பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளில் திருத்தேரில் மலையப்பர் பவனி

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் காலை திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 
தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பிரிவினர்.
தேரோட்ட விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பிரிவினர்.

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் காலை திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 
திருவேங்கடமுடையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றதுடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 8ஆம் நாளான வியாழக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. 
பிரம்மோற்சவத்தின் 7 நாள்களில் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி 8ஆம் நாள் காலை தன் நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார்.
தேரின் மீது வண்ணத் துணியைப் போர்த்தி, மலர் மாலைகளால் அலங்கரித்தனர். தேரை ஆண்களும், பெண்களும் இணைந்து கோவிந்த நாமாவளி சொல்லியபடி வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதியில் கூடியிருந்த பக்தர்கள் தேரில் வலம் வந்த மலையப்ப சுவாமியைக் கண்டு வணங்கி அவருக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்தனர்.
ஸ்நபன திருமஞ்சனம்: தேரில் வலம் வந்த களைப்பைப் போக்க உற்சவ மூர்த்திகளுக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மூலிகை கலந்த வெதுவெதுப்பான வெந்நீருடன், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பழரசங்கள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பலவிதமான மலர்கள், உலர்பழங்களால் ஆன மாலை, கிரீடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
ஊஞ்சல் சேவை: ஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின், மலையப்ப சுவாமியை பட்டு வஸ்திரம், வைர, வைடூரிய, தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனர். அதன்பின் அவருக்கு தூப, தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து, அவர்களை சகஸ்ர தீபாலங்கார மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்தனர். 
அதன் பின் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவர்களுக்கு 1,008 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், ஊஞ்சலில் அமர வைத்து அர்ச்சகர்கள் அனைவரும் சேர்ந்து வேத பாராயணம் செய்தனர்.
ஊஞ்சல் சேவை முடிந்த பின், மலையப்ப சுவாமிக்கு நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி என 3 வகையான ஆரத்திகள் அளிக்கப்பட்டன. அப்போது இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களையும், கீர்த்தனைகளையும் பாடினர்.

குதிரை வாகனத்தில்...

பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி.
பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி.


திருமலையில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் இரவு இறுதியாக குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். கல்கி அவதாரம் என்று கருதப்படும் குதிரை அவதாரத்தில் மன்னர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். திக்விஜயம் செய்து வந்த அவரை வரவேற்கும் விதம் பக்தர்கள் மாடவீதியில் நின்றபடி கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். 
வாகனச் சேவைகளில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வாகனச் சேவைக்கு முன்னால் திருமலை ஜீயர்கள் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாராயணம் செய்தனர். வாகனச் சேவையின் பின்னால் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். வெள்ளிக்கிழமை சக்கரஸ்நான தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com