செய்திகள்

உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு என்றாலே பயமா? கணக்க விநாயகரை வணங்குங்க!

அனேகமாக தற்போது எல்லாப் பள்ளி மாணவர்களும் காலாண்டு தேர்வை நோக்கிச் செல்லும் நிலையில் அனைவரது வீடுகளிலும் பிள்ளைகளோடு பெற்றோர்களும் கவலை பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

அதிலும் நிறையக் குழந்தைகளுக்கு கணக்கு பாடத்தை கண்டாலே அலர்ஜியாகிவிடும். உணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும். 

இதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் திடீரென ஒரு வேலைப் பளு அதிகமாகி உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உடல் சோர்வடைந்து விட்டால் ஓய்வெடுக்கலாம். ஆனால் மூளை சோர்வடைந்துவிட்டால் என்ன செய்வது? 

வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், விநாயக சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடும் மிக மிக முக்கியமானது. அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும்.

கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனால் வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கணக்க விநாயகர் கல்வி வரம் அருள்வதில் முக்கியமாகக் கணித பாடத்தில் பயம் கொண்டவர்களுக்கு ஒரு வரப்ரசாதியாக இருக்கிறார். 

கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு பிரஹன்நாயகி ஸமேத ஸ்ரீ பிரஹதீஸ்வரர் ஆலயத்தின் தென்பகுதியில் அரண்மனை கோட்டை வளாகத்தில் குடிகொண்டிருக்கிறார் இந்தக் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி. இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் ஆகும். முதலாம் ராஜேந்திர சோழனால் வாதாபியில் இருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணி முடிவுறும் நிலையில் மாமன்னர் ராஜேந்திர சோழர் கணக்கரை அழைத்தார். அதுவரை ஆலய திருப்பணிக்கு ஆன செலவு கணக்கைக் கேட்டார். திருப்பணியில் தீவிரமாக இருந்ததால் கணக்குகளை குறித்து வைக்கவில்லை. ஆனால் அப்போது அவரால் கணக்குகளை மன்னரிடம் காட்ட முடியவில்லை. மன்னர் கணக்கருக்கு கால அவகாசம் தந்து கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் மரண தண்டனைக்கு ஆளாக நேரும் என எச்சரித்துச் சென்றார்.

கணக்கர் அன்றைய தினம் வாதாபி கணபதியிடம் சென்று முறையிட்டு மன்னரின் மரண தண்டனையில் இருந்து தன்னை காக்குமாறு வேண்டினார். மறுநாள் விநாயகர் கணக்கரின் உருவத்தில் அரண்மனைக்குச் சென்று ஆலய திருப்பணி வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தார். மறுநாள் கணக்கர் பயத்துடன் அரண்மனை சென்று மன்னரைப் பார்க்கும்போது “ நீவிர் கொடுத்த கணக்குகள் மிகவும் சரியாக இருந்தது“ எனக் கூறினார். 

அதற்கு கணக்கர் “நேற்று நான் அரண்மனைக்கு வரவேயில்லை! பிறகு எப்படி நான் கணக்குகளை ஒப்படைக்கமுடியும் எனக் கேட்டார்” பிறகு தான் தெரிந்தது. கணக்கரின் உருவில் வந்தது வாதாபி கணபதிதான் என்று. அது முதல் வாதாபி கணபதி கணக்க விநாயகராகவும் பெயர் பெற்றார்.

தேர்வு நேரப் பயத்திற்கும் கணித பாடத்தின் மீது பயத்திற்கும் காரணமான கிரஹ நிலைகள்:

நமக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க லக்னம் லக்னதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும் ஒருவருக்குப் புத்தி ஒழுங்காக செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். 

1. ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்குக் காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
 
2. குழந்தைகள் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் மிகசிறந்த கல்விமான்களாக விளங்குவர். முக்கியமாக புதன் பலமாக இருந்தால் தான் ஒருவர் கணிதம், ஜோதிடம், தத்துவம் போன்ற விஷயங்களில் சிறந்து விளங்க முடியும்.

3. ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களைச் சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12-ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, தேர்வு நேர சுரம், பயம் ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.

4. ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.

5. கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புத பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும் புத பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

6. தேர்வுக்குப் படிக்கவேண்டும் என நினைத்தாலே சிலருக்கு தூக்கம் வந்துவிடும். புத்தகத்தின் மேல் படுத்துக்கொண்டே தூங்கி விடுவர். இது போன்று இருப்பவர்களுக்கு ஜாதகத்தில் புதன் அஸ்தங்க நிலை, நீச நிலை, லக்னத்திற்க்கு 6/8/12ல் நிற்பது, சனி, மாந்தி அல்லது கேது சேர்க்கை பெறுவது போன்றவை இருக்கும். 

7. ஜாதகத்தில் புதன் ராகு சேர்க்கை பெற்றவர்கள் அதிகமாக மொபைல் போனை உபயோகப்படுத்துவர் மற்றும் புதனோடு சுக்கிர சேர்க்கை பெற்றவர்கள் டீவி, சினிமா எனக் கவனத்தை சிதறவிடுவர். இவர்கள் மொபைல் போன், டீவி மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை சிதறடிக்காமல் படிக்கவேண்டும். 

8. சில பருவ வயதிலிருக்கும் மாணவர்களின் ஜாதகங்களில் புதன் கேது சேர்க்கை, புதன் சுக்கிர சேர்க்கை, புதன் சந்திர சேர்க்கை போன்றவை அமைந்திருந்தால் சேர்ந்து படிக்கிறோம் என ஆரம்பித்து தேவையற்ற பிரச்னைகளில் மாட்டிக்கொள்வார்கள்.

ஞான காரக கேதுவின் அதிதேவதையான விநாயகர் இங்கு மரகத மூர்த்தியாக விளங்குவதால் புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்குபவராக விளங்குகிறார். இங்குள்ள விநாயகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பச்சை திருமேனியாகக் காட்சி தருவது இதற்கு சான்றாகும்.

நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத விநாயக மூர்த்தி தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத விநாயகரை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம், மரகத விநாயகரை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. புதனுக்கு உரிய மரகதத்தை, விநாயகர் வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

கேதுவாலும் புதனாலும் ஏற்படும் அனைத்து தடைகள், தாமதங்கள் களைந்து கல்வி தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர். இத்தனை சிறப்புகள் பெற்ற கணக்க விநாயகரைக் குழந்தைகளுடன் சென்று நாமும் சென்று தரிசித்து கல்வி தடைகள் நீங்கி  நலம் பல பெறுவோமே!

கோயில் பற்றி மேலும் விவரம் அறிய: கண்ணன் ராஜ்  9788202855 அறங்காவலர் குழு 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT