திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 4

திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 4

உலகெங்கும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால்..

தல அருமை

உலகெங்கும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் வேறு எந்த ஆலயமும் திரிகோண மலையில் உள்ள  திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் போல சிறப்பைப் பெற்று இருக்கவில்லை. இதற்குக் காரணம் குளக்கோட்ட மன்னன் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படும் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் இரண்டு ஆலயங்களாக உருவாகி உள்ள நிலையே ஆகும். 

ஆலயம் இரண்டாக உருவாகி உள்ளதா?...ஆச்சர்யமாக இருக்கிறதா? 

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் போலவே அந்த இடத்தின் அருகில் உள்ளதம் பலகமலம் எனும் இடத்திலும் இன்னொரு திருக்கோணேஸ்வரர் அமைந்திருந்ததே ஆகும். அந்த இரண்டு ஆலயத்திலுமே ஒரே மாதிரியான விழாக்கள், நித்திய பூஜைகள், அபிஷேகங்கள் போன்றவை நடைபெற்றன.

பண்டைய காலத்தில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த மன்னர்களும் பிற நாடுகள் மீது படையெடுத்து வந்து  நாட்டை பெரிதாக்கிக் கொண்ட நிலையில் குளக்கோட்டான் மட்டும் இலங்கையில் இருந்து  திரிகோணமலைக்கு வந்தது நாட்டைப் பிடிக்கும் ஆசையில் அல்லாது, மாறாக திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை நிறுவுவதற்காகவே என்பதை அறியும்போது ஆச்சர்யம்தான்.

முன்னொரு காலத்தில் இந்தியாவின் சோழ மண்டலத்தில் மனு நீதியைச் சேர்ந்த அரசர் ஒருவர் நல்லாட்சி செய்து வந்திருந்தார். அவர் பெயர் வரராமதேவர் என்பதாகும். அவர் பெரும் சிவபக்தர். அடிக்கடி அனைத்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருபவர். மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்திருந்த வரராமதேவர் ஒருமுறை மச்சேந்திரபுராணத்தில் கூறப்பட்டு இருந்த கோணேசர் ஆலயத்தின் பெருமை பற்றிப் படித்து அறிந்தார்.

ஆகவே அந்த ஆலயத்தில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இலங்கைக்கு வந்து திருகோணேசரை தரிசனம் செய்து விட்டுச் சென்றார். ஆலயத்தில் வந்து திருக்கோணேஸ்வரரை வழிபட்டவர், அதன் மீது அதிக பக்தி கொண்டு அடிக்கடி அங்கு வரலானார். ஒவ்வொரு முறையும் இங்கு அவர் வந்தபோது அவர் பெரும் செல்வத்தை கொண்டு வந்து அந்த  ஆலயத்தில் இருந்த கிணறு ஒன்றில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் சென்றார். இதற்குக் காரணம் எந்தக் காலத்திலாவது அந்த செல்வத்தைக் கண்டெடுப்பவர்கள் அந்த நிதி உதவியைக் கொண்டு அங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டும் என்ற ஆசையினால் அவர் அப்படிச் செய்தார்.

அவரே அந்த நிதியைக் கொண்டு ஆலயத்தை அமைக்க வேண்டியதுதானே? அதைவிடுத்து ஏன் கிணற்றில் கொண்டு நிதியைப் போட்டு வைத்தார்? என் கேள்வி எழுகிறதுதானே.........

அவர் ஆலயத்தை அமைக்க முடியாமல் இருந்ததின் காரணம்....அவர் அங்கு வந்து வழிபட்ட நேரத்தில் அவருக்கு வாரிசு எதுவும் இருக்கவில்லை. தான் ஒரு ஆலயத்தை அமைக்கத் துவங்கி தனக்கு இறுதிக் காலம் வந்து விட்டால், இந்த ஆலயப் பணிகள் அப்படியே நின்று விடக் கூடுமே! மேலும் அந்நிய நாட்டில் இருந்த இந்த இடத்தில் ஆலயத்தை அமைக்க அந்த நாட்டில் இருந்த மன்னர்களின் ஆதரவும் இல்லை என்றால், ஆலயப் பணிகளை மேற்கொள்ள முடியாது.

ஆலயத்தைப் பாதுகாக்க தக்கப் படை பலம் தேவையாக இருக்கும். அந்த நேரத்தில் கலிங்க நாட்டுடன் இணைந்திருந்த அந்தப் பகுதியையும் ஆண்டு வந்த மன்னனோ சோழநாட்டு மன்னர்களுடன் நல்ல உறவு கொள்ளாமல் இருந்தார்கள். ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே தனக்குப் பிறகு சோழ நாட்டை ஆளத் தகுதியானவர் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட அந்நிய நாட்டில் வந்து ஒரு ஆலயத்தை அமைக்க முடியும் என்று எண்ணி செல்வத்தை கிணற்றில் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்தார் .

அந்த காலங்களில் ஆலயம் எனக் கூறப்பட்டவை என்பது இப்போது உள்ள கோபுரத்தை போன்றக் கட்டிட அமைப்பைக் கொண்டவை கிடையாது. திறந்த வெளிகளில் இருக்கும். பல இடங்களிலும் இருந்த ஆலயம் என்பது அந்த காலங்களில் மேற்கூரை இல்லாமல், கட்டிடங்கள் இல்லாமல் பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சில உருவங்களோடு இருந்த இடங்களாகும்.

அப்படி சுயம்பு விக்ரகங்கள் இருந்த இடங்கள் விசேஷமான சக்தி பெற்று விளங்கும். தேவ லோகத்தினர் அமைத்தவை என்ற பரவலான நம்பிக்கைகளும் உண்டு. இந்த நிலையைக் கொண்டதே பிரம்மா வடிவமைத்த, வாயு பகவானால் எடுத்துவந்து வைக்கப்பட்ட தக்ஷிண கைலாய மலையில் அமைந்திருந்த திருக்கோணேஸ்வரர் ஆலயமும் ஆகும்.

இங்கிருந்த ஆத்மலிங்கத்தை கோணேஸ்வரர் என அழைத்து வணங்கி வந்துள்ளனர். அப்போது திறந்த வெளியில் இருந்த ஆத்மலிங்கம் அமைந்திருந்த வனப் பிரதேசத்தையே ஆலயம் என அழைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதையே வழிபாட்டுத் தலமாக கடவுள்கள், யோகிகள், ரிஷி முனிவர்கள் என அனைவரும் கருதி இங்கு வந்து வழிபட்டார்கள்.

சிவபெருமானே ஆத்மலிங்கமாக அங்கு எழுந்திருந்ததினால் அங்கு வந்து அவரை வணங்கி வழிபட்டனர். இதுவே பின்னாளில் ஆலயமாக குளக்கோட்டான் எனும் மன்னனால் அமைக்கப்பட்டது என்கிறார்கள். மனுநீதி கண்டசோழ வரராமதேவர் அங்கு கொண்டு வந்து ரகசியமாக வைத்து விட்டுச் சென்று இருந்த அந்தச் செல்வங்கள் அனைத்தையும் அங்கிருந்த பூத கணங்கள் பாதுகாத்து வந்தன.

இப்படி இருந்த காலத்தில் சோழ மண்டலத்தில் அரசாண்டு வந்த வரராமதேவருக்கு சிவபெருமானின் அருளினால் குளக்கோட்டான் பிறந்தார். குளக்கோட்டான் பிறந்ததின் காரணம் சிவபெருமானின் அருளே என முழுமையாக நம்பிய வரராமதேவர் மறைவுக்குப் பின்னர் ஆட்சியை அவர் ஏற்றார், அவருடைய மகனான குளக்கோட்டான். ஒருமுறை பூத கணங்கள் மூலம் அவரது தந்தை சேமித்து வைத்திருந்த செல்வத்தைப் பற்றியும், திருக்கோணேஸ்வர சிவலிங்கத்தின் மகிமையும் தெரிந்து கொண்டார்.

இங்கு வந்து திருக்கோணேஸ்வரரை வணங்கலானார். அப்போது அவர் தனது தந்தையார் கிணற்றில் பதுக்கி வைத்து விட்டுச் சென்று இருந்த செல்வத்தை பூத கணங்களின் உதவியுடன் கண்டு பிடித்தார். பின், அந்த செல்வத்தைக் கொண்டே தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு பிரம்ம லோகத்தில் உள்ளதைப் போன்ற அழகான ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க ஏற்பாடு செய்தார்.

ஆலயம் ஸ்தாபிக்க முடிவு செய்த உடன் இதற்கென சோழ நாட்டில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட அமைப்பு தொழிலாளர் குடும்பங்களையும் வரவழைத்தார். அவர்களை இங்கு குடி அமர்த்தினார். தான் ஆலயம் அமைக்க இருந்தது அந்நிய தேசத்தில் என்ற பயமும் இல்லை. அந்த எண்ணமும் அவருக்கு ஏற்படவில்லை. பொற்குவியல் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு பல மாத காலம் பாடுபட்டு கோணேசர் ஆலயத்தில் மஹா மண்டபம், நுழைவு மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்னதான சத்திரம், மறைகளை ஓதுவார் மடம் என ஆகியவற்றைப் பெரிய அளவில் அமைத்தார்.

இத்துடன் அங்கேயே அன்னை உமாதேவிக்கு ஒரு தனி ஆலயத்தையும் உருவாக்கி அதன் பாதுகாப்புக்காக அதைச் சுற்றி மதிலையும் கட்டினார். மானிடப் பிறவியில் பெறும் பாவங்களை நீக்கிக் கொண்டு இறையருள் பெறப் பாவநாசம் எனும் ஒரு புனித தடாகத்தை அங்கேயே உருவாக்கினார். சிவபெருமான்  நீராடுவதற்கு என ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தார். அத்தனை பக்தி ஈசன் மீது அவருக்கு இருந்தது.

கோணேசர் ஆலயத்தைத் தரிசிக்க வருகை தரும் முனிவர்கள், துறவிகள், அடியார்கள் போன்றோர்கள் தங்குவதற்கும் பெரும் மண்டபங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கினார். ஆலயத்தை மட்டும் நிறுவாமல் அதை அடுத்து பெரிய நீர்த் தேக்கத்தையும், திரிகோண மலையைத் தொட்டவாறு  இருந்த தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்குத் தண்ணீர் தரும் நீர்ப்பாசனத் திட்டத்தையும் அமைக்க எண்ணினார்.

எண்ணியவருக்கு அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது விளங்கவில்லை. காரணம் இரண்டு மலைப் பகுதியில் இருந்த இடத்தில் இதை நிறைவேற்ற அவரிடம் போதிய ஆள்பலம் இல்லை. இதை  எப்படி அமைப்பதென்ற திட்டமும் விளங்கவில்லை. அதுவும் போதாது என்று அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சிறிய சிக்கல் ஒன்றும் ஏற்பட்டது. ஆலயம் வடிவமைக்கப்பட்டு வந்திருந்த நேரத்தில் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னனின் வாரிசாகப் பிறந்திருந்த ஆடகசௌந்தரி என்ற பெண், ராஜ்ய பரிபாலனத்தை ஏற்று இருந்தாள்.

அவள் அதிகாரத்தில்தான் திரிகோணமலைப் பகுதியும் இருந்து வந்தது. ஆனால் அந்தப் பிரதேசம் வனப்பகுதியாக யாரும் அதிகம் செல்லாத பகுதியாக இருந்தது. இதனால் அங்கெல்லாம் அரசுப் படையினர் இருப்பதில்லை. மேலும் இந்து சமயமும் அதிக அளவு அங்கு கால் ஊன்றி இருக்கவில்லை. இதனால் இராவணன் வந்து வழிபட்ட தலம், ரிஷி முனிவர்கள் வந்து தவம் உள்ள இடம் மற்றும் பிரம்மா அமைத்திருந்த இடம் போன்ற எந்த செய்திகளும் அதிகம் மக்களின் கவனத்தில் இல்லாதிருந்தது.

இந்த இடத்தின் மகிமையை அறிந்திருந்த சொற்ப அளவிலான மக்கள் மட்டும் அங்கு வந்து ரகசியமாக வழிபட்டவாறு இருந்து வந்தனர். இப்படி இருக்கையில்தான் அவள் அதிகாரத்தில் இருந்த பகுதியில் அவள் கட்டளையைப் பெறாமல் அந்நிய தேசத்து மன்னன் ஒருவன் வந்து பெரிய ஆலயம் அமைக்கின்றான் என்கிற செய்தி அவளுக்குச் செல்கிறது. செய்தி கிடைத்து அதைக் கேள்விப்பட்டதும் அவள் உடனே தனது அமைச்சரை பெரும் படையுடன் அனுப்பி அந்த ஆலயத்தை இடித்துத் தள்ளி விட்டு வருமாறு அனுப்பினாள். 

ஆனால் திரிகோண மலைக்கு வந்த அவளது அமைச்சரோ, தேவலோகத்தைப் போலவே ஜொலித்துக் கொண்டிருந்த அங்கிருந்த ஆலய நிலையைப் பார்த்து பிரமித்துப் போயினர். தனது அரசி செய்ய இருந்த தவற்றை உணர்ந்தார். அந்தத் தேவலோக ஆலயத்தை இடிப்பதை விட அந்த மன்னனையே தனது அரசிக்கும் கணவராக ஏற்பாடு செய்து விட்டால் நல்லது நடக்கும் என எண்ணம் கொண்டனர்.

நாடும் வளம் பெருகும் அல்லவா என நினைத்தார்கள். இதை மனதில் கொண்டு இரு நாட்டு அரசர், அரசியிடமும் தூது போய், நல்லவற்றை எடுத்துக் கூறி, நியாயத்தை எடுத்துரைத்தனர். தேவ காரியத்தை மனதில் கொண்டே எதுவும் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக எடுத்துரைத்து அவர்களுடைய திருமணம் நடைபெற ஏற்பாடு செய்தார்கள். இப்படியாக குளக்கோட்டான் மற்றும் ஆடகசௌந்தரி  இருவரின் திருமணமும் நல்ல முறையில் நடைபெற்று இரு நாடுகளுக்கும்  இடையே நல்லுறவும் வளர்ந்தது.

திருமணம் முடிந்ததும் தனது மனைவியிடம் அந்தப் பிரதேசத்தின் வழமையைப் பெருக்க நினைத்துள்ள தனது திட்டத்தை எடுத்துக் கூற அவளும் அதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்புத் தந்தாள்.

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் இருந்த பூத கணங்களின் உதவியுடன் மளமளவெனக் காரியங்கள் துவங்கின. கந்தளாய் எனும் பெயருடைய நீர்த்தேக்கத்தையும், தம்பலகமலம் பகுதியில் இருந்த வயல்களுக்குத் தண்ணீர் தரும் நீர்ப்பாசனத் திட்டத்தையும் சில நாட்களிலேயே தேவ பூதகணங்களின் உதவியுடன் செய்து முடித்து வைத்தார்கள்.

இதனால்தான் இன்றும் தம்பலகமலம் பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சியுடன் செழிப்பாக உள்ளது. ஆனால் இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டு குளக்கோட்டான் நிறுவிய ஆலயத்தை போர்த்துக்கீசியர்கள் பின்னாளில் வந்து இடித்து நாசப்படுத்தினார்கள். இதனால் ஏற்பட்ட தம்பலகமலம் எனும் இடத்தில் இன்னொரு திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஆகும். இதைப் பற்றி பின்னர் கூறப்பட்டு உள்ளது. குளக்கோட்டனைப் பற்றி குறிப்பு கைலாச புராணம் எனும் நூலில் உள்ளது.

இதைத் தவிர இங்குக் கிடைத்துள்ள பல்வேறு கல்வெட்டுக்களும் அவனது பெருமையைப் பறை சாற்றுகின்றன. இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்த பின் ஆலய மேற்பார்வைக்காகவும், பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்காக பல இனப்பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து வந்து ஆலயப் பகுதியில் குடி அமர்த்தினார்.

பின்பு, தானும் தனது மனைவியான ஆடகசௌந்தரியுடன் அடிக்கடி இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி வழிபட்டுச் சென்றார். அவர்கள் திருகோணமலையையே தலை நகரமாகக் கொண்ட திரிகோணமலை ராஜ்ஜியம் எனும் நகரை உருவாக்கிக் கொண்டு அங்கு ஆண்டு வந்தார்கள். 

நாட்டின் வளத்தை நன்கு கவனிக்க வேண்டும் என்பதினால் அந்தப் பகுதியை வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்து அதை உப ஆளுநர்களைக் கொண்டு நிர்வகித்து வரலானார்.
இப்படி அவர் ஏற்படுத்திய மத்தியப் பகுதியில் இருந்ததே இன்னொரு திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைந்த தம்பலகமலம் எனும் ஊரும் ஆகும்.

தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதலில் படுவது, பார்க்குமிடமெங்கும் காலத்துக்கும் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போலத் தோற்றமளிக்கும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகள்தான். பூத்துக் குலுங்கும் நெற்கதிர்கள், அதைச் சுற்றிலுமே தண்ணீர் தேங்கி நிற்கும் பெரும் குளமாகவும் அந்தப் பிரதேசம் காட்சி தருகிறது.

தான் அழைத்து வந்து குடியேற்றியவர்கள் ஆலய பரிபாலனங்களை நெறிமுறை தவறாமல் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். இவ்விதம் வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஆடகசௌந்தரி கர்பமுற்று ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்த பின், சில காலத்தில் அவள் மரணம் அடைந்து விட்டாள். இதனால் குளக்கோட்டான் வருத்தம் அடைந்தாலும் அவன் மனதில் ஒரு பயம் தோன்றியது. தாம் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ராஜ்யத்தில் உள்ள ஆலயத்தை தன் காலத்துக்குப் பிறகும் நன்கு பராமரிக்க வேண்டுமே என்ற பயமே அது.

அதனால் தான் சோழ மன்னனாக இருந்தாலும், தனக்குக் கீழ் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒரு இளவரசரை இங்கு வரவழைத்து அவருக்கு பூபாலவன்னிபம் என்ற சிறப்புப் பட்டதைத் தந்தான். அவரையும் தன் மகனுடன் சேர்த்து தன் ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்ய ஆட்சியில் அமர்த்திய பின் தான் உலக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஆன்மீக வாழ்வில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில காலம் வாழ்ந்திருந்த அவர் பின்பு மரணத்தைத் தழுவினார்.

ஆனால் இவர் மரணம் அடையவில்லை, மாறாக இறைவனுடன் ஒன்றிக்கலந்து விட்டார் என வாய் மொழியாகக் கூறப்படுகிறது. பெரும் சிவபக்தராகவும், தேவர்களுக்குப் பிரியமானவராக இருந்தவரும், நல்ல உள்ளம் படைத்தவருமான அவர் ஒருநாள் ஆலயத்துக்குள் சென்று கருவறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டாராம். இப்படியாக இதற்கு முன்னர் அவர் பல முறை செய்தது உண்டாம். கருவறையை மூடிக் கொண்டு பூஜை செய்த பின் வெளியே வருவாராம்.

ஒருநாள் அப்படிப்பட்ட நிலையிலேயே கருவறைக்கு உள்ளே சென்றவர் சிவபெருமானிடம் தன்னை அவர் பாதத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டாராம். வெகு நேரம் ஆகியும் குளக்கோட்டான் வெளியில் வரவில்லையே, எந்த விதமான பூஜை செய்யும் ஓசையும் வரவில்லையே என கவலை கொண்டவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு குளக்கோட்டான் காணப்படவில்லையாம். மாறாக ஈசனார் பாதத்தின் கீழ் புத்தம் புதிய தாமரை மலர் மலர்ந்து இருந்ததைக் கண்டிருக்கிறார்கள்.

இவரை ஆலயத்திலுள்ளேயும், வெளியெங்கேயும் காணவில்லை. மூடிய கருவறைக்குள் புத்தம் புதிய தாமரை மலரும் திடீர் எனத் தோன்றிய அதிசயத்தையும் கண்டு யாருக்கும் விளங்கவில்லை.

ஆனால் மூத்த பண்டிதர்கள் மூலமே நடந்த உண்மையை அறிந்து கொண்டார்கள். குளக்கோட்டான் தேவர்களில் ஒருவராகவே இருந்து மானிட உடலை எடுத்து இந்த ஆலயத்தை நிர்மாணிக்க வந்திருந்தார் என்றும், வந்த காரியம் முடிந்த பின் தேவ லோகத்துக்கே சிவன் பாதம் மூலம் சென்று விட்டார் என்றும் அதனால்தான் அவர் உடலை அங்குக் காணவில்லை என்றும் ஒரு நம்பிக்கையாகக் கூறுவர்.

முன்னர் கூறியபடி திரேதா யுகத்தில் ராவணன் இந்த ஆலயப் பகுதியில் வந்திருந்தபோது, மரணம் அடைந்துவிட்ட அவனுடைய தாயாருக்கு கர்மாக்களை அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவின் மூலம் செய்தான். அப்போது விஷ்ணு பகவான் அவனுக்கு அந்தத் தலத்தின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஏழு இடங்களில் தனது தடியினால் தட்டி ஏழு சுனைகளை எழுப்பினார். அதைக் கண்ட ராவணன் வந்துள்ளவர் விஷ்ணு என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு அந்தணருக்கு அத்தனை மகிமை உள்ளதா என வியந்திருக்கிறான்.

பாதாளத்தில் இருந்து எழுந்திருந்த அந்த ஏழு சுனைகளையே விஷ்ணு பகவான் உருவாக்கிய கன்னித் தீர்த்தம் என்கிறார்கள். இதன் கரையில் இறந்து போன ஆத்மாக்களுக்குப் பிண்டம் இடுவது கங்கையில் பிண்டம் வைப்பதை விட மேலும் சிறப்பானதாகும் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம் இங்குதான் ராவணனின் தாயாருக்கு ராவணனைப் பிண்டம் இட வைத்து விஷ்ணு பகவானே அதற்கான கர்மாக்களை ஒரு அந்தணர் உருவில் நடத்தினார் என்பதே.

இந்த ஆலயப் பகுதி முழுவதிலுமே உள்ள அனைத்துக் கட்டிடங்கள், குளங்கள், மண்டபங்கள் எனக் கட்டி முடிக்கப்பட்ட அனைத்துமே தேவ கணங்களுடன் மனிதர்கள் சேர்ந்து செய்தவை என்பதினால் மேலும் இந்த இடம் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்துள்ளன. இந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. அப்போது போர்த்துக்கீசியர் தமது நாட்டை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கிலும், தமது மதத்தைப் பரப்பும் நோக்கிலும், இலங்கை மீது படையெடுத்து வந்தார்கள்.

வந்தவர்கள் கண்களில் திருகோணமலைப் பிரதேசத்து ஆலயம் கண்களில் பட்டுவிட இதைக் கண்டு பொறாமைக் கொண்டார்கள். பொறாமைக் கொண்ட போர்த்துக்கீசியர்கள் என்ன செய்தார்கள்?...

(....... மேலும் அடுத்து, வரும் ஐந்தாவது தொடரில்....)

- கோவை.கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com