கார்த்திகை மாதப் பிறப்பு வருகிற சனிக்கிழமை (நவ.17) தொடங்குவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வோர் விரதத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து செல்வது வழக்கம். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் தொடங்கும் இந்த விரதம், ஒரு மண்டலம் நீடித்து மகர ஜோதியைக் காணும் நாளில் நிறைவுபெறும். அதுவரை பக்தர்கள் தினமும் காலை மாலை வேளைகளில் குளித்து விரதம் மேற்கொள்வர்.
இதுபோல விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளும் வகையில் கருப்பு, காவி, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்ட வேட்டிகளையும், கழுத்தில் துளசி, சந்தனம், மணி, ருத்ராட்சம் கொண்ட மாலைகளையும் அணிந்துகொள்வர்.
நிகழாண்டில் (நவ.17) சனிக்கிழமை முதல் விரதம் தொடங்குகிறது. இதையொட்டி, விரத்துக்கான பொருள்களை வாங்குவதற்காக துளசி மணி மாலைகள், காவி வேஷ்டிகள் உள்ளிட்ட பொருள்களை ஐயப்ப பக்தர்கள் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள் காதிபவனில் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து காதிபவன் நிர்வாகி ரமேஷ் கூறியது:
காதிபவனில் ஐயப்ப, முருக பக்தர்களுக்கு தேவையான துளசி, ருத்திராட்சம், மணி மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, கேரளாவிலிருந்து மாலை, மும்பையில் இருந்து ஐயப்பன், முருகன் டாலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட வேஷ்டிகள் திருப்பூர், மதுரையில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.