செய்திகள்

திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 2

கோவை கருப்பசாமி

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணத்தின் தலைநகர் இது. தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம். முன்னொரு காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சேஷன் மேரு மலையைத் தன் உடலினால் பிணித்து நின்றான். வாயு தன் பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்றைப் பெயர்த்து எறிந்தான்.

அவற்றில் ஒன்று திருக்காளத்தியிலும், மற்றொன்று திருச்சிராப்பள்ளியிலும், மூன்றாவது திருக்கோணமலையிலும் வீழ்ந்தன. இங்ஙனம் வடகயிலைப்பகுதியாகிய மேருமலையின் சிகரங்கள் வீழ்ந்த காரணத்தால் இவை தென்கயிலாயங்கள் எனப்பெற்றன. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணம் குறிப்பிடுகின்றது.

தல அருமை

இமயமலையின் ஒரு பகுதியே கோணேஸ்வர பர்வதம் என்ற நம்பிக்கை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சண கைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சாவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் எனும் நூலில் குறிப்பு இருக்கிறது.

தமிழ் மொழிப் புலவர்களான திருஞான சம்மந்தர், திருமூலர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம் மேன்மையானது. கி.மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ராவணன் பூஜித்து வந்ததாக மட்டக்கிளப்பு மானியத்தில் குறிப்புக்கள் உள்ளன. இதற்கு ஆதாரமாக அனைவரும் குறிப்பிடுவது அங்குள்ள ராவணன் வெட்டு என்ற ஒரு பாறை இடுக்கு ஒன்றைத்தான்.

கோணேஸ்வர மலையில் ஒரு பெரிய பாறைப் பிளவு உள்ளது. அந்த பிளவிற்குக் காரணம் ஒரு விசேஷ லிங்கத்தை அவரது தாயாரின் பூஜைக்காக எடுத்து வருவதற்காக கைலாசத்துக்கே சென்றான். 

சிவபெருமானிடம் இருந்து இருமுறை சிவலிங்கத்தை பெற்றுக் கொண்டு வந்த ராவணன் வரும் வழியில் ஏமார்ந்து போய், தான் எடுத்து வந்த லிங்கத்தைத் தவறவிட்டவர். ஆகவே மூன்றாம் முறையாக  திருக்கோணேஸ்வரர் சிவாலயத்தில் இருந்து சக்தி வாய்ந்த சிவலிங்கத்தை எடுத்து வரச் சென்ற ராவணன், பூமியில் இருந்த அதை அங்கிருந்து எடுக்க முடியாததால் லிங்கம் இருந்த அந்த இடத்தை பெயர்த்துக் கொண்டு வந்தான். இதனால்தான் மலையில் அந்தப் பிளவு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.

ராவணன் பல அறிய வரங்களைப் பெற்று ஆட்சியில் இருந்தவன். மிகப் பெரிய சிவ பக்தனாகவும் இருந்தவன். நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தவன் காலம் செல்லச் செல்ல அவனுக்குக் கிடைத்திருந்த வரங்களினால், இனி நம்மை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பு கொண்டான். இதோடு அகங்காரம் பிடித்தவன் ஆயினான். தேவர்களையும் அவ்வப்போது துன்புறுத்தி வந்தான். ஆனால் இவன் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்று இருந்ததினால் இவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதினால் மனம் புழுகிக் கொண்டு இருந்தார்கள்.

சிவ பூஜையை ராவணன் மட்டும் செய்யவில்லை. ராவணனின் குடும்பமே சிவபக்தர்கள் ஆவார்கள். அதிலும் அவனது தாயாரான கைகேசி சிவபெருமானின் பெரிய பக்தையாவாள். அவள் நாள் தவறாமல் சிவபூஜை செய்து வருபவள். இந்த நிலையில் ஒரு நாள் ராவணனின் தாயார் கைகேசி நெல்லைக் குத்தி அரிசியை எடுத்து அதை மாவாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். தாயாரிடம் சென்று இதற்கான காரணத்தைக் கேட்டான்.

அதற்கு அவன் தாயார்...மகனே, நீ இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகையும் ஆண்டவாறு, உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாதவாறு இருக்கவே நான் தினமும் ஆயிரம் மாவிலான லிங்கங்களை செய்து, அதைக் கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கு அவற்றுக்குப் பூஜை செய்து விட்டு கடலில் கரைத்து விட்டு வருகிறேன். நான் பூஜித்தப் பின் கடலில் கரைக்கும் சிவ லிங்கங்கள் பல்லாயிரக்கணக்கான சிவ கணங்களாக கடலில் வாழ்ந்திருந்து அரணைப் போல உனது ராஜ்யத்தைக் காத்து வரும்.

இந்த ஆயிரம் மாவு லிங்கங்களுக்கு இணையான சில சிவலிங்கங்கள் கைலாயத்தில் சிவபெருமானிடம் உள்ளது. அவற்றில் ஒன்று கிடைத்தாலும் நான் செய்யும் பூஜைக்கு இணையாக இருக்கும். ஆனால் அதை யார் கொண்டு வர முடியும் என்பதினால் இப்படி என்னால் முடிந்ததை உனக்காகச் செய்கிறேன் என்று கூறினாள். அதைக் கேட்ட ராவணன் வருத்தம் அடைந்தான். தனக்காகத் தனது தாயார் செய்யும் பூஜைக்கு தன்னால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என நினைத்தவன்...

தாயாரிடம்... அம்மா! மகன் நான் இருக்க நீ ஏன் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு மாவிலான சிவலிங்கங்களை செய்து பூஜித்து வருகிறாய்? நான் கைலாயத்துக்கு சென்று அந்த  சிவலிங்கத்தை  சிவபெருமானிடம் இருந்து வாங்கிக் கொண்டு வருகிறேன்’ எனச் சூளுரைத்து விட்டு கைலாயத்துக்கு சென்றான்.

கைலாயத்துக்குச் சென்றவன் அதன் வாயிலில் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவனும் தனது தாயாரின் ஆசையைக் கூற அதைக் கேட்ட  சிவபெருமானும் வேறு வழியின்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கொடுத்து, இந்த லிங்கத்தை கைலாயத்திலிருந்து தந்தப் பின் இதை எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றார் ஈசன்.

ஆயிரம் மாவு லிங்கங்களை செய்து அவன் தாயார் பூஜித்ததை விட, பல்லாயிரக்கணக்கான வருடங்கள், பல கோடி தேவர்களால் ஐந்து வேளை பூஜை செய்து சக்தியூட்டப்பட்ட ஈசனுடைய ஆத்ம  லிங்கங்களில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்திருந்தான். எனவே, எந்த இடத்திலாவது நீ பூமியில் அதை வைத்துவிட்டால், இதைத் திரும்ப எடுக்க முடியாது என்றும் அதன்பின் அதன் சக்தி அதனுள் அங்கேயே அடங்கி இருக்கும் என்று கூறி அனுப்பினார்.

இதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள். இதை எடுத்துக்கொண்டு சென்று அதைப் பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சி நாரதரிடம் சென்று அதை தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டார்கள். அவரும் அந்த தேவர்களுடன் சென்று விநாயகரை வேண்டித் துதித்தார்கள். விநாயகரும் அவர்கள் முன்னால் பிரசன்னமாகி அவர்களுக்கு உதவுவதாகக் கூறினார்.

இதற்கேற்ப அவர் ஒரு வயதான பிராமண உருவில் சென்று ராவணனை வழியில் குறுக்கிட்டு சந்தித்தார். சிவ லிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி  சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணனின் கவனத்தை சற்றே கலைய வைத்தார் விநாயகர். தன்னையே அறியாமல் புத்தி தடுமாறியவன் தான் சென்று கொண்டு இருந்த பாதையை மறந்து வேறு வழியில் செல்லத் துவங்கினான்.

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வழி தவறி சென்று கொண்டு இருந்த ராவணனுக்கு வழியில் ஒரே தாகம் எடுத்தது. ஆனாலும் வைராக்கியமாக சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு கமண்டலத்தில் தண்ணீருடன் சென்ற பிராமண உருவில் இருந்த விநாயகரைப் பார்த்தான். அவர் அருகில் சென்று தான் வழி தவறி வந்து விட்டதாகவும், தான் இலங்கைக்குச் செல்ல வேண்டிய வழியைக் காட்டுமாறும் வேண்டிக் கேட்டுக் கொண்டான் இராவணன்.

பின், தனக்கு தாகமாக உள்ளதினால் குடிக்க சிறிது தண்ணீர் தர முடியுமா என்றும் கேட்டான். இதையே எதிர்பார்த்துக் காத்திருந்த விநாயகர் அவனுக்கு ஒரு கமண்டலம் தண்ணீரைக் கொடுத்தார். தனது மடியில் லிங்கத்தை வைத்துக் கொண்டே நீரைக் குடித்தபின் அவரிடம் பேசிக் கொண்டே செல்லத் துவங்க அவன் வயிற்றிலே சென்ற நீர் பெரும் ஆறு போல வயிற்றில் பெருக்கெடுக்கத் துவங்க  அவனுக்கு சிறுநீர் உபாதை வந்துவிட்டது.

ஆகவே தன்னுடன் வந்து கொண்டிருந்த பிராமண உருவில் இருந்த விநாயகரிடம் அந்த சிவ லிங்கத்தைக் கீழே வைக்காமல் வைத்துக் கொண்டு இருக்குமாறு கூறி விட்டு சிறுநீர் உபாதையை கழிக்கச் சென்றான். அவன் வருவதற்குள் விநாயகர் அந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு மறைந்து விட்டார்.

விநாயகர் லிங்கத்தை வைத்த அந்த இடம் பாட்னாவின் அருகில் உள்ள வைத்யநாத் ஆலயம் உள்ள இடமாகும். இங்குதான் ராவணன் ஏமாந்து போய் விநாயகரிடம் தந்து, அதை‌ அவர் கீழே வைத்த  ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான வைஜ்யநாத் எனும் லிங்கம் உள்ளது. சிறுநீர் கழித்துவிட்டு வந்தவன் அந்த சிவ லிங்கத்தை எடுக்க முடியாமல் திணறினான். தான் ஏமார்ந்து விட்டதை நினைத்து வருந்தினான். எத்தனைக் கஷ்டப்பட்டு வந்து இப்படி ஏமாந்து விட்டோமே என எண்ணி வருந்தினான்.

மீண்டும் கைலாயத்துக்கு சென்று இன்னொரு சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வரத் தவம் இருக்கலானான். மீண்டும் கைலாயத்துக்கு சென்ற இராவணன் இதன் வாயிலில் அமர்ந்து கொண்டு மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த முறையும் அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அவனும் நடந்ததைக் கூறி  தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதையும் கூறிய பின் மீண்டும் அது போன்ற சிவலிங்கமே தனக்கு வேண்டும் எனக் கேட்க சிவபெருமானும் வேறு வழியின்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து கொடுத்தார். மீண்டும்  முன்னர் கூறியபடியே இதை நீ எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றும், மீண்டும் தவறாக எந்த இடத்திலாவது அந்த ஆத்ம லிங்கத்தைப் பூமியில் அதை வைத்து விட்டால் அதைத் திரும்ப எடுக்க முடியாது என்றும் எச்சரித்து அனுப்பினார்.

லிங்கத்தை எடுத்துக் கொண்டு நாடு திரும்பிவரும் ராவணனை நினைத்து மறுபடியும் தேவர்கள் அஞ்சினார்கள். வாங்கிக் கொண்டு வரும் இந்த லிங்கத்தை இராவணன் பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சியவர்கள் மீண்டும் நாரதரிடம் சென்று இதையும் தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டனர்.

நாரதரும், விநாயகரின் உதவியை நாட, இதனால் இந்த முறை விநாயகர் வேறு வழியைக் கையாள வேண்டி வந்தது. இந்த முறை இராவணன் லேசில் ஏமாற மாட்டான் என்பதை விநாயகருக்கு நன்றாகத் தெரியும். எனவே, விநாயகர் ஒரு ஆட்டு  இடையன் போல வேடம் அணிந்து கொண்டு இராவணன் வரும் வழியில், அவனுக்கு முன்னமே போய் அமர்ந்து கொண்டார்.

சிவலிங்கத்தைக் கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கிச் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தான் இராவணன். இம்முறை வழியில் தாகம் எடுத்தாலும் தண்ணீரைக் குடிக்கக் கூடாது என்ற திடத்துடன் இருந்தான். மனதை இறுக்காக வைத்துக் கொண்டு அதை அலைபாயாத வண்ணம் சிவா நாமத்தை உச்சயித்தவாரே வைராக்கியத்துடன் சென்று கொண்டு இருந்தான். இப்போது, இராவணன் கர்நாடகாவின் கோகர்ணம் உள்ள இடத்தை அடைந்து விட்டான். இன்னும் சற்று தூரம்தான், இலங்கை வந்து விடும். ஆனால் அதற்குள் விநாயகரின் ஏற்பாட்டின்படி வாயு பகவான் திடீர் என அந்த இடத்தில் அதிக குளிரை தோற்றுவிக்கச் செய்தார்.

கோகர்ணத்தை அடைந்த ராவணனுக்கு குளிரினால் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டது. கையிலோ லிங்கம், அதை எங்கு வைப்பது? ஆனால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் குளிரினால் சிறுநீர் அவதிவேறு ஏற்பட்டு விட்டது. லிங்கத்தை வைத்துக் கொண்டும் சிறுநீர் கழிப்பது தவறு என்றும், அப்படிச் செய்தால் இதன் சக்தி விலகி விடும் என்பதையும் இராவணன் தெரிந்து வைத்திருந்தான். மேலும், செய்வதறியாது திகைத்தவன், அப்போது அங்கிருந்த ஆட்டு இடையனைப் பார்த்துவிட்டான்.

அவனைக் கூவி அழைத்தான் இராவணன். இதுதான் சமயம் என காத்திருந்த விநாயகரான ஆட்டிடையன் இராவணன் முன் வந்தார். இந்த லிங்கம் பூஜைக்கான லிங்கம். இதை கீழே வைத்தால் இதற்கு தோஷம் ஏற்பட்டுவிடும். ஆதலால் சற்று நேரம் இதை நீ உன் மடியில் வைத்துக் கொண்டு இருந்தால் அதற்குள் தான் சிறுநீர் உபாதையை விலக்கிக் கொண்டு வந்து விடுகிறேன் எனக் கெஞ்சினான்.

அந்த இடையன் வேடத்தில் இருந்த விநாயகரும் இதற்கு ஒப்புக் கொண்டார். இராவணனோ இந்த முறை தான் ஏமாறக் கூடாது என்றெண்ணிக் கொண்டு, பத்தே நிமிடம் அதை வைத்திருக்குமாறும், அதற்குள் சிறுநீர் கழித்து விட்டு வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றான். இராவணனும் நான் வரும்வரை இதை நீ கீழே வைக்கக்கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டு சிறுநீர் கழிக்கச் சென்றான். இதற்கு, ஆட்டு இடையனான விநாயகரும் கைநீட்டி ராவணனிடமும் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டார்.

அந்த சத்தியமானது......

பத்து நிமிடம் ஆன பின், நான் மூன்று முறை தான் குரல் கொடுப்பேன் என்றும் அதற்குள் வராவிடில் இதை கீழே வைத்து விட்டு தான் சென்று விடுவேன் என்றும் கூறினார். இராவணனும் இதற்கு ஒப்புக் கொண்டு சத்தியம் செய்துவிட்டுப் சென்றான். பத்து நிமிடம் கழிந்தது. இராவணன் வரவில்லை. ஆட்டு இடையன் மூன்று முறை குரல் கொடுத்தார்.

இன்னும் இருபதடி தொலைதூரம் இருக்க, கொடுத்த சத்தியத்தின்படி அந்த ஆட்டு இடையன் அதை கீழே வைத்து விட்டார். இதுவே தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள "கோகர்ணம்" எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் வினாயகர் வைத்த ஆத்ம லிங்கம் ஆகும்.

முதல் முறை கிடைத்த லிங்கம் பீகார் மாநிலத்தில் "வைஜ்யநாத்" ஆலயத்தில் தங்கிவிட்டது. இப்போது இரண்டாம் முறைக் கிடைத்த லிங்கமும் "கோகர்ண" ஆலயத்தில் தங்கி விட்டது. இந்த முறையும் காரியம் கெட்டு விட்டதே என ஓடோடி வந்த ராவணன் கோபமுற்று, அந்த ஆட்டு இடையனை வெட்ட தன் கத்தியை உருவியபோது, அந்த ஆட்டு இடையன் ஓடத் துவங்கினான். அப்போது விஷ்ணு பகவான் ஒரு வயதானவர் உருவில் அங்குத் தோன்றி, நில்….ராவணா …..நில்! தவறு செய்யாதே, நில்…… எனக் கத்தியபடி ஓடி வந்து ராவணனைத் தடுத்து நிறுத்தினார்.

சத்தியத்தை மீறுவது முறையா என்று கேட்க ராவணன் வெட்கி தலை குனிந்தான். இரு முறை  தான் எப்படி எல்லாம் ஏமாந்து போனேன் என்பதை விவரமாகக் கூறிவிட்டு, மீண்டும் மூன்றாம் முறையாகக் கைலாயத்துக்கு சென்று சிவலிங்கத்தைப் பெற்று வரத் தீர்மானித்து விட்டதாகக் கூறியவுடன் அந்த வயதான மனிதர் அவனைத் தடுத்து நிறுத்தி நகைத்தவாறு கூறினார். இராவணா, இந்தச் சுலபமான காரியத்துக்கு நீ ஏன் தேவை இல்லாமல் கைலாயத்துக்குப் போக வேண்டும்? உன் ராஜ்யமான இலங்கையின் தென் பகுதியிலேயே பிரம்மா படைத்து வைத்துள்ள தக்ஷிண கைலாயம் எனும் மலைப் பருவத்தில் ஏராளமான லிங்கங்கள் உள்ளதே! அது உனக்குத் தெரியாதா? அதன் நடுவில் உள்ள மிகப் பெரிய சிவலிங்கம் சிவபெருமானே வந்து ஸ்தாபித்த ஆத்ம லிங்கமாகும்.

அனைத்து லிங்கங்களை விட சிவபெருமானே வந்து அமர்ந்துள்ளார். அதல்லவா மேன்மையான லிங்கம். அதை எடுத்துப் போய் பூஜிப்பதை விடுத்து வேண்டாத காரியத்தை ஏன் செய்கிறாய் என்றார்.

அடடா…என் ராஜ்யத்திலேயே அந்த ஆத்ம லிங்கம் இருக்கிறதா?, இந்நாள் வரை இது தெரியாமல் போய் விட்டதே! என எண்ணி வருந்திய இராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது தேரில் ஏறிக் கொண்டு இலங்கையின் தென் பகுதியில் இருந்த தக்ஷிண கைலாயத்தை அடைந்தான். அந்த வயதான மனிதர் கூறிய இடத்திலேயே அதி சுந்தரமான சிவலிங்கம் சூரி ஒளியினால்  மின்னிக் கொண்டு இருந்ததைக் கண்டான்.

அவன் கண்கள் கூசும் அளவிற்கு அது பளபளப்பாக இருக்க, இதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினான். இதோ சமுத்திரக் கடலில் குளித்து விட்டு அதை எடுத்துப் போகிறேன் என மனதுக்குள் கூறிக் கொண்டு கடலில் சென்று குளித்து விட்டு வந்தான். குளித்து விட்டு வந்தவன் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் பூமியில் இருந்த அதை எடுக்க முடியாமல் திணறினான். ஆகவே வேறு வழி இன்றி அதை அந்தப் பூமியுடன் சேர்த்து பெயர்த்துக் கொண்டு போவது என முடிவு செய்து விட்டு அந்தப் பூமியை தனது வலிமைமிக்க வாளினால் ஓங்கி வெட்ட அந்த இடத்தில் இருந்த பூமி லிங்கத்துடன் சேர்ந்து பிளக்க, லிங்கத்தை அந்தப் பிளவுடன் சேர்த்து அதை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்ல முனைந்தான்.

அப்போது....................‌‌

(மேலும் அடுத்து, மூன்றாவது தொடரில்.........)

          
-கோவை.கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT