தேசிய போதை ஒழிப்பு தினம்: போதை பழக்கத்தில் இருந்து விடுபட ஜோதிட பரிகாரங்கள்!

நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் 'தேசத் தந்தை' என்று அழைக்கப்படும்
தேசிய போதை ஒழிப்பு தினம்: போதை பழக்கத்தில் இருந்து விடுபட ஜோதிட பரிகாரங்கள்!

நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் 'தேசத் தந்தை' என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். மேலும், மகாத்மா காந்தியடிகளின் கனவை நிறைவேற்றும் நோக்கில் முன்னிட்டு தேசிய போதைப் பொருட்கள் ஒழிப்பு நாளாகவும் அனுஷ்டித்து வருகிறோம்.

தனது வாழ்நாளில் மகாத்மா காந்தி தீவிரமாக வலியுறுத்திய விஷயங்களில் மது விலக்கும் ஒன்று. இந்தியா சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்து விட்டது. மகாத்மாவின் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்றுதான் கூறவேண்டும். மதுவிலக்கைப் பொருத்தவரை அரசை மட்டுமே குறை கூறிக்கொண்டிருப்பது தவறு. குடிப்பவர்களுக்கு சுயகட்டுப்பாடு இருந்தால்தான் மதுப் பழக்கம் மட்டுமின்றி எந்த ஒரு தீய பழக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறையளிக்கபடும் என்பதால் முன்னேற்பாடாக வாங்கி வைத்துக்கொள்ளும் நோக்கில் 'குடிமகன்கள்' பலரும் கடைகளின் அருகே ஏக்கத்துடனும் எப்படியாவது முண்டியடித்தாவது ‘சரக்கை’ வாங்கிவிட வேண்டும் என்று மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுவதைக் காணும்போது மனது பதறுகிறது. தங்கள் குழந்தைகளுக்காக பள்ளியில் வரிசையில் நிற்கவோ, குடும்பத்திற்காக ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கவோ தயங்கும் குடிமகன்கள் மதுபான கடைகளில் வெட்கத்தை விட்டு வரிசையில் நிற்பது காணும்போது வேதனை அதிகரிக்கிறது. அவர்களில் பெண்களும் அடக்கம் என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

போதை பழக்கம்

போதை என்றால் எல்லோரும் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதைப் பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெருங்கேடாக அமைந்து விடுகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்கச் சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகைகளில் முயற்சிக்கின்றன.

ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. போதைக்கு அடிமையானவர்களை நாம் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தைப் போக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உறுதுணையாக இருந்து போதையில்லா பாதைக்கு வழிகாட்டுவது மற்றும் பீடி, சிகரெட், சுருட்டு, குட்கா, பான்மசாலா, பீர், பிராந்தி, புகையிலை மற்றும் மூக்குப்பொடி உள்ளிட்டவற்றால், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கல்லறை அமைத்து, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

குடிப்பழக்கம்

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாகத் தொடங்கிய மதுப் பழக்கம் மெல்ல மெல்லப் பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகிச் சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து, செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. செக்குமாட்டு வாழ்க்கையாக – சம்பாதிப்பது, சந்தோஷத்திற்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது. குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது. இந்தப் போதை உலகம். குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கும். குடிப்பவரைத் திருத்த குடும்பம் படும்பாடு தான் என்ன?. சுழலும் இந்தப் புயலில் சிக்கித் துன்பப்படுபவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று பேதை பெண்களுக்கும், குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான்.

மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.

குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்குக் கூறும் காரணங்கள்

பெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும். 

காதல் தோல்வி
குடும்பத்தில் பிரச்னை
வேலையின்மை
குடிப்பது ஓர் நாகரீகம்
வெளிநாட்டு வாழ்க்கையில் தோன்றும் மன அழுத்தம்
கடன் சுமை
அதிக வேலையால் ஏற்படும் மன அழுத்தம் 

ஆனால் இவை எதுவும் உண்மை காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி அடுத்தவர் தன்னில் பரிதாபப்படும்படி காரணத்தை கூறிக் குடிப்பதை நியாயப்படுத்தி குடியை தொடர்வதற்காகக் கூறப்படும் ஒரு காரணங்கள் இவை. குடிப்பழக்கத்தால் வேதனையை மறக்க முடியும் என்பது தவறு. வேதனை உள்ளவர்கள் குடித்த பின்னும் அதனை நினைத்துப் புலம்பிக்கொண்டு தான் இருப்பார்கள். குடித்தால் நல்ல தூக்கம் வரும் என்று சொல்வதும் தவறு. அவர்கள் இரவில் தூங்கினாலும் விடிய எழும்பும் போது தூங்கிய உணர்வு இருக்காது.

பீர் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று கூறியும் பார்ட்டிகளில் குடித்தால் நாகரீகம் என்று சொல்லியும் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பது, பின்னர் அவர்களில் பலருக்கு அதுவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. சிலர் மதுவில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குடிப்பார்கள். பின்னர் அடிமையாகி விடுவார்கள்.

ஜோதிடத்தில் போதை மற்றும் குடிப்பழக்கத்திற்கான கிரஹ நிலை:
குடி பழக்கத்திற்கான காரக வீடு கால புருஷனுக்கு பன்னிரண்டாம் வீடான மீனம் மற்றும் ஜெனன ஜாதக பன்னிரண்டாம் பாவமும் ஆகும். என்றாலும் விடமுடியாத பழக்கங்களுக்கு காரக வீடு கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் என்றும் குடிப்பழக்கத்திற்கு காரக கிரஹம் செவ்வாய் என்றும் கூறுகிறது பாரம்பரிய ஜோதிடம்.

1. குருவின் பார்வையோ சேர்க்கையோ இன்றி செவ்வாய் கால புருஷனுக்கு பன்னிரெண்டான் மீனத்திலோ அல்லது ஜாதக பன்னிரண்டில் நிற்பது.

2. செவ்வாயும் சந்திரனும் நீர் ராசியில் சேர்க்கை பெற்று நிற்பது.

3. பலமிழந்த சூரியனோ அல்லது சந்திரனோ நீர் ராசியில் நிற்பது அல்லது நெருப்பு ராசியில் மாறி மாறி  நிற்பது. முக்கியமாக விருச்சிகத்தில் நிற்பது.

4. காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நிற்கும் கிரஹங்கள் விடமுடியாத பழக்கத்தை கூறும். எந்த லக்னமாக இருந்தாலும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சியாகிவிட்டால் மதுபழக்கம் கட்டாயம் இருக்கும். 

5. விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி நின்று அதை செவ்வாய் ரிஷபத்தில் நின்று பார்த்துவிட்டால் தீவிர குடிப்பழக்கம் ஏற்படும்.

6. விருச்சிகத்தில் ராகு சந்திரனோடு சேர்ந்து நின்று அதைச் செவ்வாயும் கேதுவும் பார்த்தாலும் விருச்சிகத்தில் ராகுவோடு செவ்வாய் சேர்ந்து நின்று உச்ச சந்திரனும் கேதுவும் பார்த்தாலும் அவர்கள் சாதா தண்ணீரை எல்லாம் பருக மாட்டார்கள். இருபத்துநான்கு மணி நேரமும் சுண்ட "காய்ச்சிய" தண்ணீரைத்தான் குடிப்பார்கள்.

7. மேற்கண்ட கிரஹ நிலையோடு விருச்சிகத்தில் கேது அல்லது சனி நின்றுவிட்டால் அவர்கள் கள்ளு, சுண்டகஞ்சி முதலிய விலை குறைந்த வஸ்துக்களையும் விட மாட்டார்கள்.

8. மேஷம் மற்றும் கன்னி ராசியை லக்னமாக கொண்டு விருச்சிக ராசி எட்டாமிடமாகவோ அல்லது எட்டுக்கு எட்டான மூன்றாகவோ அமைந்து அங்கு சுக்கிரன், நீச சந்திரனுடன் சேர்ந்த ராகு அல்லது கேது மற்றும் செவ்வாய், சனி போன்ற கிரஹங்கள் நின்றுவிட்டால் பெருங்குடிகாரர்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

9. பொதுவாகவே ஜல ராசியான கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் "ஜல" கண்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதை ஊக்குவிக்கும் ராசிகள் ஆகும். இதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய் இவற்றின் சேர்க்கை வக்ரம் பெற்ற குருவுடன் சேர்ந்துவிட்டால் பெருங்குடிமகன்களாக திகழ்வார்கள்.

10. மீனத்தில் உச்சமான சுக்கிரனுடன் குரு பார்வை சேர்க்கை இன்றி செவ்வாய்-சந்திரன், செவ்வாய் ராகு, செவ்வாய்-கேது போன்ற கிரஹங்களின் சேர்க்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு தீவிர குடிப்பழக்கம் இருக்கும். சுக்கிர சேர்க்கையால் சொகுசாக ஏசி பார்களில் உயர்ந்த வகை மது அருந்துவதை விரும்புவார்கள்.

11. மேற்கத்திய ஜோதிடத்தில் குடிப்பழக்கத்திற்கு காரக கிரகமாக நெப்ட்யூனை குறிப்பிடுகின்றனர். ஒருவரது ஜாதகத்தில் நெப்ட்யூன் மீனத்திலோ அல்லது பன்னிரண்டாம் வீட்டிலோ நின்றால் குடிப்பழக்கத்திற்கு ஆளாவர் என்கின்றனர். மேலும் புளுட்டோவின் சேர்க்கையும் குடிப்பழக்கத்தை தெரிவிப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

குடிப்பழக்கத்தை நிறுத்தும் எளியப் பரிகாரங்கள்

1. குடிப்பழக்கத்தை நிறுத்த குருவின் அருள் மிகவும் முக்கியமானதாகும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள் குருஸ்தலங்களுக்கு வியாழக்கிழமைகளில் செல்வது சிறந்த பலனளிக்கும். சென்னையில் இருப்பவர்கள் பாடியில் உள்ள திருவலிதாய நாதர் ஆலயத்திற்கு செல்வது சிறந்த பலனளிக்கும்.

2. குடிப்பழக்கத்திற்கான முக்கிய கிரகமாக செவ்வாய் விளங்குவதால் குரு மற்றும் செவ்வாய் இருவருக்கும் சேர்ந்து ஒரே ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூர் சென்று வருவது குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும்.

3. கர்மவினையின் காரணமாகவே குடிப்பழக்கம் ஏற்படுகிறது. கர்மவினையை தீர்ப்பதில் சித்தர்களின் பங்கு விவரிக்கியலாததாகும். எனவே வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதிகளில் வழிபடுவது சிறந்த பயனளிக்கும் பரிகாரமாகும்.

4. குடிப்பழக்கம் என்பது பஞ்சபூதங்களில் ஜலத்தினால் ஏற்படும் ஒரு தோஷமாகும். எனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் நீரினை குறிக்கும் திருச்சி திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரரை திங்கள் கிழமைகளில் வணங்கிவரக் குடிப்பழக்கம் அறவே நீங்கும்.

5. குடிப்பழக்கம் மூளையில் ஏற்படும் ஒரு உந்துதலாம் ஏற்படுவதாலும், போதையால் பாதிக்கும் முக்கிய உடல் உறுப்பு மூளை என்பதாலும் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களின் அம்சங்கள் நிறைந்த விஷ்ணு ஸ்வரூபமான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவது குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

இந்தக் காந்தி ஜெயந்தி நன்னாளில் குடிப்பழக்கத்தை குறைத்து காந்தியடிகளின் கனவை நிறைவேற்றச் சபதமேற்போம்.

அடுத்தவர் பேச்சை கேட்டுக் குடிக்காதீர்கள், குடிப்பவராக இருந்தால் இனியாவது குடியை நிறுத்துங்கள். சிறிதளவில் குடிப்பவர் தனது குடியை உடனடியாக நிறுத்த முடியும். ஆனால் குடிக்கு அடிமையானவர் அப்படி ஒரு நாளில் நிறுத்துவது ஆபத்து. சிலருக்குப் பாதிப்பை தராவிட்டாலும் பலருக்கு பாதிப்பைத் தரும். எனவே குறைத்து கொண்டு வந்து நிறுத்துவது நல்லது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com