செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த முக்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமையை ஒட்டி, 108 சங்காபிஷேகம நடைபெற்றது.
ஆத்தூர் கிராமத்தில் பழமையான அறம் வளர்த்த நாயகி உடனுறை முக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இது பில்லி, சூனியம், ஏவலைப் போக்கும் தெய்வ பரிகாரத் தலமாகும். பழங்காலத்தில் கார்த்திகை திங்கள்கிழமைமையில் முடவன் ஒருவன் இந்த கிராமத்திற்கு வந்து இக்கோயிலுக்கு தென்புறமாக ஓடும் பாலி ஆற்றில் புனித நீராடி முக்தீஸ்வரப் பெருமானை வணங்கி பூரண உடல்நலம் பெற்று முக்தியடைந்ததாக ஐதீகம்.
எனவே, இங்கு கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு முக்தீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
இக்கோயில் சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையுடையது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு ருத்ர யாகமும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றன. சங்காபிஷேகத்தையொட்டி சங்கு அலங்காரம், ஹோம பூஜை, சங்குகளுக்கு பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர் சிவபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தீபமேற்றி முக்தீஸ்வரரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் உபயதாரர் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர்.