அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். காவிரிப் பிரச்னை நடைபெற்று வரும் நேரத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கும் தமிழக ஆளுநரின் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான்
ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை.
துணைவேந்தர் பதவிக்குமா
ஒரு தமிழருக்குத் தகுதியில்லை?
இதுபோன்ற செயல்களெல்லாம்
தமிழகத்தைத்
தனிமைப்படுத்தவா?
தனிப்படுத்தவா?
என்று தனது எதிர் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்திலுள்ள கல்வியாளர்களையும் அறிஞர்களையும் புறம் தள்ளி அரசியல் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணைவேந்தர் பதவிகளில் நியமிப்பது எவ்வகையில் நியாயம் என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளும் விமரிசனங்களும் எழுந்து வருகின்றன. எரிதழலாக எட்டுத் திக்கும் பிரச்னைகள் சூழ்ந்திருக்கும் நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டுவிட்டது காலத்தின் சோகம்.