‘மின்னலுக்கு பயந்தவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ வினோத காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இந்தியாவில் திருமணங்கள் இப்படி பொசுக்கென நிறுத்தப்படுவது கேலிக்குரியது மட்டுமல்ல அவமானத்துக்குரியதும் கூட.
‘மின்னலுக்கு பயந்தவனை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ வினோத காரணம் சொல்லி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!


பிகார் மாநிலத்தில் கடந்த வெள்ளியன்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று மின்னலைக் காரணமாக வைத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. திருமணத்தை நிறுத்தியவர் மணப்பெண். காரணம் தனக்கு கணவராக நிச்சயிக்கப்பட்டவர் மின்னல் வெட்டும் போதெல்லாம் அதிகமாகப் பயந்து வித்யாச முகபாவங்களுடன் பயத்தை வெளிப்படுத்துவதும் வினோதமாக நடந்து கொள்வதும் தன்னால் சகித்துக் கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்ல. அதனால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுங்கள் என இரு வீட்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் அறிவித்திருக்கிறார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் வெகுண்டெழுந்து பெண் வீட்டாருடன் தகராறில் இறங்க அங்கே நிலவரம் கலவரமாகி இருக்கிறது. இவர்களது திருமணம் இருவீட்டாரால் நிச்சயிக்கப்பட்டு திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் சிலவற்றையும் செய்து முடித்தபின் மணப்பெண் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி திருமணத்தை நிறுத்தியிருப்பதை தங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது என மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்ததில் விஷயம் காவல்துறை கவனத்துக்குச் சென்றதோடு இணையத்திலும் சந்தி சிரிக்கிறது.

இதுவரையிலும் பெண் வீட்டார் சார்பாக மணமகன் வீட்டாரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் எக்ஸ்ட்ரா ரஸகுல்லா கேட்ட காரணத்துக்காக பெண்ணின் நெருங்கிய உறவினருக்கும், மணமகனின் ஒன்று விட்ட சகோதரருக்குமான வார்த்தைப் போரில் வாய்த்தகராறு தடித்து சண்டையாக மாற அந்தத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த வருட ஏப்ரலில் அதே உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகரில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணமொன்றில், ஆகப்பெரிய காரணமாக முன் வைக்கப்பட்டது மணமகன் வீட்டாருக்கு கறிவிருந்து பரிமாறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.

2017 ஜூன் மாதம் நிகழ்ந்திருக்க வேண்டிய திருமணமொன்றும் கூட இதே விதமாகத்தான் உப்புச் சப்பில்லாத காரணமொன்றைக் கூறி தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கான காரணமாக முன் வைக்கப்பட்டது. மணமகன் பார்ட்டியில் ஆடிய நாகின் நடனம் தன்னைப் பயமுறுத்தும் விதத்தில் இருப்பதால் தன்னால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாதெனக் கூறியிருந்தார் மணப்பெண்.

இதே போல 2016 ஆம் ஆண்டிலும் கூட ஒரு திருமணம் ஐஸ்கிரீமுக்காக ரத்து செய்யப்பட்டது. திருமணத்தன்று மண்டபத்தில் ஐஸ்கிரீமுக்காக மணமகன், மணமகள் வீட்டாருக்கிடையே மூண்ட சண்டையில் இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து சலித்துப் பிறகு செங்கல்லால் தாக்கிக் கொள்ள முனைந்த போது காவல்துறைவந்து சேர்ந்து இரு தரப்பையும் பிரித்து விட்டு சிலரைக் கைது செய்ததோடு அந்த திருமணம் நின்று பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் திருமணங்கள் இப்படி பொசுக்கென நிறுத்தப்படுவது கேலிக்குரியது மட்டுமல்லம் அவமானத்துக்குரியதும் கூட.

ஆனாலும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com