அனைத்து சிவன் கோயில்களிலும் ஆடல்வல்லானான நடராஜ பெருமானுக்கு இன்று ஆனந்த மஹா அபிஷேகம் நடத்தப்படுகிறது.
ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் காணும் எம்பெருமான்
ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை, திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். தேவர்களுக்கு வைகறைப் பொழுது மார்கழி மாதம், காலைப் பொழுது மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை, மாலைப் பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த சாமம் புரட்டாசி என்பர்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் -வைகறை பூஜை, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் -காலைச் சந்தி பூஜை, சித்திரை திருவோணத்தில்-உச்சிக்கால பூஜை, ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் - மாலை (சாயரட்சை) பூஜை, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்-இரண்டாம் கால பூஜை, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில்-அர்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.
சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சிபுரம், தாராசுரம், பட்டீஸ்வரம் உள்பட பிரசித்தி பெற்ற சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு ஆனி திருநீராட்டல் விடிய விடிய பல்வேறு பழங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் வகை வகையான பழங்கள் அபிஷேகத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. சிவபக்தர்கள் அனைவரும் இன்றிரவு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோமாக.
"ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே."
பொருள்: எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும் நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின் நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்; எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடுபேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!