகிறது. 

இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில், 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும்.

4. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

உயர்கல்வித் துறை...

பள்ளிக் கல்வித் துறைக்கு அளித்து வரும் அதே அளவு முக்கியத்துவத்தை உயர்கல்விக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அளித்து வந்தார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கடந்த 6 ஆண்டுகளில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் என 65 புதிய கல்லூரிகளும், ஸ்ரீரங்கத்தில் ‘தகவல் தொழில்நுட்ப பயிலகம் மற்றும் தேசிய சட்டப்பள்ளி’ ஆகியவை துவக்கப்பட்டுள்ளன. எனவே தான் உயர்கல்வியில் தேசிய மாணவர் சேர்க்கை விகிதம் 24.5 என இருந்தாலும், தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 44.3 ஆக உள்ளது. இதனால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

உயர் கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

1.கல்வியின் தரத்தினையும், மாணாக்கர்களின் அறிவுத் திறனையும் உயர்த்தும் பொருட்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் 2011-12-ஆம் கல்வியாண்டில் 7,17,442-ஆக இருந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை 2016-17-ஆம் கல்வியாண்டில் 9,85,974-ஆக உயர்ந்துள்ளது. இவ்வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் இரண்டாண்டுகளில் முடிக்கப்படும். இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டடங்கள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள்” என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கென, முதற்கட்டமாக இந்த ஆண்டு 105 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 105 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.

 2. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து உயர்கல்வி கற்பதை தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

3. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணாக்கர்கள், வேலைவாய்ப்பினை பெறுவதற்கு தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. மாநிலத்தில் பின்தங்கிய பகுதியை சேர்ந்த மாணாக்கர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணாக்கர்கள் மற்றும் அதிகளவில் மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18-ஆம் கல்வியாண்டிலிருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை...

இளைஞர்கள் நாட்டின் செல்வம். விளையாட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம், நேர்மையாக செயல்படும் பக்குவம் ஆகியவற்றை கற்றுத் தருவதுடன், வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனத் திண்மையையும் அளித்து இளைஞர்களை சிறந்த பண்புகளுடன் கூடிய மனிதர்களாக உருவாக்க உதவுகின்றன. எனவே தான் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கல்விக்கு அளித்த அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வந்தார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை குறித்த அறிவிப்புகள்:

1.காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டதால், இந்த வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் ஒன்று 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வளாகம் பார்வையாளர் மாடம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அறை, நிர்வாக அறை, பயிற்சியாளர் அறை, வீரர்கள் உடை மாற்றும் அறை, கழிவறைகள், சேமிப்பு அறை முதலான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

2.திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பயிற்சிக் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்படும்.
 
 3.‘கெனாயிங்’ மற்றும் ‘கயாக்கிங்’ எனும் நீர் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. தற்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இவ்விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச ‘ரெகெட்டா’ எனப்படும் மிகப்பெரிய அளவிலான படகு போட்டிகளை நடத்தும் மையமாக சென்னை திகழ்கிறது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில்,  ‘கெனாயிங்’ மற்றும் ‘கயாக்கிங்’ விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை...

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பது நமது பொது விநியோகத்  திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும். நாடு முழுவதும் செயல்படும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நாம் பின்பற்றினாலும் வருமான அடிப்படையினை கருத்தில் கொள்ளாமல், பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத்  திட்டம் தனிச்சிறப்பாக கருதப்படுகின்றது. இப்படிப்பட்ட புரட்சிகரமான முன்னோடி  திட்டங்களைத் தான் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு மக்களின் நலன் கருதி செயல்படுத்தினார்கள்.

இச்சிறப்பு மிக்க நமது பொது விநியோகத் திட்டத்திற்கு நம் கூட்டுறவு சங்கங்களே பக்கபலமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் இச்சங்கங்கள் வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்புகள்:

1. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தை முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டு, அதன் மூலம் குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர் கோரும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விவரம், மேற்படி இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், குடும்ப அட்டைதாரரால் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு அவர் பெற்ற பொருட்கள் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியல் (Bill) தற்போது வழங்கப்படுவதில்லை. இதை சரி செய்யும் விதமாகவும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட வேண்டுமென்பதாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரல்ரேகை படிப்பி (Finger Print Reader) மற்றும் அச்சுப்பொறி வழங்கப்படும்.

2. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வணிக வங்கிகளுக்கு இணையாக, விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் சேவையை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு நவீன வங்கி சேவையினையும் வழங்க நபார்டு வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு மைய வங்கியியல் கணினி சேவை முறை (Core banking Solution) 134.67 கோடி ரூபாய் செலவில் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. கூட்டுறவு நிறுவனங்களில், சொந்த அடிமனை இருந்தும், வாடகைக் கட்டடங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையை செயல்படுத்திட, இந்த ஆண்டில் 114 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 23 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். மேலும், மதுரை மாவட்டம், விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70 இலட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டப்படும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே சேவை அளிக்கும் பொருட்டு திருச்சி மற்றும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 15 புதிய கிளைகள் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களின் தோற்றப் பொலிவினை அழகுபடுத்தும் பொருட்டு, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவும், வணிக வங்கிகளுக்கு ஈடாக கூட்டுறவு சங்கங்களின் சேவையை வழங்க 27 கூட்டுறவு நிறுவனங்கள் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.

4. சிறு வணிகர்கள், தனியாரிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெறுவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் சிறு வணிகக் கடன் உச்ச வரம்பினை 10,000/- ரூபாயிலிருயது 25,000/- ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சென்னையில் அண்ணாநகர், நந்தனம், திருவான்மியூர், தங்கசாலை மற்றும் கோபாலபுரம் ஆகிய 5 இடங்களில் கிடங்கு வளாகங்கள் உள்ளன. அவற்றில் 86,068 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இருப்பு வைத்துக் கையாளப்படுகிறது. இதிலிருந்து சென்னை மாநகரை சுற்றிலும் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் பொது விநியோக திட்டத்திற்கான பொருட்கள் நகர்வு செய்யப்படுகின்றன. உணவு தானிய சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவினை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகரை ஒட்டியுள்ள மாதவரம் பகுதியில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விஞ்ஞான முறையிலான, இயந்திர கையாளுமை திறனுடன் கூடிய நவீன சேமிப்புக் கிடங்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் கட்டப்படும்.

6. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு 9.82 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சொந்தக் கிடங்குகளும், பிற நிறுவனங்கள் மற்றும் தனியாரிடமிருந்து வாடகை அடிப்படையில் 2.27 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள கிடங்குகளும் சேர்த்து 288 கிடங்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இக்கிடங்குகளின் சேமிப்பு கொள்ளளவு தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால், இவற்றின் கொள்ளளவினை அதிகப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் 14 சொந்த இடங்களில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சூரிய ஒளி கூரை கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

7. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 25 கிடங்கு வளாகங்களுக்கு உட்புற சாலை வசதி, சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, ஓய்வு அறை மற்றும் அடிப்படை வசதிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

8. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 40 வருட தொடர் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய 15 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகளும், 6 அங்கு பணிபுரியும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் மற்றும் வாகன ஒட்டுநர்களின் நலன் சார்ந்த பணிகளும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பாக அறிவிப்புகள்... 

1. வன வளத்தையும், வன உயிரினங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வனப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வன உயிரினத் தாக்குதலால் உயிரிழக்கும் துயர நேர்வுகளிலும், வனக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடனான மோதல்களில் உயிரிழக்க நேரிடும் நேர்வுகளிலும், வீர தீர செயல் மற்றும் எதிர்பாராத அசம்பாவித சூழ்நிலை போன்ற நேர்வுகளிலும், காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற இழப்பீட்டுத் தொகைக்கு இணையாக வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

2. 2013 முதல் 2015 வரையிலான காலத்திய இந்திய வன அளவை நிறுவனத்தின், வன அறிக்கையின்படி நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும், வனம் மற்றும் மரங்கள் அடங்கிய பரப்பளவு தமிழகத்தில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. தமிழகத்தினுடைய வன வளத்தை மேலும் பாதுகாக்கவும் அவ்வுணர்வினை அனைவரிடமும் வளர்க்கவும், வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற மலைவாழ் மக்களுடைய இயற்கைச் சார்ந்த வாழ்க்கை முறையினை தற்கால சந்ததியினருக்கு, குறிப்பாக, மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களை இயற்கைச் சுற்றுலா  திட்டத்தில் முழுமையாக பங்கேற்கச் செய்து அவர்களது வேலைவாய்ப்பை பெருக்குவதுடன், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் வகையிலும் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலாக் கொள்கை, 2017 உருவாக்கப்படும்.

3. பவானி ஆறு, நீலகிரி மலையில் உற்பத்தியாகி காவிரி ஆற்றில் கலக்கின்றது. இந்த ஆற்றின் நீர் 90 சதவீதம் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பாசனத்திற்கு பயன்படுகின்றது. மேலும், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பவானி ஆறு விளங்குகிறது. பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வடிகால் கழிவுநீர் வெளியேற்றத்தால் ஆற்று நீரில் ஏற்படும் தாக்கத்தை கண்காணிக்கும் வண்ணம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தற்போது மாதம் ஒருமுறை நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்கின்றது. ஆற்று நீரின் தன்மையை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கத்துடன் நடப்பு நிதியாண்டில் பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்நிலையங்கள் தலைமை அலுவலகம் மற்றும் உரிய மாவட்ட அலுவலகங்களுடன் இணைய வழியாக இணைக்கப்படும்.

ஆதார நூல்கள்:

1. தமிழ்நாடுசட்டபேரவை எண்: 016 நாள் : 20.06.2017

2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை – நாள் 19.6.2017

கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள:  9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com