மதுரைக்கு 40 கி.மீ தொலைவில் உள்ள [மதுரை ராமநாதபுரம் மெயின் ரோட்டில் திருபுவனத்தில் திரும்பி 5 கி.மீ செல்ல வேண்டும்] பழையனூரில் உள்ள திரு சந்தான கருப்பையா தான் எங்கள் குலதெய்வம்.
அவர் எப்படி எங்கள் குலதெய்வமானார் என என் தந்தை திரு கோபிநாதன் கூறிய விவரம்.
என் தகப்பனார் திரு கோபிநாதன் தந்தை வழி பாட்டனார் திரு ராமசாமி ஐயர் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் திவானாய் இருந்தாராம்.
திவான் என்ற முறையில் வெவ்வேறு சுற்றுவட்டாரங்களுக்குச் சென்று 'வரி - கிஸ்தி' என வசூலித்தல் அவரது முக்கிய பொறுப்பாகும்.
ஒருநாள் அவ்வாறு வசூலித்த பணத்துடன் மாட்டு வண்டியில் பழையனூர் அருகே வரும் போது, அந்தி சாயும் நேரத்தில் திடீரென கொள்ளையர்கள் சூழ்ந்து கொள்ள, என்ன செய்வதென்று அறியா நிலையில், ஏதோ ஒரு தெய்வ சக்தியால் 'கருப்பையா... காப்பாற்று’ என கூவத் தோன்றியதாம். அப்படி கூவி அழைத்தவுடன் கையில் அரிவாளுடன் [ கருப்பையா கையில் எப்போதும் அரிவாள் உண்டு] எங்கிருந்து வந்தார் என அறிய இயலாமல் ஒருவர் ஆஜானுபாகுவாய் வந்து தனி ஒருவனாய் கொள்ளையர்களை விரட்டி அடித்து விட்டு, திரு ராமசாமி ஐயரிடம் சிறிது விபூதியை கொடுத்து விட்டு 'இனி பயம் இல்லை போ' எனக் கூறிவிட்டு மறைந்து விட்டாராம்.
திவான் வந்து பத்திரமாக அரசாங்க கஜானாவில் பணத்தை செலுத்திவிட்டு, வீட்டில் இதைச் சொல்ல, எல்லோரும் சேர்ந்து இது திரு கருப்பையா சுவாமியின் அருளாசி தான் என உணர்ந்து அன்று முதல் [திருபுவனம் அருகில் உள்ள பழையனூர்] கருப்பண்ண சுவாமி தான் குல தெய்வமாக ஏற்று இன்று வரை நாங்கள் எல்லோரும் வழிபாடு செய்வதுடன், எல்லா நல்ல காரியங்களுக்கும் இயன்றவரை நேரில் சென்று வழிபாடு செய்கிறோம்.
என் தந்தை திரு கோபிநாதன் அண்ணா திரு சந்தானம் மகன் திரு மணியப்பா எனும் B K Mani [ பரமக்குடி பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணி ஓய்வு பெற்று இப்போது ராமநாத புரத்தில் இருக்கிறார்] என்பவர் தான் கோயிலை பராமரிக்கிறார். நாங்கள் சைவம் என்பதால் நாங்கள் பூசைக்கு வருவதை முன் கூட்டியே அங்குள்ள பூசாரிக்கு தெரிவித்து செல்வதால் அன்று மட்டும் கருப்பண்ண சாமிக்கு கிடா வெட்டுதல் இருக்காது.
கணபதி சுப்பிரமணியன், பெங்களூர்.