திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் காலையில் அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார்.
ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் 6ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் மலையப்ப சுவாமி, அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
அனுமன் அவதாரம்: ராம பக்தன் என்று பெயர் பெற்ற அனுமன் சிறிய திருவடி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள் இரவில் பெரிய திருவடி எனப்படும் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி, 6ஆம் நாள் காலையில் சிறிய திருவடியான அனுமன் வாகனத்தில் அவருக்கு மிகவும் பிரியமான ராமர் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்தார்.
ஊஞ்சல் சேவை: ஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின், மலையப்ப சுவாமியை பட்டு வஸ்திரம், வைர, வைடூரிய, தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனர். அதன்பின் அவருக்கு நைவேத்தியம் சமர்ப்பித்து, சுவாமியை சகஸ்ரதீபாலங்கார மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்தனர். அதன் பின் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அவர்களுக்கு 1008 விளக்குகள் கொண்ட மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து அர்ச்சகர்கள் அனைவரும் இணைந்து வேத பாராயணம் செய்தனர்.
ஊஞ்சல் சேவை முடிந்த பின், மலையப்ப சுவாமிக்கு நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி என 3 வகையான ஆரத்திகள் அளிக்கப்பட்டன. அப்போது இசைக் கலைஞர்கள் பக்தி கீதங்கள், கீர்த்தனைகள் உள்ளிட்டவற்றை இசைத்தனர்.
தங்க ரதம்
பிரம்மோற்சத்தின் 6ஆம் நாள் மாலையில் தங்க ரதத்தின் புறப்பாடு நடைபெற்றது. அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினர். மகாலட்சுமியின் அம்சமான தங்க ரதத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்நபன திருமஞ்சனம்
மலையப்ப சுவாமி நாள்தோறும் காலை, இரவு என மாட வீதியில் வலம் வருவதால் அவருக்கு ஏற்படும் அசதியைப் போக்க, அவருக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பழரசங்கள் உள்ளிட்டவற்றை திருமலை சின்ன ஜீயர் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினர். அப்போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பலவிதமான மலர்கள், உலர்பழங்களால் ஆன மாலை, கிரீடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யானை வாகனம்
திருமலையில் பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் இரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். யானை கம்பீரமான வடிவம் பொருந்தியது. அதில் மலையப்ப சுவாமி வந்தபோது மாடவீதியில் கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.
வாகனச் சேவைகளில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வாகனச் சேவையின் முன் திருமலை ஜீயர்கள் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். வாகனச் சேவையின் பின்னால் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.