ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீப விழா விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தையொட்டி சிவன் கோயில்களில் லட்ச தீப விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் லட்ச தீப விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு மஹா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதற்காக, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோயில் நந்தி மண்டபம் மற்றும் பிரகாரங்களில் நெய் தீபமேற்றி சிவனை வழிபட்டனர். இதனால், கோயில் பிரகாரம், வளாகம் முழுவதும் தீப ஒளியில் மின்னியது.