திருப்பதி பிரம்மோற்சவம்: 7-ம் நாளான இன்று சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வருகிறார்.
திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 6-ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
மாலையில் தங்க ரதத்தின் புறப்பாடு நடைபெற்றது. அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஏழுந்தருளினர். மகாலட்சுமியின் அம்சமான தங்க ரதத்தைப் பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். அங்குக் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை சூரியபிரபை வானத்தில் உற்சவ மூர்த்தியாக மாட வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.