ருசிகர்கள் கவனத்துக்கு... அதிகக் காரமான மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் நம் வயிற்றுக்குள் என்ன நடக்கும்?!

நீங்கள் உண்டு முடித்த சில மணி நேரங்களில் வயிற்று உபாதை, தலைச்சுற்றல், வாந்தி என தொடர்ச்சியான விளைவுகள் ஏற்பட்டால் அவை பிரச்னைக்குரிய அறிகுறிகளே என உணர வேண்டும்.
ருசிகர்கள் கவனத்துக்கு... அதிகக் காரமான மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் நம் வயிற்றுக்குள் என்ன நடக்கும்?!

சிலருக்குச் சாப்பாட்டில் எப்போதுமே மசாலா தூக்கலாக, உப்பும், உரைப்புமாக வாசம் எட்டூருக்கு மணக்கும் விதத்தில் சமையல் அமைந்தால் தான் ரசித்து, ருசித்துச் சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். சைவமோ, அசைவமோ அது எந்த விதமான சமையல் என்றாலும் அதில் கொஞ்சமேனும் சூடு, சுரணையைத் தூண்டும் விதத்தில் எக்கச்சக்க மசாலா கலந்தால் தான் அது சமையலென்றே சிலர் ஒத்துக் கொள்வார்கள். சோற்றில் உப்புப் போட்டுச் சமைக்க மறந்ததற்காக, மனைவி சமைத்த ஒரு பானைச் சோற்றையும் இரக்கமின்றி அப்படியே கொண்டு போய் சாக்கடையில் கொட்டிய மகானுபாவர்கள் நிறைந்த நாடு நம்முடைய நாடு. நமது சரித்திரத்தை திரும்பிப் பார்த்தோமெனில் அறுசுவையில் ஒரு சுவை குறைந்ததற்காக மூண்ட போர்கள் கூட சில இருக்கக் கூடும். அந்த அளவுக்கு நாம் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். தென்னிந்தியா என்றாலே மசாலா உணவு வகைகளுக்குப் பெயர் போன ஒரு பிரதேசமாகத்தான் இன்றளவும் அயல்நாடுகளில் நமக்காக அடையாளம் பிரசித்தி அடைந்து வருகிறது. 

சரி... ஆனால் அதிகக் காரம், அதீத மணமும் உண்மையில் சூடு, சுரணையைத் தூண்டக்கூடியது தானா? அப்படியே தூண்டினாலும் அது நமது உடல்நலனுக்கு உகந்தது தானா? என்று மருத்துவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒரே வரியில்; எதுவானாலும் ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று பழைய பல்லவியைத்தான் பாடி அனுப்புவார்கள். ஆனாலும் வடிவேலு பாணியில் சொல்வதென்றால், உப்பும், உரைப்புமாகச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டு நாக்கை வளர்த்து வைத்திருப்பவர்கள் எல்லோரும் அவரவர் சுட்டு விரலை தன்னைத்தானே சுட்டிக் கொண்டு ‘உனக்குத் தேவையா? இந்த அவஸ்தை உனக்குத் தேவையா? அதான் பெரியவங்க முன்னமே சொல்லி இருக்காங்களே, அளவாச் சாப்பிடனும்னு, அதையெல்லாம் மறந்து விட்டு கார, சாரமாக வாரி, வழித்துக் கொட்டிக் கொண்டு நெட்டை விட்டதன் பலன் தான் இன்றைக்கு ‘அல்சர், டயோரியா, கொலஸ்ட்ரால், பிளட் பிரஸ்ஸர், இதய வால்வுகளில் கொழுப்பு அடைப்பு முதல் கடைசியாக உணவுக்குழாய் கேன்சர் வரை பல பிரச்னைகளில் சிக்கி அவஸ்தைப்படும் நிலை வரை கொண்டு விட்டிருக்கிறது’ என்று நொந்து கொள்ள வேண்டியது தான்!

அதற்காகக் கார, சாரமாகச் சாப்பிட நினைப்பதே தவறு என்று சொல்ல முடியாது. அப்படிச் சாப்பிட்டால் கடைசியில் இப்படியெல்லாம் மோசமான விளைவுகள் ஏற்பட்டே தான் தீரும் என்று பயமுறுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமில்லை. ஆரோக்யத்தை நிலைக்கச் செய்வதில் ‘வருமுன் காப்போம்’ என்ற தத்துவம் இருக்கிறதே, அதன் அடிப்படையில் அதிகக் காரமும், மணமும் சேர்த்துக் கொள்வதை வாடிக்கையாக ஆக்கிக் கொண்டால் நம் வயிற்றுக்குள் என்னவெல்லாம் நடக்கக் கூடும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே?!

1. அமிலச் சுத்திகரிப்பு...

தாராளமாக நெய் வார்த்துச் சுட்டெடுத்த பஞ்சு போன்ற மெத்து மெத்தெனும் கல்தோசையில் பரவலாகக் கார, சாரமான கறிக்குழம்பை ஊற்றி ஊறவைத்துச் சாறு வழிய, வழிய கறித்துண்டுகளை ஆசை தீர மென்று கணக்கற்ற கல்தோசைகளை விழுங்குவது நாவுக்குப் பரம சுகமாக இருக்கலாம். சைவப் பிரியர்கள் எனில், ஸ்பைஸியான பிஸிபேளாபாத்தும் (நெய் விட்ட சாம்பார் சாதத்தைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்) தொட்டுக் கொள்ளப் பேபி பொடேட்டோ( குறு உருளை மசாலாக்கறி) வறுவலும் போதும். அந்த நேர போஜனத்தில் ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம். ஆனால், இதில் நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மேற்கண்ட கார, சாரமான உணவுப் பொருட்களில் இயல்பாகவே அமிலத்தன்மை அதிகமிருக்கும். நம் வயிற்றுக்குள்ளும் நாம் உண்ணும் உணவுகளைச் செரிப்பதற்காக இயற்கையாக சுரக்கும் அமிலம் உண்டு. இரண்டு அமிலங்கள் புதிதாக ஒன்றிணையும் போது என்ன ஆகும்? அமிலத்தன்மை அதிகமாகும், செரிமானத்தை மீறி அமிலத் தன்மை அதிகரிக்கும் போது அபிரிமிதமான அமிலங்கள் வயிற்றுலுள்ள உணவுப் பொருட்களையும் தாண்டி இரப்பையின் சுவர்களையும் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி விடும். இதை உணவு  உண்டதுமே ஏற்படும் தொண்டை காந்துதல் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் மூலமாக எளிதில் நாம் அடையாளம் காணலாம். சரி இரப்பைச் சுவரை அமிலம் அரித்தால் என்னவெல்லாம் ஆகும்? அதை, அடுத்த பாயிண்ட்டில் தெரிந்து கொள்ளுங்கள்.

2.இரப்பைப் புண்...

நம் இரைப்பையில் மட்டுமல்ல இரப்பையின் நீட்சியாக நீளும் சிறுகுடல், பெருகுடல் பகுதிகளிலும் உண்டு செரிக்கப்பட்ட உணவு எளிதில் வழுக்கிச் சென்று மலக்குடலில் சேர மியூகோஸல் திரவம் எனும் கொழ, கொழப்பான திரவமே உதவும். இந்தத் திரவத்தை இரைப்பை தானே உற்பத்தி செய்து கொள்ளும். இந்தத் திரவமே இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைச் சுவரைத் தாக்காமலும் பாதுகாக்கக் கூடியது. கார, சாரமான உணவுப் பொருட்களில் இருக்கும் அமிலங்களின் முதல் வேலையே இந்த திரவத்தை நீர்க்கச் செய்வது தான். அதன் கொழ, கொழப்பான தன்மை நீர்த்துப் போகும் போது ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படும் அதன் திறன் குறைகிறது. இதனால் இரைப்பைச் சுவர்கள் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து சிறுகுடல் மற்றும் உணவுக் குழாய்ப் பகுதியும் அதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கப் படுகிறது. அதன் காரணமாக வருவதே கேஸ்ட்ரிக் அல்சர் என்று சொல்லப்படக் கூடிய இரைப்பைப் புண்கள். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை காரசாரமான உணவுகளை எடுத்துக் கொள்வதால் இப்படியான பாதிப்புகள் வந்தே தீரும் என்று சொல்ல முடியாது. மசாலா நிறைந்த காரமான உணவை தினமும் நெடுநாட்களாக தொடர்ந்து சாப்பிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள் எனில் இதைக் குறித்து தெரிந்து கொண்டு உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அல்சர் இருந்தால் அதை அதிகரிக்கச் செய்து மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தத் தக்க குணம் உங்களது உணவுப் பழக்கத்துக்கு நிச்சயம் உண்டு. அதற்கான அறிகுறிகள், நீங்கள் உண்டு முடித்த சில மணி நேரங்களில் வயிற்று உபாதை, தலைச்சுற்றல், வாந்தி என தொடர்ச்சியான விளைவுகள் ஏற்பட்டால் அவை பிரச்னைக்குரிய அறிகுறிகளே என உணர வேண்டும்.

3. பசியிழப்பு...

மேற்சொன்ன அறிகுறிகள் மட்டுமல்ல, நீங்கள் தொடர்ந்து காரமான, மணமாக உணவுப் பொருட்களை மூவேளை தவறாது போஜனமாகக் கொண்டால் முதலில் உங்களுக்கு பசி மந்தித்துப் போகும். அதோடு ஒருவேளை பசித்தாலும் கூட சாப்பிடத் தோன்றாத அளவுக்கு வயிற்று உபாதைகள் இருக்கும். இது ஒருவித குழப்பமான நிலை. மிதமிஞ்சிய நிலை என்றும் கூட சொல்லலாம். அப்படியான நிலையில் வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என்ன செய்யும்? நீங்கள் பசித்தும் உண்ணாத போது, இரைப்பை அமிலங்கள் உங்கள் இரைப்பைச் சுவற்றை கொஞ்சம், கொஞ்சமாகச் செரிக்கத் தொடங்கி விடும். அதனால் இரைப்பையைச் சோதிக்காத மிதமான மசால உணவுகளை மட்டும் வாரம் ஓரிரு முறைகள் உண்பதை மட்டும் வழக்கமாக்கிக் கொண்டால் உடல்நல உபாதைகளில் இருந்து தப்பலாம்.

4. கடுமையான இரைப்பை அழற்சி... 

இரைப்பை அழற்சி என்பது முன்னரே சொன்னவாறு, இரைப்பையைப் பாதுகாக்கும் மியூகோஸல் திரவப் பரப்பில் வீக்கம் ஏற்படுவதால் உண்டாகக் கூடிய பாதிப்பு. ஒருவருக்குக் கடுமையான இரப்பை அழற்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை அவருக்கு ஏற்படும் செரிமானப் பிரச்னைகளை வைத்தே அடையாளம் கண்டு கொள்ளலாம். வாந்தி, வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல் இத்யாதிகளோடு மலம் கழிக்கையில் ரத்தமும் கலந்து வெளியேறினால் அவர்களுக்கு கடுமையான இரப்பை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆக... கார, சாரமாகச் சாப்பிட்டால் மேற்கண்ட மோசமான பின்விளைவுகள் எல்லாம் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண இரைப்பைப்புண் (அல்சர்), பசி மந்தம், வாயுத்தொல்லை என்று கவனிக்காமல் விட்டுவிட்டுத் தொடர்ந்து நமக்குப் பிடித்தவகையில் நாக்குக்கு ருசியாக ஓவர் ஸ்பைஸி உணவுப் பொருட்களை அதிகளவில் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் அப்புறம் உணவுக்குழாய் கேன்சரில் கொண்டு விடும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை.

சிலர் விதண்டாவாதமாக சொல்லக் கூடும், எங்க சிய்யானெல்லாம் அந்தக் காலத்துல ‘என் ராசாவின் மனசிலே‘ ராஜ்கிரண் மாதிரி தினமும் காரசாரமா எலும்பு கடிப்பாராக்கும், அவருக்கெல்லாம் 90 வயசு வரை எந்த நோவுமே வரவே இல்லை. ஆண்டு, அனுபவிச்சு கடைசியில் சும்மா ஜம்முனு தூக்கத்துலேயே உயிர் பிரிஞ்சது’ என்று. வாஸ்தவம் தான். சிலருக்கு அப்படிக் கொடுப்பினை இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் எப்படியெல்லாம் மெனக்கெட்டிருப்பார்கள் என்றும் யோசிக்க வேண்டும். உண்டது இரும்பே என்றாலும் ஜீரணிக்கத் தக்க பல உணவு மருந்துக் குறிப்புகள் நமது பாரம்பரிய சமையலில் உண்டு. அவர்கள் அந்த அடிப்படையிலான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியிருப்பார்கள், இல்லாவிட்டால் எத்தகைய சூரரையும், நோயாளியாக்க வல்லதே மசாலா நிறைந்த காரமான உணவுப் பொருட்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com