சென்னை பெருங்களத்தூரை அடுத்த சதானந்தபுரம், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் முதலைகள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து அமைந்துள்ள சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் முதலைக் குட்டிகள் இருப்பது சில ஆண்டுகளுக்கு முன் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வனத் துறையினர் உயிரியல் பூங்கா ஊழியர்களுடன் இணைந்து நீர்நிலைகளை ஆய்வு செய்து முதலைக் குட்டிகளைப் பிடிப்பது வழக்கம். வார்தா புயலில் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய முதலைகள் நீர்நிலைகளில் இனப்பெருக்கம் செய்து குட்டிகளை ஈன்றுள்ளன.
நெடுங்குன்றத்தில் உள்ள நீர்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க வீசிய வலையில் முதலைக் குட்டிகள் சிக்கி உள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் முதலைகள் உள்ளனவா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.