திருவள்ளூர் பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை மாதம் முதல் நாளான சனிக்கிழமை, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள்கள் விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
தமிழ் மாதங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக மாதமான கார்த்திகை இந்த ஆண்டு சனிக்கிழமை பிறந்தது. இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள்கள் கடும் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், திருவள்ளூர் பகுதியில் கார்த்திகை முதல் நாளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வதற்காக தீர்த்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலையிலேயே குவிந்தனர். அந்தப் பகுதியில் உள்ள தலைமை குருசாமி ஒவ்வொரு பக்தருக்கும் மாலை அணிவித்தார்.
இதையொட்டி திருவள்ளூர் பஜார் பகுதியில், சந்தனமாலை, துளசிமாலை, ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான மாலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.